Powered By Blogger

18 ஜூன் 2014

திருக்கடவூர் காலசம்ஹாரமூர்த்தி பதிகம் - III

வெண்டளை - தனத்தனத்தத் (சந்தம்)

என்று தொழுவேன்? எளியேன்; அளிமுரலும் கொன்றைஅணி தென்கடவூர்க் கோமானஏ! - துன்றும் கனற்பொறிக்கட் பகட்டில்உற்றுக் கறுத்ததெற்குத் திசைக்குள்உக்ரத் தனைச்சினத்திட்(டு) உதைத்தபத்மத் தாள். 1

வெண்டளை - தனத்தனத்தம் (சந்தம்)

தொண்டருடன் கூடித் துதித்(து)இரண்டு கண்ஆரக் கண்டுதொழு வேனோ? கடவூரா! - பண்(டு)ஓர் அமு(து)இருக்கும் சிறுகடத்(து)அன்(ற்) அவதரித்(து) அன்பரைமருட்டும் சமனைஏற்றும் பரிபுரச்செந் தாள். 2

வெண்டளை - தந்ததத்தம் (சந்தம்)

பற்றி பணிந்து பரவ வரம்தருவாய்! கற்றை சடையாய்! கடவூரா! - வெற்றிநெடும் கொண்டல்ஒக்கும் கண்டசத்தம் கொண்(டு)எதிர்த்(து)அங் கண்கறுக்கும் சண்டனைக்கண்(டு) அன்(று)உதைக்கும் தாள். 3

வெண்டளை - தான தானா (சந்தம்)

மேகம் எழுந்ததுபோல் மேல்எழுந்த காலனைக்கண்(டு) ஆகம் தளர்த்துநெஞ்சம் அஞ்சாமுள் - மாகடவூர்ப் பூத நாதா! வேத கீதா! பூவி தாதா தேடு பாதா! மாது பாகா! கால காலா வா! 4

வெண்டளை - தானன தானா (சந்தம்)

அன்(று)அயன்மால் காணா அடிமுடியைக் காண்பதற்குத் தெந்திசைக்கோன் என்னதவம் செய்தானோ? - வென்றிதிகழ் ஆடர வாளா! நீ(று)அணி தோளா! ஆதிரை நாளா! மாதும ணாளா! தோடணி காதா! மாகடவூரா! சொல்! 5

வெண்டளை - த்ந்ததனத் (சந்தம்)

ஆற்றுமோ? நெஞ்சத்(து) அடங்குமோ? கொண்டமையல் கூற்(று)உதைத்த தென்கடவூர்க் கோமானே! - மாற்(று) உயர்பொற் கும்பமுலைத் திங்கள்நுதற் கொந்(து)அளகப் பெண்கொடி மெய்க்(கு) அம்புதொடுத்(து) அங்கஜன்விட் டால். 6

வெண்டளை - தந்தன தந்தம் (சந்தம்)

தென்றல் உலவும் திருக்கடவூர் எம்பெருமான் மன்றல் செறிந்தே மதுஊ(று)உன் - கொன்றைக்க் பொன்பர வும்திண் கொங்கைஇ ரண்டும் புண்பட உந்(து) இன்(பு) அன்புதி ரண்டும் தும்ப(ம்)மி குந்(து)என் பெண்கொடி நெஞ்(சு)அஞ் சும். 7

வெண்டளை - தான தந்தா (சந்தம்)

சுடுமோ? இளம்தென்றல்; தோகையின்மேல் அம்பு படுமோ? மெய் வாதைப் படுமோ? - கடவூரா! நீர்அ ணங்கார் வேணி நம்பா! நீல கண்டா! மேனி யின்பால் ஆர்அ ணங்கார் கால சங்கா ரா! 8 *இப்பதிகத்தில் 3, 6, 8 ஆகிய எண்கள் உள்ள பாக்கள் வெண்டளை பிறழாத பின்முடுகு வெண்பாக்காளாகவே உள்ளன.

வெண்டளை - தனந்த தந்தம் (சந்தம்)

பாலனுக்கா அன்று பக(டு)ஏறி வந்(து)எதிர்த்த காலனுக்குக் காலா! கடவூரா! - மேலோர் கரும்பு கொண்(டு)அங்(கு) எதிர்ந்து நின்(று)அங் கஜன் பொரும்செஞ் சரங்கள் கண்(டு)உண் மருண்டு நெஞ்சம் கலங்கும் என்றன் மான். 9

வெண்டளை - தனன தந்தம் (சந்தம்)

நீதிநெறி வேதியர்கள் நீங்கா மறைபயிலும் ஆதிகட வூரில்உறை அம்மானைப் - பாதம் பரவி அங்கம் புளகுகொண்(டு)எண் படவணங்கும் பொழுது நெஞ்சம் கரவு துஞ்சும் சமனும் அஞ்சும் காண்! 10

திருக்கடவூர் காலசம்ஹாரமூர்த்தி பதிகம் - II

சிவன் அடியர் துர்க்குணம் பெறார்

அந்த ரத்(து)அமரர் மந்த ரத்தைஒலி அலைக டற்றலைநி றுத்திநின்(று) அழலு றக்கடைய அமுத(ம்) முற்றடைய அதன்இ டத்துவிடம் உண்ணல்ஆர் கந்த ரத்திடைக றுப்பி னார்கவுரி கண்க ளித்திடும்உ றுப்பினார் கால காலகட வூரர் கோலம்அது கண்டு தண்டன்இட வல்லபேர் பந்தம்ஆசைஅவ மாண(ம்) நிந்தனை பழிப்(பு)அ சத்திய(ம்)ம னப்பயம் படிறு வஞ்சனைஅ னர்த்த(ம்) மால்கொடுமை பாப(ம்) மீறுகொலை சஞ்சலம் தொந்த(ம்) மோகம்அவி வேகம் மாசுசதி துயர(ம்) மூட(ம்)முழு வயிரம்நீள் தோத கம்*குடிலம் அவகு ணம்தவறு சோக மும்தவிரு வார்களே. 1 *குடிலம் = வஞ்சகம்

சிவன் அடியர் சர்வ போகமும் பெறுவர்

வெங்க யத்(து)உரியர் பங்க யர்க்(கு)அரியர் வேத வாம்பரியர் தீதிலர் *வீதர் +வெம்சுகர்வி நோதர் #கஞ்சுகியர் வெற்றி மால்மகிழும் xஅத்தனார் கங்க ணத்தர்சிவ வெங்க ணத்தவர் **களத்தி சைந்தபெரு நிர்த்தநர் கால காலகட வூரர் கோலம்அது கண்டு தண்டன்இட வல்லபேர் திங்கள் வெண்குடைக விப்ப மும்முரசு சென்று சென்(று)எதிர்ஒ லிப்பஎண் திசைபு ரக்கு(ம்)ம(ன்)னர் கர(ம்)மு கிழ்ப்பைகல் தெவ்வ ரும்திறைஅ ளப்பமேல் மங்கை மார்கவரி கால்அ சைப்பநெடு மகர தோரணவ ளப்பமாய் மத்த யானைமிசை வெற்றி யாளர்என வைய கம்தனில்இ ருப்பரே. 2 *வீதர் = சாந்தர் (வீதர் = சாந்தம்). +வெம் = விரும்பத் தக்க. சுகர் = இன்ப மயமானவர். #கஞ்சுகியர் = பாம்பு அணிந்தவர். xஅத்தன் = அர்த்தன்; பாதியன். **களம் = சபை.

அடியார்கள் ருத்ர சாரூபம் பெறுவார்கள்

திருகு வெள்எயிறு வரிநெ டுங்கயிறு செய்ய குஞ்சியொடு நஞ்(சு)எனச் சீறு கோபமுடன் ஏறு தீபவிழி தெறும்இ டிக்குரல்மு ழக்கியே கரு(ம்)ம லைக்குநிகர் எருமை யிற்பெரிய கால்ம லைக்குவடு போல்வரும் கால காலகட வூரர் கோலம்அது கண்டு தண்டன்இட வல்லபேர் பொரு(ம்)ம ழுப்படைஇ லங்கு செஞ்சடை பொருந்து வெள்விடைதி ருந்துவெண் பூதி ஆகம்ஒரு தோகை பாகம்அழல் பொங்கு நாகமணி கங்கணம் பெருகு கங்கைநதி முடிவி ளங்கிவதி பிஞ்சு மாமதிகொ ழுந்தழல் பெய்த பெற்றிபெறும் ஒற்ற நெற்றிவிழி பெற்(று)இ ருப்பர்அடை யாளமே. 3

அடியார்கள் பெறும் மேலான பதவிகள்

*பெண்இ டும்(பு)அரிபு ரத்தி னார்ஒலி பிறந்தி டும்பரிபு ரத்தினார் பிறைமு டிக்குள்அணி கங்கை யார்மறைசொல் பிரமன் ஒற்றஅணி oகங்கையார் கண்இ சைந்த(து)ஒரு மூன்றி னார்உரிய கயிலை தாழxநக மூன்றினார் கால காலகட வூரர் கோலம்அது கண்டு தண்டன்இட வல்லபேர் மண்அ ளந்தசர ணர்க்கு(ம்) மென்முளரி மாலை ஆபரண ருக்கும்ஓர் வச்சி ரத்(து)இறைவ ருக்கும் எண்திகிரி ++மாதி ரத்துறைவ ருக்கு(ம்)மேல் விண்ண வர்க்கு(ம்)மிகு பண்ண வர்க்கும்உயர் வித்த கர்க்கு(ம்)மதி ஒத்துவாழ் மெய்த்த வத்துநிலை பெற்ற வர்க்கும்அவர் மேல்இ ருப்பர்அடை யாளமே. 4 *பெண் = பார்வதியின். இடும்ப்பு அரி = துன்பம் துடைத்த. புரத்தினார் = (இடப்பாக) சரீரம் உடையவர். oகம் = தலை; கபாலம். கையார் = கரத்தினார். xநகம் ஊன்றினார் எனப் பிரிக்க. ++மாதிரம் = திசை.

அடியவர்கள் மிக நல்லவர்கள்

உரக குண்டலர்நெ ருங்கி விண்(டு)அலர் உறைந்த வண்டுமுரல் கொங்கையார் உத்த ரீகமலர் ஒப்(பு)இ லாதxசிலை ஒத்த நெற்றிமலை மங்கயார் கரக பாலர்திரி சூலர் நீலமணி கண்டர் +புண்டரிக ஆடையார் கால காலகட வூரர் கோலம்அது கண்டு தண்டன்இட வல்லபேர் விரகம் ஆனதில்உ ணங்கி டார்;உலகை வேண்டி ஈனரைவ ணங்கிடார்; வெகுளி ஆனதுசெ றிந்தி டார்; உடலம் வேத நைப்படஅ றிந்திடார்; நரகம் எனப்(து)இனி எய்தி டார்;கருமம் நல்ல(து) அல்ல(து)அவர் செய்திடார்; நமன்இ ருந்ததிசை கண்டி டார்;இறுதி நாளு மே*பருதி ஆவரே. 5 xசிலை = மலை; வில். (இடை நிலைத் தீவகம்). +புண்டரிக ஆடை = புலித்தோல் உடை. *பருதி = ஒளி.

திருக்கடவூர் ஸ்தல புராணம்

துலைநி றுக்கும்ஒரு 1வணிக நுக்கு(ம்)2மது சூத நுக்கு(ம்)மநு நீத்சேர் தொல்பு விக்3கரச நுக்கு(ம்) மிக்கதமிழ் சொல்லு(ம்) ஓர்4புலவ நுக்கு(ம்)மெய்க் 5கலைய நுக்கு(ம்)6மதி 7நடுவ நுக்கு(ம்)8முநி காத லற்கும்இனி(து) அருள்செயும் கால காலகடவூர் மேவிவளர் கயிலை போலவரு(ம்) மயில்அனார் முலைஅ ரும்பிவரு 9வனஜ மேஇனிய மொழியும் இன்பமுறு 10பனசமே முத்தை ஒத்தமணி 11மூர லேஅணிகள் மொய்த்த தோள்கள்இள 12வேரலே சிலைஇ ரண்(டு)அனைய புருவ மேஇரதி தேவி ஒத்த(து)அவர் உருவமே திருமி டற்றழகு சங்க மேஅமுது சிந்து(ம்) 13மானடொபு ஜங்கமே. 6 1. வணிகன் - ரத்நாகரன்; இவன் விசாலாந்த்ரம் என்னும் நகரத்து வைச்யன். விரக்தனாய்த் தல யாத்திரை செய்து வருகையில் திருக்கடவூரைத் தரிசித்து, மூன்று நாட்கள் தங்கிப், பின் நான்காம் நாள் இறந்த போது, தேவ விமானத்தில் ஏறித் துறக்கம் புகுந்தவன்; இது திருக்கடவூர் (வடமொழி)த் தல புராண வரலாறு. மேலும், புறாவின் எடைக்கு சமமாகத் தன் உடலின் தசையை எடுத்துத் தராசில் நிறுத்துப் பருந்துக்குக் கொடுத்த சிபிச் சக்கரவர்த்தியையும் "துலை.... வணிகன்" என்னும் தொடர் குறிக்கலாம்; அம்ருத லிங்கத்தைச் சிபிச் சக்கரவர்த்தி வழிபட்டதாகத் தல புராணம் கூறுகிறது; தவிரக் குங்கிலியக் கலயரிடத்தில் தாலியைப் பெற்று அதன் விலைக்கு உரிய குங்கிலியத்தை விற்ற வியாபாரியையும், சிவனடியார் தந்த கோவணத்தின் எடைக்குத் தன் உடைமைகளை எல்லாம் கொடுத்தும் போதாத நிலையில் தானும் மனைவி, மைந்தனுடன் தராசுத் தட்டில் ஏறித், தன்னையும் தந்த வணிகரான அமர்நீதி நாயனாரையும் பொதுவாகக் குறிக்கலாம். 2. மதுசூதன் - திருமால். 3. அரசன் - தல புராணத்தில் குறிக்கப் பெற்றுள்ள ஹேம கிரீடன், ரத்ன கைடன், பிரமதி ராஜன், சந்த்ர பூஷணன், சிபி என்னும் மன்னர்களுள் எவரேனும் ஒருவரைக் குறிக்கலாம். 4. புலவன் - காரிக் கோவை பாடிய காரி நாயனார்; திருக்கடவூர் உய்ய வந்த தேவ நாயனார் எனினுமாம். 5. கலையன் - குங்கிலியக் கலயர். 6. மதி - சந்திரன். 7. நடுவன் - யமன். 8. முனி காதலன் - ம்ருகண்டு முனிவரின் மகனாம் மார்க்கண்டேயன். 9. வனஜம் - தாமரை. 10. பனசம் - பலாப் பழம். 11. மூரல் - புன்சிரிப்பு. 12. வேரல் - மூங்கில். 13. மான் அடி - மான் குளப்படி; புஜங்கம் - பாம்பு(ப்படம்); இவை இரண்டும் அல்குலுக்கு உவமை.

சிவனுக்கும் பெண்டிர்க்கும் சிலேஷை

விதிசி ரத்தைஅரி பழியர் அஞ்சுகணை வேள்உ ரத்தைஎரி விழியர்மா மேரு விற்கையினர் நேர்க டுக்கையினர் வேள்வி யிற்பணியும் வள்ளலார் கதிர வன்தனது தந்தம் அம்புவியில் உதிர வன்பொடுபு டைத்திடும் கால காலட வூரர் மேவிவளர் கயிலை போலவரு(ம்) மயில்அனார் மதியில் நஞ்சமும்இ ருக்கு மோ?கரிய மஞ்சு மாலிகைக றுக்குமே? வாள்அ ராஅமுதம் ஊறு மோ?கனக வரையி லேபுளக(ம்) மீறுமோ? *விதிர்க லன்பதி ருத்து மோ?இடையில் விலகு(ம்) மேகலைபொ ருத்துமோ? விளங்கு தோட்+கழையி யக்கு மோ?இனிமை விண்ட சொற்++கழைவி ளக்குமே. 7 *விதிர் - சிதறிய. +கழை - மூங்கில். ++கழை - கரும்பு.

கயிலையும் பெண்டிரும்

இகல்அ றிந்துவரு பகையி நார்புரம் எரித்தி டும்கொடிய நகையினார் எரிம ழுப்படைவ லத்தி நார்முடியில் ஏறு(ம்) மீறியஜ லத்தினார் ககன மண்டலமும் உருவி நின்றுவிதி காணொ ணாதஒரு தாணுவார் கால காலகட வூரர் மேவிவளர் கயிலை போலவரு(ம்) மயில்அனார் முகம திக்(கு)உவமை புகலு வார்அளிகள் மொய்கு ழற்(கு)உவமை நுவலுவார் முலையி னுக்(கு)உவமை பகரு வார்இனிய மொழியி னுக்(கு)உவமை மொழிகுவார் நகையி னுக்(கு)உவமை கூறு வார்சரண நடையி னுக்(கு)உவமை பேசுவார் நயம்அ றிந்(து)இளமை சொல்லு வார்எவரும் xநடு(வு)அ றிந்தவர்கள் இல்லையே. 8 xநடு(வு) - இடை; நியாயம்.

முகில் விடு தூது

சிறைஅ(ன்)னத்தரெழு நறைவ நத்த்டர்இவர் தின(ம்)ம நத்திடைதி யானமே செய்து தங்கள்வரம் எய்து தற்(கு)உரிய தேவ தேவர்பரி பூரணர் கறைமி டற்(று)அரையர் அறைக டற்கரையர் கதித ரும்குரவர் வெருவிலார் கால காலகட வூரர் கோலம்அது கண்டு கைதொழுது கொண்டல்காள்! எறிதி ரைப்பறைமு ழக்கி அம்கைதனில் இக்கு வார்சிலைவ ணக்கிநீள் இருத லைக்கும்அளி நாண்இ றுக்கிமுன் எழுந்து மீசையை முறுக்கிவேள் வெறிம லர்க்கணைஎ டுத்த தும்கொடிய வேக மாய்அதுதொ டுத்ததும் மெய்யி னிற்படவி டுத்த தும்செவியில் விண்டு விண்டுசொல வேணுமே. 9

வணு விடு தூது

குயில்மொ ழிப்புணர்மு லைக்க ரும்கண்ஒரு கோதை பாதிஉறை ஜோதியார் கொக்க ரித்துவரு தக்க னாருயிர் குறைத்(து)எ ழுந்திடு(ம்)ம றத்தினார் கயிலை நாதர்கண நாதர் பூதிஅணி காய நாயகமும் ஆயினார் கால காலகட வூரர் கோலம்அது கண்டு கைதொழுது வண்டுகொள்! அயிலி னும்கொடிய அம்பி னால் மதுர ஆர வாரம்இசை வேயினால் அந்த ரம்தனில்அ சைந்து நின்(று)அடரும் அம்பு லிக்கொடிய தீயினால் துயில்து றந்துமெய்ம றந்து வாடிமிகு சோக மோகம்பி றந்துளம் தோத கப்படவும் நான்அ கப்படுதல் சொல்லு வீர்!மதனை வெல்லவே. 10

திருக்கடவூர் காலசம்ஹாரமூர்த்தி பதிகம் - I

சிவபிரான் உருவ வர்ணனை

சுடர்மணிக் குழையும் மலர்க்கரத்(து) உழையும் தும்பிகள் இடைஇடை நுழையும் தும்பைமா லிகையும் வம்புவார் சடையும் துண்டவெண் பிறையு(ம்)முந் நூலும் நடநபங் கயமும் கிரணகங் கணமும் நங்கைபங்(கு) அமர்ந்தசுந் தரமும் நயன(ம்)மூன்(று) உடைய கோலமும் கண்டோர் நமனையும் காணவல் லவரோ? கொடிபல தொடுத்த நெடியமா மணிப்பொற் கோபுரம் *பாரிடம் தொடுத்துக் கொழுந்துவிட்(டு) எழுந்து வான்நில(வு) எறிப்பக் கொண்டல்வந்(து) உலவியே நிலவும் கடிமலர்த் தடமும் சுருதிஓ திடமும் கன்னிமா மாடமும் சூழ்ந்து கநவளம் சிறந்த ++கடவைஅம் பதியாய்! காலனைக் காய்ந்ததற் பரனே! 1 *பாரிடம் = பூதகணம். ++கடவை = திருக்கடவூர்.

யம பயம் அற

தண்டமும் கயிறும் சூலமும் புகைந்த தழல்உமிழ் கண்களும் வளைந்த தந்தமும் சிவந்த குஞ்சியும் கரிய சயிலமே அனையமே நியுமாய் அண்டிய சமனைக் கண்டுள(ம்) மயங்கி அறி(வு)அழிந்(து) இருவிழி களும்பஞ்(சு) அடைந்துவாய் புலர்ந்து மெய்மந்து திடும்போ(து) அம்பிகை தன்னுடன் வருவாய்! வண்டுகள் முரன்று முகைகுறுக்(கு) உடைந்து மதுமழை பொழிந்துதா(து) அளைந்து மடல்விரிந்(து) அலர்ந்து பொன்நிறம் பொதிந்த மன்றல்அம் கொன்றைவார் சடையாய்! கண்டவர் உளமும் கண்ணுமே கவரும் கநதந வநிதையர் நெருங்கும் கநவளம் சிறந்த கடவைஅம் பதியாய்! காலனைக் காய்ந்ததற் பரனே! 2

சிவன் அருள் மகிமை

தநபதி நிகராய்ச் செல்வமே பெறினும் சதமகன் போகமே பெறினும் தாரணி சுமக்கும் சேடனே நிகராய்த் தக்கதோர் அறி(வு)எலாம் பெறினும் அநங்கனை நிகராய் அழகுதான் பெறினும் அருமறைக் கிழவன்நேர் உறினும் ஐய!நின் கடைக்கண் அருள்தவ றியபேர் அம்கைஓ(டு) ஏந்திநின்(று) உழல்வார்; பநககங் கணத்தாய்! அளப்பரும் குணத்தாய்! பார்வதி வாமபா கத்தாய்! பவளநல் நிறத்தாய்! தவளதூ ளிதத்தாய்! பரிபுரம் அலம்புபொற் பதத்தாய்! கநகமும் துகிரும் தரளமும் வயிரக் கலன்களும் நிலம்தொறு(ம்) மிடைந்த கநவளம் சிறந்த கடவைஅம் பதியாய்! காலனைக் காய்ந்ததற் பரனே! 3

சம்சார துக்கம் அற

தந்தையை மனையை ஒக்கலைத் துணையைத் தாயைமென் குதலைவாய்ச் சேயைத் தனத்தையௌ வநத்தை இன்பமோ கனத்தைத் தையல்நல் லார்பெருந் தனத்தை அந்தியும் பகலும் விரும்பிமெய் சோம்பி ஆழ்கடற் படுதுரும்(பு) ஆகி அலக்கழிந் தேனைப் புலப்படத் திருத்தி ஆட்கொள நினைத்திலாய்! அன்றோ? சிந்தைநைந் துருக இன்னிசை படித்துச் சிலம்(பு)ஒலி ஆரவே நடித்துச் செழும்புனல் சடைமேல் கரந்தையை முடித்துத் திருவெணீ(று) உடல்எலாம் வடித்துக் கந்தைக்கோ வணம்தோல் பொக்கணம் தாங்கிக் கபாலம்ஒன்(று) ஏந்திநின் றவனே! கநவளம் சிறந்த கடவைஅம் பதியாய்! காலனைக் காய்ந்ததற் பரனே! 4

தன் சிறுமை கூறல்

வஞ்சகக் கிணறாய்த் துன்பவா ரிதியாய் வறுமைஎன் பதற்(கு)இருப் பிடமாய் மறம்பொதி குடிலாய் அசத்திய விதையாய் மயல்விளை கழனியாய்ப் பாவ சஞ்சித வடிவாய்ச் *சருச்சரைப் புரமாய் சங்கட நோய்க்களஞ் சியமாய்த் தலதடு மாறித் திரியும்என் தனக்(கு)உன் தண்அளி கிடைக்குமோ? அறியேன்; நஞ்சம்உண் பகுவாய்ச் சுடிகைமுள் எயிற்று நகைமணிப் பாந்தள்+அம் சூழ்ந்த நளிர்இளம் பிறையும் மிளிர்செழுஞ் சடையாய்! நங்கையர் முழுமதி முகத்தைக் கஞ்சமென் மலர்கள் கண்டுவாய் ஒடுங்கும் கந்தம்உந் தியதடம் சூழும் கநவளம் சிறந்த கடவைஅம் பதியாய்! காலனைக் காய்ந்ததற் பரனே! 5 *சருச்சரை = ஒப்புரவு இன்மை. +அம் = நீர்; கங்கை.

பிறவி வேண்டாம்

பிரமனும் சலிக்கத் தாயர்சஞ் சலிக்கப் பேதையர் கண்(டு)அசங் கதிக்கப் பிணிகளும் பகைக்க மூப்புவந்(து) அலைக்கப் பிந்தொடர்ந்(து) ஆசைசென்(று) இழுக்கத் தருமனும் வெறுக்க நரகமும் ஒறுக்கத் தாரணி சுமந்துநொந்(து) இளைக்கச் சக(டு)எனச் சுழலும் கறங்(கு)எனக் கொடிய சடலமே எடுக்கநான் இலக்கோ? +குருமணி இமைக்கும் புதுமலர்த் தடத்தில் கோட்டிள(ம்) ++மோட்டுமோ மேதிக் குலங்கள்போய்ப் படிந்து நலம்கிளர் செழும்தேன் குவளைமென்(று) உழக்கிய தோற்றம் கரியமா கடலில் புகுந்துநீர் அருந்தும் காளமே கங்களோ எனலாய்க் கநவளம் சிறந்த கடவைஅம் பதியாய்! காலனைக் காய்ந்ததற் பரனே! 6 *குறு = நிறம். மணி = முத்து. இமைக்கும் = ஒளிவிடும். ++மோடு = வயிறு.

லோபியைப் புகழாதே!

மறுகுவெம் சினத்தர் *தெறும்அவ குணத்தர் வஞ்சகம் பொதிந்தநெஞ் சகத்தர் வழக்கம்ஒன்(று) இல்லாப் பழக்கரும் மூடர் மதிஇலாப் பதிதர்பால் அணுகிப் பொறுமையில் தருமன் நெறியினில் சேடன் புலமையில் குறியமா முனிவன் புரந்தரன் எனவும் நிரந்தரம் புகழ்ந்து பொழு(து)அவம் போக்கினன்; அந்தோ! வெறிமலர்ப் புரசம் சொரிந்துவண்(டு) இனங்கள் மிடைந்துமா முகிலினைக் கிழித்து மேல்இடத்(து) இரவிப் பசும்புர விகளாய் விளங்கியே விண்தல முகட்டைக் கறுவிநின்(று) ஓங்கிச் செறியும்ஐந் தருவுள் கற்பகத் தருவினை ஒப்பாய்! கநவளம் சிறந்த கடவைஅம் பதியாய்! காலனைக் காய்ந்ததற் பரனே! 7 *தெறும் = தண்டம் செய்யும்; கொல்லும்.

பக்தி பூஜை

நெஞ்சகம் குழைந்து பணிவிடைக்(கு) இசைந்து நீறொடு கண்டிகை புனைந்து நிலவுபொற் கோயில் அதைவலம் புரிந்து நெகிழு(ம்)முன் நாள்மலய் எடுத்து வஞ்சமா மயக்கில் மயங்கும்ஐம் புலனாம் மாற்றலர் வலிமையைக் கவர்ந்(து)உன் மலர்ப்பதத்(து) இருத்தி அலக்கணைத் துரத்தி மதிமிகு வாழ்வளித் திடும்"ஓம் ஜும் ஸ:"* எனும்நல் தூயமூன்(று) எழுத்தை சுகிதமாய்க் கொண்(டு)அருச் சனைசெய் தொண்டர்கள் உறவைக் கொண்டுனைப் பணியச் +சுணக்கனாம் எனக்(கு)அருள் புரிவாய்! கஞ்ஜமென் மலய்மீ(து) அஞ்ஜ(ம்)மெய் பசக்கக் கார்மயில் ++ஒகரமாய் நடிக்கும் கநவளம் சிறந்த கடவைஅம் பதியாய்! காலனைக் காய்ந்ததற் பரனே! 8 *'ஓம் ஜும் ஸ:' = இது, 'ம்ருத்யுஞ்ஜய' மந்திரம். +சுணக்கன் = நாய் போல் திரிகின்றவன்; நீசன். ++'ஓ' கரம் ஆய் = 'ஓ' என்னும் எழுத்துப் போல் (தோகை விரித்து)

பரத்தையர் பாசம் அற

மைக்கயல் விழியால் மயக்கிஉள் உருக்கி மஞ்சளால் முகத்தினை மினுக்கி மணிநகை பெருக்கி ஆசைஉண் டாக்கி வளர்இள முலைத்துகில் இறுக்கிப் பக்கல்வந்(து) அமர்ந்து மென்மொழி பகர்ந்து பரவசம் போலமேல் வுழுந்து படி(று)உளம் உணர்ந்தே அசத்தியம் உரைத்துப் பறித்திடக் குறித்தபா வையர்க்காய்த் துக்கசா கரத்தில் அழுந்திநாள் தோறும் தோதகப் பட்டபா தகனைத் துய்யசெங் கமலச் செய்யதாள் இணைக்கே தொண்டுகொண் டால்குறை உறுமோ? கைக்கழங் காடும் திறத்தினை நிகராய்க் கமலமென் மலர்மிசை அறுகாற் களிபாளி சுழலும் கடவைஅம் பதியாய்! காலனைக் காய்ந்ததற் பரனே! 9

சிவ மானச பூஜை

செயல்பணி விடையாய்ச் செப்பல்ஐந் தெழுத்தாய்த் திரிதலே வலம்புரி தலுமாய்ச் சிந்தையின் நினைவே தியானமாய், உண்டு தெவிட்டல்நி வேதனச் சிறப்பாய்த் துயிறல்வந் தனையாய்த் திருவுளத்(து) உவந்து துள்ளுவெள் விடையின்மேல் ஏறித் தொண்டரும் விசும்பில் அண்டரும் காணத் தோகையோ(டு) எனக்குவந்(து) அருள்வாய்! வயல்வரம்(பு) உறைந்த கடைசியர் முகத்தை மதியம்என்(று) அதிசய(ம்) மிகுந்து வரும்பகல் இடத்தும் இரவினும் குவளை வாய்ஒடுங் காமலே விளங்கும் கயல்நெடுந் தடமும் கமுகமும் கமுகைக் காட்டிய கன்னலும் பொதிந்த கநவளம் சிறந்த கடவைஅம் பதியாய்! காலனைக் காய்ந்ததற் பரனே! 10

சித்தர் பாடல்கள் 10 கொங்கணச் சித்தர்

    கொங்கணச் சித்தர் பாடல்கள்


    இவருக்கு கொங்கணர், கொங்கணச் சித்தர், கொங்கண நாயனார், கொங்கணத்தேவர், கொங்கண நாதர் எனப் பல பெயர்களும் உண்டு. இவர்கள் வெவ்வேறானவர்கள்
    என்பாருமுண்டு.

    கொங்கணர் திருவள்ளுவரின் சீடர் என்றும் போகரின் சீடர் என்றும் கூறுகின்றனர். இவர்பெயரால் வைத்திய, இரசவாத, யோக நூல்களும் பாடல்களும் இருக்கின்றன.

    இவர் கி.பி 7ஆம் நூற்றாண்டில் இருந்தவர். கொங்கு நாட்டைச் சேர்ந்தவர். ஆதலின் இப்பெயர் பெற்றார் என்பர்.

    இவர் பெயரில் வழங்கப்படும் பாடல்களில் "வாலைக் கும்மி" என்பது ஒன்று. வாலை என்பது சக்தியின் பெயர். கன்னி என்றும் பொருள். கன்னிப் பெண்ணை முன்நிறுத்தி கும்மி பாடியுள்ளதால் வாலைக்கும்மி என வழங்குகிறது.

    இது இவர் பெயரால் வழங்கினாலும் இவரால் பாடப்பட்டது அன்று. இவர் கருத்துக்களை அமைத்து ஆசிரியர் வீரப் பெருமாளின் மாணாக்கர் ஒருவர் பாடியதாகவும், அவர் வலவேந்திரன் துரைவள்ளல் என்ற சிற்றரசன் காலத்தவர் என்றும் அவன் அஞ்செழுத்துணர்ந்த சைவன் என்றும் வாலைக்கும்மி பாடல் கூறுகின்றது.

    கொங்கணர் பற்றிய கதை ஒன்று உண்டு. கொங்கணர் ஒரு மரத்தின் கீழ் யோகம் செய்து கொண்டிருந்தார். அப்பொழுது மரத்தின் மேல் இருந்த கொக்கு அவர்மீது எச்சம் இட்டது. உடனே
    கொங்கணர் கண்ணை விழித்து அக்கொக்கை பார்த்தார். அது எரிந்து சாம்பலாயிற்று. அதன் பிறகு அவர் ஊருக்குள் வந்து திருவள்ளுவர் மனைவாயிலில் நின்று பிச்சை கேட்டார். வள்ளுவர் மனைவி வாசுகியார் கணவருக்கு உணவு பரிமாறிக் கொண்டிருந்த நேரம். ஆதலால் அவர் பிச்சை கொண்டுவர சிறிது நேரமாயிற்று. நேரங்கடந்து பிச்சை கொண்டுவந்த வாசுகியாரைக் கொங்கணர் சினத்துடன் விழித்து பார்த்தார். உடனை, வாசுகியார் "கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா?" என்று கேட்டார். அஞ்சிய கொங்கணர் வாசுகியைப் பணிந்தார். பின்னர் திருவள்ளுவர் சீடரானார்.

    கொங்கணச் சித்தர் வாலைக் கும்மி

    காப்பு

    விநாயகர் துதி

    பின் முடுகு வெண்பா
    கல்விநிறை வாலைப்பெண் காதலியென் றோதுகின்ற
    செல்வியின்மேற் கும்மிதனைக் செப்புதற்கே - நல்விசய
    நாதனின்சொல் வேதனஞ்சு போதன்மிஞ்சி மானகஞ்ச
    பாதம்வஞ்ச நெஞ்சினில்வைப் போம்.
    1
    கும்மி

    சத்தி சடாதரி வாலைப்பெண் ணாமந்த

    உத்தமிமேற் கும்மிப் பாட்டுரைக்க
    வித்தைக் குதவிய வொற்றைக்கொம் பாம்வாலை
    சித்தி விநாயகன் காப்பாமே.
    2
    சரசுவதி துதி

    சித்தர்கள் போற்றிய வாலைப்பெண் ணாமந்த

    சக்தியின் மேற்கும்மிப் பாட்டுரைக்கத்
    தத்தமித் தோமென ஆடும் சரசுவதி
    பத்தினி பொற்பதங் காப்பாமே.
    3
    சிவபெருமான் துதி

    எங்கும் நிறைந்தவள் வாலைப்பெண் ணாம்மாலின்

    தங்கையின் மேற்கும்மி பாடுதற்குக்
    கங்கை யணிசிவ சம்புவாம் சற்குரு
    பங்கயப் பொற்பாதம் காப்பாமே.
    4
    சுப்பிரமணியர் துதி

    ஞானப்பெண் ணாமருள் சோதிப்பெண் ணாமாதி

    வாலைப்பெண் மேற்கும்மி பாடுதற்கு
    மானைப் பெண்ணாக்கிய வள்ளிக் கிசைந்திடும்
    மால்முரு கேசனும் காப்பாமே.
    5
    விஷ்ணு துதி

    ஆண்டிப்பெண் ணாம்ராச பாண்டிப்பெண் ணாம்வாலை

    அம்பிகை மேற்கும்மி பாடுதற்குக்
    காண்டீபனாம் பணி பூண்டவன் வைகுந்தம்
    ஆண்டவன் பொற்பதங் காப்பாமே.
    6
    நந்தீசர் துதி

    அந்தரி சுந்தரி வாலைப்பெண் ணாமந்த

    அம்பிகை மேற்கும்மி பாடுதற்குச்
    சிந்தையில் முந்திநல் விந்தையாய் வந்திடும்
    நந்தீசர் பொற்பதங் காப்பாமே.
    7

    நூல்

    கும்மி


    தில்லையில் முல்லையி லெல்லையுளாடிய

    வல்லவள் வாலைப்பெண் மீதினிலே
    சல்லாபக் கும்மித் தமிழ்பா டவரும்
    தொல்லைவினை போக்கும் வாலைப்பெண்ணே!
    8
    மாதா பிதாகூட இல்லாம லேவெளி

    மண்ணும் விண்ணுமுண்டு பண்ணவென்று
    பேதை பெண் ணாமுதல் வாலைப்பெண் ணாளென்று
    புகுந்தா ளிந்தப் புவியடக்கம்.
    9
    வேதமும் பூதமுண் டானது வும்வெளி

    விஞ்ஞான சாத்திர மானதுவும்
    நாதமுங் கீதமுண் டானதுவும் வழி
    நான்சொல்லக் கேளடி வாலைப்பெண்ணே.
    10
    மூந்தச் செகங்களுண் டானது வும்முதல்

    தெய்வமுந் தேவருண் டானதுவும்
    விந்தையாய் வாலையுண் டானதுவும் ஞான
    விளக்கம் பாரடி வாலைப்பெண்ணே.
    11
    அரிக்கு முந்தின தவ்வெழுத்தாம் பின்னும்

    அரிக்குள் நின்றதும் அஞ்செழுத்தாம்
    தரிக்கும் முந்தின தஞ்செழுத்தாம் வாசி
    பரிக்குள் நின்றது மஞ்செழுத்தாம்.
    12
    ஆதியி லைந்தெழுத் தாயினாள் வாலைபெண்

    ஐந்தெழுத் துமென்று பேரானாள்;
    நாதியி னூமை யெழுத்தியவள் தானல்ல
    ஞான வகையிவள் தானானாள்.
    13
    ஊமை யெழுத்தே யுடலாச்சு மற்றும்

    ஓமென் றெழுத்தே யுயிராச்சு
    ஆமிந் தெழுத்தை யறிந்துகொண்டு விளை
    யாடிக் கும்மி யடியுங்கடி.
    14
    செகம் படைத்ததும் அஞ்செழுத்தாம் பின்னும்

    சீவன் படைத்ததும் அஞ்செழுத்தாம்
    உகமு டிந்தது மஞ்செழுத்தாம் பின்னும்
    உற்பன மானது மஞ்செழுத்தாம்.
    15
    சாத்திரம் பார்த்த்தாலுந் தானுமென்ன? வேதம்

    தானுமே பார்த்திருந் தாலுமென்ன?
    சூத்திரம் பார்த்தல்லோ ஆளவேணு மஞ்சு
    சொல்லை யறிந்தல்லோ காணவேணும்?
    16
    காணாது கிட்டாதே எட்டாதே அஞ்சில்

    காரிய மில்லையென் றேநினைத்தால்
    காணாதுங் காணலா மஞ்செழுத் தாலதில்
    காரிய முண்டுதியானஞ் செய்தால்.
    17
    ஆயனு மைந்தா மெழுத்துக்குள் ளேயறி

    வாயனு மைந்தா மெழுத்துக்குள்ளே
    வாயனு மைந்தாம் எழுத்துக்குள் ளேயிந்த
    வாலையு மைந்தாம் எழுத்துக்குள்ளே.
    18
    அஞ்செழுத் தானதும் எட்டெழுத்தாம் பின்னும்

    ஐம்பத்தோர் அட்சரந் தானாச்சு
    நெஞ்செழுத் தாலே நிலையா மலந்த
    நிசந்தெ ரியுமோ வாலைப்பெண்ணே!
    19
    ஏய்க்கு தேய்க்கு ஐந்செழுத் துவதை

    எட்டிப் பிடித்துக்கொளிரண் டெழுத்தை
    நோக்கிக்கொள் வாசியை மேலாக வாசி
    நிலையைப் பாரடி வாலைப்பெண்ணே?
    20
    சிதம்பர சக்கரந் தானறிவா ரிந்தச்

    சீமையி லுள்ள பெரியோர்கள்
    சிதம்பர சக்கர மென்றால் அதற்குள்ளே
    தெய்வத்தை யல்லோ அறியவேணும்!
    21
    மனமு மதியு மில்லாவிடில் வழி

    மாறுதல் சொல்லியேயென்ன செய்வாள் ?
    மனமு றுதியும் வைக்கவேணும் பின்னும்
    வாலைக் கிருபையுண் டாகவேணும்.
    22
    இனிவெ ளியினிற் சொல்லா தேயெழில்

    தீமட்டு திந்தவரி விழிக்கே
    கனிமொ ழிச்சியீர் வாருங்கடி கொஞ்சங்
    கருவைச் சொல்லுவேன் கேளுங்கடி.
    23
    ஊத்தைச் சடலமென் றெண்ணாதே இதை

    உப்பிட்ட பாண்டமென் றெண்ணாதே
    பார்த்த பேருக்கே ஊத்தையில் லையிதைப்
    பார்த்துக்கொள் உன்ற னுடலுக்குள்ளே.
    24
    உச்சிக்கு நேராயுண் ணாவுக்கு மேல்நிதம்

    வைத்த விளக்கும் எரியுதடி
    அச்சுள்ள விளக்கு வாலையடி அவி
    யாம லெரியுது வாலைப்பெண்ணே!
    25
    எரியு தேஅறு வீட்டினி லேயதில்

    எண்ணெயில் லையமிழ் தண்ணீரில்லை
    தெரியுது போக வழியுமில்லை பாதை
    சிக்குது சிக்குது வாலைப்பெண்ணே.
    26
    சிலம்பொலி யென்னக் கேட்குமடி மெத்த

    சிக்குள்ள பாதை துடுக்கமடி
    வலம்புரி யச்சங்கமூது மடி மேலே
    வாசியைப் பாரடி வாலைப்பெண்ணே!
    27
    வாசிப் பழக்க மறியவே ணும்மற்றும்

    மண்டல வீடுகள் கட்டவேணும்
    நாசி வழிக்கொண்டு யோகமும் வாசியும்
    நாட்டத்தைப் பாரடி வாலைப்பெண்ணே!
    28
    முச்சுடரான விளக்கி னுள்ளே மூல

    மண்டல வாசி வழக்கத்திலே
    எச்சுடராகி அந்தச் சுடர் வாலை
    இவள்விட வேறில்லை வாலைப்பெண்ணே!
    29
    சூடாமல் வாலை இருக்கிறதும் பரி

    சித்த சிவனுக்குள் ளானதனால்
    வீடாமல் வாசி பழக்கத்தை பாருநாம்
    மேல்வீடு காணலாம் வாலைப்பெண்ணே!
    30
    மேல்வீடு கண்டவன் பாணியடி விண்ணில்

    விளக்கில் நின்றவன் வாணியடி
    தாய்வீடு கண்டவன் ஞானியடி பரி
    தாண்டிக் கொண்டான்பட் டாணியடி.
    31
    அத்தியி லேகரம் பத்தியி லேமனம்

    புத்தியி லேநடு மத்தியிலே
    நெற்றி சதாசிவ மென்றுசொன் னேனுன்றன்
    நிலைமையைப் பாரடி வாலைப்பெண்ணே!
    32
    அழுத்தி லேசொல்லஞ் செழுத்தி லேநானும்

    வழுத்தி னேன்ஞானப் பழத்திலே
    கழுத்தி லேமயேச் வரனு முண்டுகண்
    கண்டு பாரடி வாலைப்பெண்ணே!
    33
    அஞ்சிலே பிஞ்சிலே வஞ்சியரே நிதம்

    கொஞ்சி விளையாடும் வஞ்சியரே
    நெஞ்சிலே ருத்திரன் சூழிருப்பா னவன்
    நேருட னாமடி வாலைப்பெண்ணே!
    34
    தொந்தியி லேநடு பந்தியிலே திடச்

    சிந்தையி லேமுந்தி உன்றனுடன்
    உந்தியில் விட்ணுவுந் தாமிருப் பாரிதை
    உண்மையாய்ப் பாரடி வாலைப்பெண்ணே!
    35
    ஆலத்திலே இந்த ஞாலத்திலே வருங்

    காலத்தி லேயனு கூலத்திலே
    முலத்திலே பிரமன் தானிருந் துவாசி
    முடிக்கிறான் பிண்டம் பிடிக்கிறானே.
    36
    தேருமுண் டைஞ்சூறாம் ஆணியுண்டே அதில்

    தேவரு முண்டுசங் கீதமுண்டே
    ஆருண்டு பாரடி வாலைத்தெய் வம்மதிலே
    அடக்கந் தானடி வாலைப்பெண்ணே!
    37
    ஒன்பது வாயில்கொள் கோட்டையுண் டேஅதில்

    உள்ளே நிலைக்கார ரஞ்சுபேராம்
    அன்புடனே பரிகாரர்கள் ஆறு பேர்
    அடக்கந் தானடி வாலைப்பெண்ணே!
    38
    இந்த விதத்திலே தேகத்திலே தெய்வம்

    இருக்கையில் புத்திக் கறிக்கையினால்
    சந்தோட வாலையைப் பாராமல் மனிதர்
    சாகிற தேதடி வாலைப்பெண்ணே!
    39
    நகார திட்டிப்பே ஆனதனால் வீடு

    வான வகார நயமாச்சு!
    உகார முச்சி சிரசாச்சே இதை
    உற்றுப் பாரடி வாலைப்பெண்ணே!
    40
    வகார மானதே ஓசையாச்சே அந்த

    மகார மானது மாய்கையாச்சே
    சிகார மானது மாய்கையாச்சே இதைத்
    தெளிந்து பாரடி வாலைப்பெண்ணே!
    41
    ஓமென்ற அட்சரந் தானுமுண்டு அதற்குள்

    ஊமை யெழுத்து மிருக்குதடி;
    நாமிந்தெ ழுத்தை யறிந்துகொண் டோ ம்வினை
    நாடிப் பாரடி வாலைப்பெண்ணே!
    42
    கட்டாத காளையைக் கட்டவே ணுமாசை

    வெட்டவே ணும்வாசி யொட்டவேணும்
    எட்டாத கொம்பை வளைக்கவே ணுங்காயம்
    என்றைக் கிருக்குமோ வாலைப்பெண்ணே!
    43
    இருந்த மார்க்க்கமாய்த் தானிருந்து வாசி

    ஏற்காம லேதான டக்கவேணும்
    திரிந்தே ஓடிய லைந்துவெந்து தேகம்
    இறந்து போச்சுதே வாலைப்பெண்ணே!
    44
    பூத்த மலராலே பிஞ்சுமுண்டே அதில்

    பூவில்லா பிஞ்சும் அநேகமுண்டு
    மூத்த மகனாலே வாழ்வுண்டு மற்ற
    மூன்று பேராலே அழிவுமுண்டு!
    45
    கற்புள்ள மாதர் குலம்வாழ்க நின்ற

    கற்பை யளித்தவரே வாழ்க!
    சிற்பர னைப் போற்றி கும்மியடி
    தற்பரனைப் போற்றி கும்மியடி.
    46
    அஞ்சி னிலேரெண் டழிந்ததில் லையஞ்

    சாறிலேயும் நாலொழிந்த தில்லை
    பிஞ்சிலே பூவிலே துஞ்சுவ தாம்அது
    பேணிப் போடலாம் வாலைப்பெண்ணே!
    47
    கையில்லாக் குட்டையன் கட்டிக்கிட்டா னிரு

    காலில்லா நெட்டையன் முட்டிக்கிட்டான்
    ஈயில்லாத் தேனெனத் துண்டுவிட் டானது
    இனிக்கு தில்லையே வாலைப்பெண்ணே!
    48
    மேலூரு கோட்டைக்கே ஆதரவாய் நன்றாய்

    விளக்கு கன்னனூர்ப் பாதையிலே
    காலூரு வம்பலம் விட்டத னாலது
    கடுநடை யடி வாலைப்பெண்ணே!
    49
    தொண்டையுள் முக்கோணக் கோட்டையிலே இதில்

    தொத்திக் கொடிமரம் நாட்டையிலே
    சண்டை செய்துவந்தே ஓடிப்போனாள் கோட்டை
    வெந்து தணலாச்சு வாலைப்பெண்ணே!
    50
    ஆசை வலைக்குள் அகப்பட்டதும் வீடு

    அப்போதே வெந்தே அழிந்திட்டதும்
    பாச வலைவந்து மூடியதும் ஈசன்
    பாதத்தை போற்றடி வாலைப்பெண்ணே!
    51
    அன்ன மிருக்குது மண்டபத்தில் விளை

    யாடித் திரிந்தே ஆண்புலியும் அங்கே
    இன்ன மிருக்குமே யஞ்சு கிளியவை
    எட்டிப் பிடிக்குமே மூன்று கிளியடி வாலைப்பெண்ணே.
    52
    தோப்பிலே மாங்குயில் கூப்பிடு தேபுது

    மாப்பிள்ளை தான்வந்து சாப்பிடவும்
    ஏய்க்கு மிப்படி யஞ்சா றாந்தைஇருந்து
    விழிப்பது பாருங்கடி வாலைப்பெண்ணே.
    53
    மீனு மிருக்குது தூரணி யிலிதை

    மேய்ந்து திரியுங் கலசாவல்
    தேனு மிருக்குது போரையிலே யுண்ணத்
    தெவிட்டு தில்லையே வாலைப்பெண்ணே!
    54
    காக்கை யிருக்குது கொம்பிலே தான்கத

    சாவி லிருக்குது தெம்பிலேதான்
    பார்க்க வெகுதூர மில்லை யிதுஞானம்
    பார்த்தால் தெரியுமே வாலைப்பெண்ணே!
    55
    கும்பி குளத்திலே யம்பல மாமந்தக்

    குளக்க ருவூரில் சேறுமெத்த
    தெம்பிலிடைக் காட்டுப் பாதைக ளாய்வந்து
    சேர்ந்து ஆராய்ந்துபார் வாலைப்பெண்ணே!
    56
    பண்டுமே ஆழக் கிணற்றுக்குள் ளேரெண்டு

    கெண்டை யிருந்து பகட்டுதடி
    கண்டிருந்து மந்தக் காக்கையுமே அஞ்சி
    கழுகு கொன்றது பாருங்கடி!
    57
    ஆற்றிலே அஞ்சு முதலைய டியரும்

    புற்றிலே ரண்டு கரடியடி
    கூற்றுனு மூன்று குருடன டிபாசங்
    கொண்டு பிடிக்கிறான் வாலைப்பெண்ணே!
    58
    முட்டை யிடுகு தொருபற வைமுட்டை

    மோசம் பண்ணு தொருபறவை
    வட்டமிட் டாரூர் கண்ணியி லிரண்டு
    மானுந் தவிக்குது வாலைப்பெண்ணே!
    59
    அட்டமா விண்வட்டப் பொட்டலி லேரண்டு

    அம்புலி நிற்குது தேர் மேலே
    திட்டமாய் வந்து அடிக்குதில் லைதேகம்
    செந்தண லானதே வாலைப்பெண்ணே!
    60
    முக்கோண வட்டக் கிணற்றுக்குள்ளே மூல

    மண்டல வாசிப் பழக்கத்திலே
    அக்கோண வட்டச் சக்கரத்தில் வாலை
    அமர்ந்தி ருக்கிறாள் வாலைப்பெண்ணே!
    61
    இரண்டு காலாலொரு கோபுரமாம் நெடு

    நாளா யிருந்தேஅமிழ்ந்து போகும்
    கண்டபோ துகோபு ரமிருக்கும் வாலை
    காணவு மொட்டாள் நிலைக்கவொட்டாள்.
    62
    அஞ்சு பூதத்தை யுண்டுபண்ணிக் கூட்டி

    ஆரா தாரத்தை யுண்டுபண்ணிக்
    கொஞ்சு பொண்ணாசை யுண்டுபண்ணி வாலை
    கூட்டுகிறாள் காலனை மாட்டுகிறாள்.
    63
    காலனைக் காலால் உதைத்தவளாம் வாலை

    ஆலகா லவிட முண்டவளாம்
    மாளாச் செகத்தைப் படைத்த வளாமிந்த
    மானுடன் கோட்டை இடித்தவளாம்.
    64
    மாதாவாய் வந்தே அமுதந்தந்தாள் மனை

    யாட்டியாய் வந்து சுகங்கொடுத்தாள்
    ஆதரவாகிய தங்கையானாள் நமக்
    காசைக் கொழுந்தியு மாமியானாள்.
    65
    சிரித்து மெல்லப் புரமெரித் தாள்வாலை

    செங்காட்டுச் செட்டியைத் தானுதைத்தாள்
    ஒருத்தி யாகவே சூரர்தமை வென்றாள்
    ஒற்றையாய்க் கஞ்சனைக் கொன்று விட்டாள்.
    66
    இப்படி யல்லொ இவள்தொழி லாமிந்த

    ஈனா மலடி கொடுஞ்சூலி
    மைப்படுங் கண்ணியர் கேளுங்கடி அந்த
    வயசு வாலை திரிசூலி.
    67
    கத்தி பெரிதோ உறைபெரிதோ விவள்

    கண்ணு பெரிதோ முகம் பெரிதோ
    சத்தி பெரிதோ சிவன் பெரிதோ நீதான்
    சற்றே சொல்லடி வாலைப்பெண்ணே!
    68
    அன்னம் பெரிதல்லால் தண்ணீர் பெரிதல்ல

    அப்படி வாலை பெரிதானால்
    பொன்னு பெரிதல்லால் வெள்ளி பெரிதல்ல
    பொய்யாது சொல்கிறேன் கேளுங்கடி.
    69
    மாமிச மானால் எலும்புண்டு சதை

    வாங்கிஓடு கழன்று விடும்
    ஆமிச மிப்படிச் சத்தியென்றே விளை
    யாடிக் கும்மி அடியுங்கடி.
    70
    பண்டு முளைப்ப தரிசியே யானாலும்

    விண்டுமி போனால் விளையாதென்று
    கண்டுகொண்டு முன்னே அவ்வை சொன்னாளது
    உண்டோ இல்லையோ வாலைப்பெண்ணே!
    71
    மண்ணு மில்லாமலே விண்ணுமில்லை கொஞ்சம்

    வாசமில் லாமலே பூவுமில்லை
    பெண்ணு மில்லாமலே ஆணுமில் லையிது
    பேணிப் பாரடி வாலைப்பெண்ணே!
    72
    நந்த வனத்திலே சோதியுண்டு நிலம்

    நத்திய பேருக்கு நெல்லுமுண்டு
    விந்தையாய் வாலையைப் பூசிக்க முன்னாளில்
    விட்ட குறைவேணும் வாலைப்பெண்ணே!
    73
    வாலையைப் பூசிக்கச் சித்தரானார் வாலைக்

    கொத்தாசை யாய்ச்சிவ கர்த்தரானார்
    வேலையைப் பார்த்தல்லோ கூலிவைத்தா ரிந்த
    விதந்தெ ரியுமோ வாலைப்பெண்ணே!
    74
    வாலைக்கு மேலான தெய்வமில்லை மானங்

    காப்பது சேலைக்கு மேலுமில்லை
    பாலுக்கு மேலான பாக்கியமில்லை வாலைக்
    கும்மிக் மேலான பாடலில்லை.
    75
    நாட்டத்தைக் கண்டா லறியலாகு மந்த

    நாலாறு வாசல் கடக்கலாகும்
    பூட்டைக் கதவைத் திறக்கலா கும்மிது
    பொய்யல்ல மெய்யடி வாலைப்பெண்ணே!
    76
    ஆணும் பெண்ணும்கூடி யானதால் பிள்ளை

    ஆச்சுதென் றேநீரும் பேசுகின்றீர்
    ஆணும் பெண்ணுங்கூடி யானதல்லோ பேதம்
    அற்றொரு வித்தாச்சு வாலைப்பெண்ணே!
    77
    இன்றைக் கிருப்பதும் பொய்யல்ல வேவீடே

    என்வாழ்க்கை யென்பதும் பொய்யல்லவே
    அன்றைக் கெழுத்தின் படிமுடியும் வாலை
    ஆத்தாளைப் போற்றடி வாலைப்பெண்ணே!
    78
    வீணாசை கொண்டு திரியாதே இது

    மெய்யல்ல பொய்வாழ்வு பொய்க்கூடு
    காணாத வாலையைக் கண்டுகொண்டால் காட்சி
    காணலாம் ஆகாயம் ஆளலாமே.
    79
    பெண்டாட்டி யாவதும் பொய்யல்லவோ பெற்ற

    பிள்ளைக ளாவதும் பொய்யல்லவோ?
    கொண்டாட்ட மானதகப்பன் பொய்யே முலை
    கொடுத்த தாயும் நிசமாமோ?
    80
    தாயும் பெண்டாட்டியும் தான்சரி யேதன்யம்

    தாமே இருவருந் தாங்கொடுத்தார்
    காயும் பழமுஞ் சரியாமோ உன்றன்
    கருத்தைப் பார்த்துக்கொள் வாலைப்பெண்ணே!
    81
    பெண்டாட்டி மந்தைமட்டும் வருவாள் பெற்ற

    பிள்ளை மசானக் கரையின் மட்டும்
    தொண்டாட்டுத் தர்மம் நடுவினிலே வந்து
    சேர்ந்து பரகதி தான்கொடுக்கும்.
    82
    பாக்கியமும் மகள் போக்கியமும் ராச

    போக்கியமும் வந்த தானாக்கால்
    சீக்கிரந் தருமஞ் செய்யவேண்டும் கொஞ்சந்
    திருப்ப ணிகள்மு டிக்கவேண்டும்.
    83
    திருப்பணி களைமுடித் தோரும் செத்துஞ்

    சாகாத பேரி லொருவரென்றும்
    அருட் பொலிந்திடும் வேதத்தி லேயவை
    அறிந்து சொன்னாளே வாலைப்பெண்ணே!
    84
    மெத்தை தனிலே படுத்திருந் துநாமும்

    மெல்லிய ரோடு சிரிக்கும்போது
    யுத்தகாலன் வந்துதான் பிடித்தால் நாமும்
    செத்த சவமடி வாலைப்பெண்ணே!
    85
    ஏழை பனாதிக னில்லையென்றால் அவர்க்கு

    இருத்தால் அன்னங் கொடுக்க வேண்டும்
    நாளையென்று சொல்ல லாகாதே என்று
    நான்மறை வேத முழங்குதடி.
    86
    பஞ்சை பனாதி யடியாதே அந்தப்

    பாவந் தொலைய முடியாதே
    தஞ்சமென்றோரைக் கெடுக்காதே யார்க்கும்
    வஞ்சனை செய்ய நினையாதே.
    87
    கண்டதுங் கேட்டதுஞ் சொல்லாதே கண்ணில்

    காணாத வுத்தரம் விள்ளாதே
    பெண்டாட்டிக் குற்றது சொல்லாதே பெற்ற
    பிள்ளைக் கிளப்பங் கொடுக்காதே.
    88
    சிவன்ற னடியாரை வேதியரை சில

    சீர்புல ஞானப் பெரியோரை
    மவுன மாகவும் வையாதே அவர்
    மனத்தை நோகவும் செய்யாதே.
    89
    வழக்க ழிவுகள் சொல்லாதே கற்பு

    மங்கையர் மேல்மனம் வையாதே
    பழக்க வாசியைப் பார்த்துக்கொண் டுவாலை
    பாதத்தைப் போற்றடி வாலைப்பெண்ணே!
    90
    கூடிய பொய்களைச் சொல்லாதே பொல்லாக்

    கொளைக ளவுகள் செய்யாதே
    ஆடிய பாம்பை யடியா தேயிது
    அறிவு தானடி வாலைப்பெண்ணே!
    91
    காரிய னாகினும் வீரியம் பேசவும்

    காணா தென்றவ்வை சொன்னாளே
    பாரினில் வம்புகள் செய்யாதே புளிப்
    பழம்போ லுதிர்த்து விழுந்தானே.
    92
    காசார் கள்பகை செய்யா தேநடுக்

    காட்டுப் புலிமுன்னே நில்லாதே
    தேசாந்தி ரங்களுஞ் செல்லா தேமாய்கைத்
    தேவடி யாள்தனம் பண்ணாதே!
    93
    தன்வீடி ருக்க அசல்வீடு போகாதே

    தாயார் தகப்பனை வையாதே
    உன்வீட்டுக் குள்ளேயே யூக மிருக்கையில்
    ஓடித் திரிகிறாய் வாலைப்பெண்ணே!
    94
    சாதி பேதங்கள் சொல்லுகிறீர் தெய்வம்

    தானென் றொருவுடல் பேதமுண்டோ ?
    ஓதிய பாலதி லொன்றாகி யதிலே
    உற்பத்தி நெய்தயிர் மோராச்சு.
    95
    பாலோடு முண்டிடு பூனையு முண்டது

    மேலாக காணவுங் காண்பதில்லை
    மேலந்த ஆசையைத் தள்ளிவிட் டுள்ளத்தில்
    வேண்டிப் பூசையைச் செய்திடுங்கள்.
    96
    கோழிக் காறுகாலுண் டென்றுசொன்னேன் கிழக்

    கூனிக் மூன்றுகா லென்றுசொன் னேன்
    கூனிக்கிரண் டெழுத்தென்று சொன்னேன் முழுப்
    பானைக்கு வாயில்லை யென்றுசொன்னேன்.
    97
    ஆட்டுக் கிரண்டுகா லென்றுசொன் னேன்நம்

    பானைக்குப் பானைக்குநிற்கு மேல்சூல்
    மாட்டுக்கு காலில்லை யென்றுசொன்னேன் கதை
    வகையைச் சொல்லடி வாலைப்பெண்ணே!
    98
    கோயிலு மாடும் பறித்தவ னுங்களறிக்

    கூற்று மேகற் றிருந்தவனும்
    வாயில்லாக் குதிரை கண்டவனும் மாட்டு
    வகை தெரியுமோ வாலைப்பெண்ணே!
    99
    இத்தனை சாத்திரஞ் தாம்படித்தோர் செத்தார்

    என்றா லுலகத்தோர் தாம்சிரிப்பார்
    செத்துப் போய்கூட கலக்கவேண்டும் அவன்
    தேவர்க ளுடனே சேரவேண்டும்.
    100
    உற்றது சொன்னாக்கா லற்றது பொருந்தும்

    உண்டோ உலகத்தில் அவ்வைசொன்னாள்
    அற்றது பொருந்து முற்றது சொன்னவன்
    அவனே குருவடி வாலைப்பெண்ணே!
    101
    பூரணம் நிற்கும் நிலையறியான் வெகு

    பொய்சொல்வான் கோடி மந்திரஞ்சொல்வான்
    காரணகுரு அவனு மல்ல இவன்
    காரியகுரு பொருள் பறிப்பான்.
    102
    எல்லா மறிந்தவ ரென்றுசொல்லி இந்தப்

    பூமியி லேமுழு ஞானியென்றே
    உல்லாச மாக வயிறு பிழைக்கவே
    ஓடித் திரிகிறார் வாலைப்பெண்ணே!
    103
    ஆதிவா லைபெரி தானா லும்மவள்

    அக்காள் பெரிதோ? சிவன் பெரிதோ
    நாதிவா லைபெரி தானாலும் அவள்
    நாயக னல்ல சிவம்பெரிது.
    104
    ஆயுசு கொடுப்பாள் நீரிழி வுமுதல்

    அண்டாது மற்ற வியாதியெல்லாம்
    பேயும் பறந்திடும் பில்லிவி னாடியில்
    பத்தினி வாலைப்பெண் பேரைச்சொன்னால்.
    105
    நித்திரை தன்னிலும் வீற்றிருப்பா ளெந்த

    நேரத்தி லும்வாலை முன்னிருப்பாள்
    சத்துரு வந்தாலும் தள்ளிவைப்பாள் வாலை
    உற்றகா லனையும் தானுதைப்பாள்.
    106
    பல்லாயி ரங்கோடி யண்டமுதல் பதி

    னாங்கு புவனமும் மூர்த்திமுதல்
    எல்லாந் தானாய்ப் படைத்தவளாம் வாலை
    எள்ளுக்கு ளெண்ணைய்போல நின்றவளாம்.
    107
    தேசம் புகழ்ந்திடும் வாலைக்கும்மித் தமிழ்

    செய்ய எனக்குப தேசஞ்செய்தாள்
    நேசவான் வீரப் பெருமாள் குருசாமி
    நீள்பதம் போற்றிக்கொண் டாடுங்கடி.
    108
    ஆறு படைப்புகள் வீடுகடை சூத்ர

    அஞ்செழுத் துக்கும் வகையறிந்து
    கூறுமுயர் வல வேந்திரன் துரைவள்ளல்
    கொற்றவன் வாழக்கொண் டாடுங்கடி.
    109
    ஆடுங்கள் பெண்டுகள் எல்லோரு மந்த

    அன்பான கொங்கணர் சொன்னதமிழ்
    பாடுங்கள் சித்தர்கள் எல்லோரும் வாலை
    பாதத்தைப் போற்றிக் கொண்டாடுங்கடி.
    110
    சித்தர்கள் வாழி சிவன்வா ழிமுனி

    தேவர்கள் வாழி, ரிஷிவாழி,
    பத்தர்கள் வாழி, பதம்வா ழிகுரு
    பாரதி வாலைப்பெண் வாழியவே!

சித்தர் பாடல்கள் 9 இடைக்காட்டுச் சித்தர்


    இடைக்காட்டுச் சித்தர் பாடல்கள்


    இடைக்காடு என்னும் ஊரினர். இடையர் குடியிலே பிறந்தவர். இதனால் இடைக்காடுச் சித்தர் எனப் பெயர் பெற்றார். இடைக்காடு - முல்லை நிலம். இங்கு ஆடு மாடு மேய்ப்பவர் - இடையர் - கோனார் எனப்படுவர். இக்கோனாரையும் ஆடுமாடுகளையும், முன்னிறுத்தி பாடியதால் இப்பெயர் பெற்றார் என்பர்.

    சங்கபுலவர்களிலே இடைக்காடனார் என்று ஒருவர் உண்டு. இவர் பாடல்கள் நற்றிணை, குறுந்தொகை, அகநானூறு முதலிய சங்க நூற்களில் உள்ளன. திருவள்ளுவ மாலையிலும் ஒரு பாடல் உள்ளது. திருவிளையாடல் புராணத்திலே இவரைப் பற்றிய குறிப்பு உள்ளது. ஊசிமுறி என்றொரு நூல் இவரால் பாடபட்டதாகப் பழைய உரைகளினால் அறியக் கிடக்கிறது. ஆனால் சங்ககால புலவரும் இடைக்காட்டுச் சித்தரும் வேறு வேறானவர்.

    இவர் கொங்கணரின் சீடர் என்றும் சித்தர்கள் காலம் எனப்படும் கி.பி 10-15 ஆம் நூற்றாண்டினர் என்றும் கூறுகின்றனர்.

      "தாந் திமிதிமி தந்தக் கோனாரே
      தீந் திமிதிமி திந்தக் கோனாரே
      ஆனந்தக் கோனாரே - அருள்
      ஆனந்தக் கோனாரே"
    எனப் பாடுவோரும் கேட்போரும் குதித்தாடும் இந்தப் பாடல்கள் ஆசை என்னும் பசுவையும் சினம் என்னும் விஷப்பாம்பையும் அடக்கி விட்டால் முத்தி வாய்த்ததென்று எண்ணடா தாண்டவக்கோனே என்று கூறும் சிறப்புடையன.

    இவர் ஆடுமாடுகள் மேய்த்துக் கொண்டிருக்கும் போது இவரிடம் சித்தர் ஒருவர் வந்து பால் கேட்க, இவர் பால் கறந்து கொடுக்கப், பருகிய சித்தர் மனமகிழ்ந்து, இவர் அனைத்து சித்துக்களும் அடையும்படி செய்து சென்றதனால் இவர் சித்தர் ஆனார் என்பர்.

    ஒருமுறை நாட்டில் கொடிய பஞ்சம் ஏற்பட்டபோது இவர் உணவின்றித் தவித்த ஆடுமாடுகளைக் காப்பாற்றியதோடு, மழை பெய்வித்துப் பஞ்சத்ததைப் போக்கினார் என்றும் கதை வழங்குகிறது.
    --

    இடைக்காட்டுச் சித்தர் பாடல்கள்

    காப்பு

    கலிவிருத்தம்

    ஆதி யந்தமில் லாதவ னாதியைத்
    தீது றும்பவம் தீப்படு பஞ்சுபோல்
    மோது றும்படி முப்பொறி யொத்துறக்
    காதலாகக் கருத்திற் கருதுவோம்.

    தாண்டவராயக் கோனார் கூற்று

    கண்ணிகள்

    எல்லா உலகமும் எல்லா உயிர்களும்
    எல்லா பொருள்களும் எண்ணரிய
    வல்லாளன் ஆதிபரம சிவனது
    சொல்லால் ஆகுமே கோனாரே.
    1
    வானியல் போல் வயங்கும் பிரமமே
    சூனியம் என்றறிந்து ஏத்தாக்கால்
    ஊனியல் ஆவிக்கு ஒருகதி இல்லையென்று
    ஓர்ந்து கொள்ளுவீர் நீர் கோனாரே.
    2
    முத்திக்கு வித்தான மூர்த்தியைத் தொழுது
    முத்திக்கு உறுதிகள் செய்யாக்கால்
    சித்தியும் பத்தியும் சத்தியும் முத்தியும்
    சேரா வாகுமே கோனாரே.
    3
    தொல்லைப் பிறவியின் தொந்தமுற்ற அறவே
    சோம்பலற்றுத் தவஞ் செய்யாக்கால்
    எல்லையில் கடவுள் எய்தும் பலம் உமக்கு
    இல்லையென்று எண்ணுவீர் கோனாரே.
    4
    ஆரண மூலத்தை அன்புட னேபர
    மானந்தக் கோலத்தைப் பண்புடனே
    பூரணமாகவே சிந்தித்து மெய்ஞ்ஞானப்
    போதத்தைச் சார்ந்திரும் கோனாரே.
    5
    காலா காலங் கடந்திடும் சோதியைக்
    கற்பனை கடந்த அற்புதத்தை
    நூலார் பெரியவர் சொன்னநுண் பொருளை
    நோக்கத்திற் காண்பது கோனாரே.
    6
    சொல்லருஞ் சகள நிட்களம் ஆனதைச்
    சொல்லினாற் சொல்லாமல் கோனாரே
    அல்லும் பகலும் அகத்தில் இருந்திடில்
    அந்தகன் கிட்டுமோ கோனாரே.
    7
    சூரியன் வாள்பட்ட துய்ய பனிகெடும்
    தோற்றம்போல் வெவ்வினை தூள்படவே
    நாறி இடப்பாகன்தாள் நெஞ்சிற் போற்றியே
    நற்பதி சேர்ந்திடும் கோனாரே.
    8
    மும்மலம் நீக்கிட முப்பொறிக்கு எட்டாத
    முப்பாழ் கிடந்ததாம் அப்பாழைச்
    செம்மறி யோட்டிய வேலை யமயத்தும்
    சிந்தையில் வைப்பீரே கோனாரே.
    9
    பஞ்ச விதமாய்ச் சஞ்சலம் பறக்கப்
    பற்றற்று நின்றதைப் பற்றி அன்பாய்
    நெஞ்சத்து இருத்தி இரவு பகலுமே
    நேசித்துக் கொள்ளுவீர் கோனாரே.
    10

    நாராயணக் கோனார் கூற்று

    (தரவு கொச்சகம்)

    சீரார் சிவகொழுந்தைத் தெள்ளமுதைச் செந்தேனைப்
    பாராதி வான்பொருளைப்பஞ்ச உரு ஆனஒன்றைப்
    பேரான விண்ணொளியைப் பேரின்ப வாரிதியை
    நேராக எந்நாளும் நெஞ்சுஇருத்தி வாழ்வேனே.
    11
    கண்ணுள் கருமணியைக் கற்பகத்தைக் காஞ்சனத்தைப்
    பெண்ணுருவப் பாதியினைப் பேசரிய முப்பொருளை
    விண்ணின் அமுதை விளக்கொளியை வெங்கதிரைத்
    தண்ணளியை உள்ளில் வைத்துசாரூபஞ் சாருவனே.
    12
    கண்ணிகள்

    மனமென்னும் மாடு அடங்கில் தாண்டவக்கோனே - முத்தி
    வாய்த்ததென்று எண்ணேடா தாண்டவக்கோனே
    13
    சினமென்னும் பாம்பு இறந்தால் தாண்டவக்கோனே - யாவும்
    சித்தியென்றே நினையேடா தாண்டவக்கோனே
    14
    ஆசையெனும் பசுமாளின் தாண்டவக்கோனே - இந்த
    அண்டமெல்லாம் கண்டறிவாய் தாண்டவக்கோனே
    15
    ஓசையுள் அடங்குமுன்னம் தாண்டவக்கோனே - மூல
    ஓங்காரங் கண்டறிநீ தாண்டவக்கோனே
    16
    மூலப் பகுதியறத் தாண்டவக்கோனே - உள்ளம்
    முளைத்தவேர் பிடுங்கேடா தாண்டவக்கோனே
    17
    சாலக் கடத்தியல்பு தாண்டவக்கோனே - மலச்
    சாலென்றே தேர்ந்தறிநீ தாண்டவக்கோனே
    18
    பற்றே பிறப்புண்டார்க்கும் தாண்டவக்கோனே - அதைப்
    பற்றாது அறுத்துவிடு தாண்டவக்கோனே
    19
    சற்றே பிரமத்திச்சை தாண்டவக்கோனே - உன்னுள்
    சலியாமல் வைக்கவேண்டும் தாண்டவக்கோனே
    20
    அவித்தவித்து முளையாதே தாண்டவக்கோனே - பத்தி
    அற்றவர் கதியடையார் தாண்டவக்கோனே
    21
    செவிதனிற் கேளாத மறை தாண்டவக்கோனே - குரு
    செப்பில் வெளியாம் அல்லவோ தாண்டவக்கோனே
    22

    கட்டளைக் கலித்துறை

    மாடும் மனைகளும் மக்களுஞ் சுற்றமும் வான்பொருளும்
    வீடும் மணிகளும் வெண்பொன்னுஞ் செம்பொன்னுஞ் வெண்கலமும்
    காடும் கரைகளும் கல்லாம் பணியுங் கரிபரியும்
    தேடும் பலபண்டம் நில்லா சிவகதி சேர்மின்களே.
    23

    நேரிசை வெண்பா

    போகம்போம் போக்கியம்போம் போசனம்போம் புன்மைபோம்
    மோகம்போம் மூர்க்கம்போம் மோசம்போம் - தாகம்போம்
    வேதமுதல் ஆகமங்கள் மேலானதென்று பல்கால்
    ஓதுபிர மரத்துஉற்றக் கால்.
    24

    தாண்டவராயக்கோனார் கூற்று

    தாந் திமித்திமி தந்தக்கோ னாரே
    தீந் திமித்திமி திந்தக்கோ னாரே
    ஆனந்தக் கோனாரே - அருள்
    ஆனந்தக் கோனாரே.

    ஆயிரத்தெட்டு வட்டமுங் கண்டேன்
    அந்த வட்டத்துள்ளே நின்றதும் கண்டேன்
    மாயிரு ஞாலத்து நூற்றெட்டும் பார்த்தேன்
    மந்த மனத்துறும் சந்தேகம் தீர்ந்தேன் (தாந்)
    25
    அந்தக் கரணம் எனச்சொன்னால் ஆட்டையும்
    அஞ்ஞானம் என்னும் அடர்ந்தவன் காட்டையும்
    சந்தத் தவமென்னும் வாளினால் வெட்டினேன்
    சாவாது இருந்திடக் கோட்டையுங் கட்டினேன் (தாந்)
    26
    மெய்வாய்கண் மூக்குச் செவியெனும் ஐந்தாட்டை
    வீறுஞ் சுவையொளி ஊறோசை யாம்காட்டை
    எய்யாமல் ஓட்டினேன் வாட்டினேன் ஆட்டினேன்
    ஏக வெளிக்குள்ளே யோக வெளிக்குள்ளே (தாந்)
    27
    பற்றிரண் டும்அறப் பண்புற்றேன் நண்புற்றேன்
    பாலையும் உட்கொண்டேன் மேலையாம் கண்கண்டேன்
    சிற்றின்பம் நீக்கினேன் மற்றின்பம் நோக்கினேன்
    சிற்பரஞ் சேர்ந்திட்டேன் தற்பரஞ் சார்ந்திட்டேன் (தாந்)
    28
    அண்ணாக்கை யூடே யடைத்தே அமுதுண்ணேன்
    அந்தரத் தரத்தை அப்பொழு தேயெண்ணேன்
    விண்ணாளும் மொழியை மேவிப்பூசை பண்ணேன்
    மெய்ஞ்ஞானம் ஒன்றுஅன்றி வேறேஒன்றை நண்ணேன் (தாந்)
    29
    மண்ணாதி பூதங்கள் ஐந்தையும் கண்டேனே
    மாயா விகாரங்கள் யாவையும் விண்டேனே
    விண்ணாளி மொழியை மெய்யினுள் கொண்டேனே
    மேதினி வாழ்வினை மேலாக வேண்டேனே (தாந்)
    30
    வாக்காதி ஐந்தையும் வாகாய்த் தெரிந்தேனே
    மாயை சம்பந்தங்கள் ஐந்தும் பிரிந்தேனே
    நோக்கரு யோகங்கள் ஐந்தும் புரிந்தேனே
    நுவலுமற்ற ஐந்தியோக நோக்கம் பரிந்தேனே (தாந்)
    31
    ஆறாதாரத் தெய் வங்களை நாடு
    அவர்க்கும் மேலான ஆதியைத் தேடு
    கூறான வட்ட ஆனந்தத்திற் கூடு
    கோசமைந் துங்கண்டு குன்றேறி ஆடு (தாந்)
    32
    நாராயணக் கோனார் கூற்று

    ஆதிபகவனையே ......பசுவே!
    அன்பாய் நினைப்பாயேல்
    சோதி பரகதிதான் ......பசுவே!
    சொந்தமது ஆகாதோ?
    33
    எங்கும் நிறைபொருளைப் ......பசுவே!
    எண்ணிப் பணிவாயேல்
    தங்கும் பரகதியில் ......பசுவே!
    சந்ததம் சாருவையே.
    34
    அல்லும் பகலும்நிதம் ......பசுவே!
    ஆதி பதந்தேடில்
    புல்லும் மோட்சநிலை ......பசுவே!
    பூரணங் காண்பாயே.
    35
    ஒன்றைப் பிடித்தோர்க்கே ......பசுவே!
    உண்மை வசப்படுமே
    நின்ற நிலைதனிலே ......பசுவே!
    நேர்மை அரிவாயே.
    36
    எல்லாம் இருந்தாலும் ......பசுவே!
    ஈசர் அருள் இல்லையேல்
    இல்லாத் தன்மையென்றே ......பசுவே!
    எண்ணிப் பணிவாயே.
    37
    தேவன் உதவியின்றிப் ......பசுவே!
    தேர்ந்திடில் வேறொன்றுமில்லை
    ஆவிக்கும் ஆவியதாம் ......பசுவே!
    அத்தன் திருவடியே.
    38
    தாயினும் அன்பன்அன்றோ ......பசுவே!
    சத்திக்குள் ளானவன்தான்?
    நேயம் உடையவர்பால் ......பசுவே!
    நீங்காது இருப்பானே.
    39
    முத்திக்கு வித்தானோன் ......பசுவே!
    மூலப் பொருளானோன்
    சத்திக்கு உறவானோன் ......பசுவே!
    தன்னைத் துதிப்பாயே.
    40
    ஐயன் திருபாதம் ......பசுவே!
    அன்புற்று நீபணிந்தால்
    வெய்ய வினைகளெல்லாம் ......பசுவே!
    விட்டோ டும் கண்டாயே.
    41
    சந்திர சேகரன்தாள் ......பசுவே!
    தாழ்ந்து பணிவாயேல்
    இந்திரன் மான்முதலோர் ......பசுவே!
    ஏவல் புரிவாரே.
    42
    கட்புலன் காணஒண்ணாப் ......பசுவே!
    கர்த்தன் அடியிணையை
    உட்புலன் கொண்டேத்திப் ......பசுவே!
    உன்னதம் எய்வாயே.
    43
    சுட்டியும் காணஒண்ணாப் ......பசுவே!
    சூனிய மானவத்தை
    ஒட்டிப் பிடிப்பாயேல் ......பசுவே!
    உன்னை நிகர்ப்பவர் யார்?
    44
    தன்மனந் தன்னாலே ......பசுவே!
    தானுவைச் சாராதார்
    வன்மரம் ஒப்பாகப் ......பசுவே!
    வையத்துள் உரைவாரே
    45
    சொல்லெனும் நற்பொருளாம் ......பசுவே!
    சோதியைப் போற்றாக்கால்
    இல்லென்று முத்திநிலை ......பசுவே!
    எப்பொ ருளுஞ்சொல்லுமே.
    46

    பலரோடு கிளத்தல்
    (குறள் வெண்செந்துறை)


    கண்ணுள் மணியைக் கருதிய பேரொளியை
    விண்ணின் மணியை விளக்கொளியைப் போற்றீரே.
    47
    மனம்வாக்குக் காயம்எனும் வாய்த்தபொறிக்கு எட்டாத
    தினகரனை நெஞ்சமதில் சேவித்துப் போற்றீரே.
    48
    காலமூன் றுங்கடந்த கதிரொளியை உள்ளத்தால்
    சாலமின்றிப் பற்றிச் சலிப்பறவே போற்றீரே.
    49
    பாலிற் சுவைபோலும் பழத்தில் மதுபோலும்
    நூலிற் பொருள்போலும் நுண்பொருளைப் போற்றீரே.
    50
    மூவர் முதலை முக்கனியைச் சர்க்கரையைத்
    தேவர் பொருளைத் தெள்ளமுதைப் போற்றீரே.
    51
    தூய மறைப்பொருளைச் சுகவாரி நல்அமிழ்தை
    நேய முடனாளும்நிலை பெறவே போற்றீரே.
    52
    சராசரத் தைத்தந்த தனிவான மூலம்என்னும்
    பராபரத்தைப் பற்றப் பலமறவே போற்றீரே.
    53
    மண்ணாதி பூதமுதல் வகுத்ததொரு வான்பொருளைக்
    கண்ணாரக் காணக் கருத்திசைந்து போற்றீரே.
    54
    பொய்ப்பொருளை விட்டுப் புலமறிய ஒண்ணாத
    மெய்ப்பொருளை நாளும் விருப்புற்றுப் போற்றீரே.
    55
    எள்ளில் தைலம்போல் எங்கும் நிறைபொருளை
    உள்ளில் துதித்தே உணர்வடைந்து போற்றீரே.
    56

    நெஞ்சொடு கிளத்தல்

    பூமியெல்லாம்ஓர் குடைக்கீழ்ப் பொருந்த அரசாளுதற்குக்
    காமியம்வைத்தால் உனக்குக் கதியுளதோ கல்மனமே!
    57
    பெண்ணாசை யைக்கொண்டு பேணித் திரிந்தக்கால்
    விண்ணாசை வைக்க விதியில்லையே கல்மனமே!
    58
    மேயும் பொறிகடமை மேலிடவொட் டார்க்குவினை
    தேயும்என்றே நல்வழியில் சொல்லுகநீ கல்மனமே!
    59
    பொன்னிச்சை கொண்டு பூமிமுற்றும் திரிந்தால்
    மன்னிச்சை நோக்கம் வாய்க்குமோ கல்மனமே!
    60
    பொய்யான கல்விகற்றுப் பொருள்மயக்கம் கொள்ளாமல்
    மெய்யான ஞானக்கல்வியினை விரும்புவாய் கல்மனமே!
    61
    பேய்க்குரங்கு போலப் பேருலகில் இச்சைவைத்து
    நாய்நரிகள் போலலைந்தால் நன்மையுண்டோ கல்மனமே!
    62
    இரும்பைஇழுக் குங்காந்தத்து இயற்கைபோல் பல்பொருளை
    விரும்பினதால் அவைநிலையோ? விளம்புவாய் கல்மனமே!
    63
    கற்பநிலை யால் அலவோகற்பக லங்கடத்தல்?
    சொற்பநிலை மற்றநிலை சூட்சங்காண் கல்மனமே!
    64
    தேகம் இழப்பதற்குச் செபஞ்செய்தேன் தவஞ்செய்தேன்?
    யோகமட்டுஞ் செய்தால்என்? யோசிப்பாய் கல்மனமே!
    65
    பேசாது இருப்பதற்குத்தான் கற்ற கல்வியன்றோ
    வாகான மெய்க்கல்வி? வகுத்தறிநீ கல்மனமே!
    66

    அறிவோடு கிளத்தல்

    எல்லாப் பொருள்களையும் எண்ணப்படி படைத்த
    வல்லாளன் தன்னை வகுத்தறிநீ புல்லறிவே.
    67
    கட்புலனுக்கு எள்ளளவும் காணாது இருந்தெங்கும்
    உட்புலனாய் நின்றஒன்றை உய்த்தறிநீ புல்லறிவே.
    68
    விழித்திருக்கும் வேளையிலே விரைந்துறக்கம் உண்டாகும்
    செழித்திலங்கும் ஆன்மாவைத் தேர்ந்தறிநீ புல்லறிவே.
    69
    மெய்யில்ஒரு மெய்யாகி மேலாகிக் காலாகிப்
    பொய்யில்ஒரு பொய்யாகும் புலமறிநீ புல்லறிவே.
    70
    ஆத்துமத்தின் கூறான அவயவப்பேய் உன்னுடனே
    கூத்துபுரிகின்ற கோள் அறிவாய் புல்லறிவே.
    71
    இருட்டறைக்கு நல்விளக்காய் இருக்கும்உன்றன் வல்லமையை
    அருள்துறையில் நிறுத்தி விளக்காகுநீ புல்லறிவே.
    72
    நல்வழியில் சென்று நம்பதவி எய்தாமல்
    கொல்வழியிற் சென்று குறுகுவதேன் புல்லறிவே.
    73
    கைவிளக்குக் கொண்டு கடலில்வீழ் வார்போல்
    மெய்விளக்குன் னுள்ளிருக்க வீழ்குவதேன் புல்லறிவே.
    74
    வாசிக்கு மேலான வாள்கதியுன் னுள்ளிருக்க
    யோசிக்கு மேற்கதிதான் உனக்கரிதோ புல்லறிவே.
    75
    அன்னையைப்போல் எவ்வுயிரும் அன்புடனே காத்துவரும்
    முன்னவனைக் கண்டு முக்தியடை புல்லறிவே.
    76

    சித்தத்தொடு கிளத்தல்

    கண்ணிகள்

    அஞ்ஞானம் போயிற்றென்று தும்பீபற - பர
    மானந்தம் கண்டோ ம் என்று தும்பீபற!
    மெய்ஞ்ஞானம் வாய்த்தென்று தும்பீபற - பர
    மேலேறிக் கொண்டோ ம் என்று தும்பீபற!
    77
    அல்லல்வலை இல்லையென்றே தும்பீபற - நிறை
    ஆணவங்கள் அற்றோம் என்றே தும்பீபற!
    தொல்லைவினை நீங்கிற்று என்றே தும்பீபற - பரஞ்
    சோதியைக் கண்டோ ம் எனத் தும்பீபற!
    78
    ஐம்பொறி அடங்கினவே தும்பீபற - நிறை
    அறிவே பொருளாம் எனத் தும்பீபற!
    செம்பொருள்கள் வாய்த்தனவே தும்பீபற - ஒரு
    தெய்வீகம் கண்டோ ம் என்றே தும்பீபற!
    79
    மூவாசை விட்டோ மென்றே தும்பீபற - பர
    முத்தி நிலை சித்தியென்றே தும்பீபற!
    தேவாசை வைத்தோமென்று தும்பீபற - இந்தச்
    செகத்தை ஒழித்தோம் என்று தும்பீபற!
    80
    பாழ்வெளியை நோக்கியே தும்பீபற - மாயைப்
    பற்றற்றோம் என்றேநீ தும்பீபற!
    வாழ்விடம் என்றெய்தோம் தும்பீபற - நிறை
    வள்ளல்நிலை சார்ந்தோமே தும்பீபற!
    81
    எப்பொருளும் கனவென்றே தும்பீபற - உல
    கெல்லாம் அழியுமென்றே தும்பீபற!
    அப்பிலெழுத் துடலென்றே தும்பீபற - என்றும்
    அழிவில்லாதது ஆதியென்றே தும்பீபற!
    82

    குயிலொடு கிளத்தல்

    கரணங்கள் ஒருநான்கும் அடங்கினவே - கெட்ட
    காமமுதல் ஓராறும் ஒடுங்கினவே;
    சரணங்கள் ஒருநான்கும் கண்டனமென்றே - நிறை
    சந்தோட மாகவே கூவு குயிலே!
    83
    உலகம் ஒக்காளமாம் என்றோதுகுயிலே - எங்கள்
    உத்தமனைக் காண்பதரிதென்று ஓதுகுயிலே!
    பலமதம் பொய்மையே என்றோதுகுயிலே - எழு
    பவம் அகன்றிட்டோ ம் நாமென்று ஓதுகுயிலே!
    84
    சாதனங்கள் செய்தவர்கள் சாவார்குயிலே - எல்லாத்
    தத்துவங்கள் தேர்ந்தவர்கள் வேவார்குயிலே!
    மாதவங்கள் போலும்பலன் வாயாக்குயிலே - மூல
    மந்திரங்கள் தான்மகிமை வாய்க்கும்குயிலே.
    85
    எட்டிரண்டு அறிந்தோர்க்குஇடர் இல்லைகுயிலே - மனம்
    ஏகாமல் நிற்கில்கதி எய்துங்குயிலே!
    நட்டணையைச் சார்ந்தறிந்து கொள்ளு குயிலே - ஆதி
    நாயகனை நினைவில் வைத்தோதுகுயிலே.
    86

    மயிலொடு கிளத்தல்

    ஆடுமயிலே நடமாடு மயிலே எங்கள்
    ஆதியணி சேடனைக் கண்டாடுமயிலே!
    கூடுபோகு முன்னங்கதி கொள்ளுமயிலே - என்றும்
    குறையாமல் மோனநெறி கொள்ளுமயிலே.
    87
    இல்லறமே அல்லலாமென்று ஆடுமயிலே - பத்தி
    இல்லவர்க்கு முத்திசித்தி இல்லைமயிலே!
    நல்லறமே துறவறங் காணுமயிலே - சுத்த
    நாதாந்த வெட்டவெளி நாடுமயிலே.
    88
    காற்றூனைப் போல்மனத்தைக் காட்டுமயிலே - வரும்
    காலனையும் தூரத்தில் ஓட்டு மயிலே!
    பாற்றூடு உருவவே பாயுமயிலே - அகப்
    பற்றுச் சற்றுமில்லாமற் பண்ணுமயிலே.
    89

    அன்னத்தொடு கிளத்தல்

    சிறுதவளை தான்கலக்கிற் சித்திரத்தின் நிழல்மறையும்
    மறுவாயைத் தான்கலக்கின் மதிமயங்கும் மடவனமே.
    90
    காற்றின் மரமுறியும் காட்சியைப்போல் நல்லறிவு
    தூற்றிவிடில் அஞ்ஞானம் தூரப்போம் மடவனமே.
    91
    அக்கினியாற் பஞ்சுபொதி அழிந்திட்ட வாறேபோல்
    பக்குவநல் அறிவாலே பாவம்போம் மடவனமே.
    92
    குளவிபுழு வைக்கொணர்ந்து கூட்டில் உருப்படுத்தல்போல்
    வளமுடைய வன்மனத்தை வசப்படுத்து மடவனமே.
    93
    அப்புடனே உப்புச் சேர்ந்தளவுசரி யானதுபோல்
    ஒப்புறவே பிரமமுடன் ஒன்றிநில்லு மடவனமே.
    94
    காய்ந்த இரும்புநிறங் காட்டுதல்போல் ஆத்துமத்தை
    வாய்ந்திலங்கச் செய்து வளம்பெறுநீ மடவனமே.
    95

    புல்லாங்குழலூதல்

    தொல்லைப் பிறவி தொலைத்தக்கார்க்கு முத்திதான்
    இல்லையென்று ஊதுகுழல் - கோனே
    இல்லையென்று ஊதுகுழல்.
    96
    இந்திர போகங்கள் எய்தினுந் தொல்லையென்று
    அந்தமாய் ஊதுகுழல் - கோனே
    அந்தமாய் ஊதுகுழல்.
    97
    மோன நிலையில் முத்திஉண்டாம் என்றே
    கானமாய் ஊதுகுழல் - கோனே
    கானமாய் ஊதுகுழல்.
    98
    நாய்போற் பொறிகளை நானாவி தம்விட்டோ ர்
    பேயரென்று ஊதுகுழல் - கோனே
    பேயரென்று ஊதுகுழல்.
    99
    ஓடித் திரிவோர்க்கு உணர்வுகிட் டும்படி
    சாடியே ஊதுகுழல் - கோனே
    சாடியே ஊதுகுழல்.
    100
    ஆட்டுக் கூட்டங்களை அண்டும் புலிகளை
    ஓட்டியே ஊதுகுழல் - கோனே
    ஓட்டியே ஊதுகுழல்.
    101
    மட்டிக் குணமுள்ள மாரீச நாய்களைக்
    கட்டிவைத்து ஊதுகுழல் - கோனே
    கட்டிவைத்து ஊதுகுழல்.
    102
    கட்டாத நாயெல்லாம் காவலுக் கெப்போதும்
    கிட்டாவென்று ஊதுகுழல் - கோனே
    கிட்டாவென்று ஊதுகுழல்.
    103
    பெட்டியிற் பாம்பெனப் பேய்மனமே அடங்க
    ஒட்டியே ஊதுகுழல் - கோனே
    ஒட்டியே ஊதுகுழல்.
    104
    எனதென்றும் யானென்றும் இல்லா திருக்கவே
    தனதாக ஊதுகுழல் - கோனே
    தனதாக ஊதுகுழல்.
    105
    அற்ற விடமொன்றே அற்றதோடு உற்றதைக்
    கற்றதென்று ஊதுகுழல் - கோனே
    கற்றதென்று ஊதுகுழல்.
    106

    பால் கறத்தல்

    சாவாது இருந்திட பால்கற - சிரம்
    தன்னில் இருந்திடும் பால்கற
    வேவாது இருந்திட பால்கற - வெறு
    வெட்ட வெளிக்குள்ளே பால்கற.
    107
    தோயாது இருந்திடும் பால்கற
    தொல்லை வினையறப் பால்கற
    வாயால் உமிழ்ந்திடும் பால்கற - வெறும்
    வயிறார உண்டிடப் பால்கற.
    108
    நாறா திருந்திடும் பால்கற
    நாளும் இருந்திடப் பால்கற
    மாறாது ஒழுகிடும் பால்கற - தலை
    மண்டையில் வளரும் பால்கற.
    109
    உலகம் வெறுத்திடும் பால்கற - மிக
    ஒக்காளம் ஆகிய பால்கற
    கலசத்தினுள் விழப் பால்கற - நிறை
    கண்டத்தின் உள்விழப் பால்கற.
    110
    ஏப்பம் விடாமலே பால்கற - வரும்
    ஏமன் விலக்கவே பால்கற
    தீப்பொறி ஓய்ந்திடப் பால்கற - பர
    சிவத்துடன் சாரவே பால்கற.
    111
    அண்ணாவின் மேல்வரும் பால்கற - பேர்
    அண்டத்தில் ஊறிடும் பால்கற
    விண்ணாட்டில் இல்லாத பால்கற - தொல்லை
    வேதனை கெடவே பால்கற.
    112

    கிடை கட்டுதல்

    இருவினையாம் மாடுகளை ஏகவிடு கோனே - உன்
    அடங்குமன மாடொன்றை அடக்கிவிடு கோனே.
    113
    சாற்றரிய நைட்டிகரே தற்பரத்தைச் சார்வார் - நாளும்
    தவமாகக் கழிப்பவரே சன்னமதில் வருவார்.
    114
    அகங்கார மாடுகள்மூன்று அகற்றிவிடு கோனே - நாளும்
    அவத்தையெனும் மாடதைநீ அடக்கிவிடு கோனே.
    115
    ஒருமலத்தன் எனுமாட்டை ஒதுக்கிக்கட்டு கோனே! - உன்
    உறையுமிரு மலந்தனையும் ஓட்டிக் கட்டுக் கோனே.
    116
    மும்மலத்தன் எனுமாட்டை முறுக்கிக்கட்டுக் கோனே - மிக
    முக்கால நேர்மையெல்லாம் முன்பறிவாய் கோனே.
    117
    இந்திரியத் திரயங்களை இறுக்கிவிடு கோனே - என்றும்
    இல்லை என்றேமரணக்குழல் எடுத்து ஊதுகோனே.
    118
    உபாதியெனும் மூன்றாட்டை ஓட்டிவிடு கோனே! - உனக்
    குள்ளிருக்கும் கள்ளமெல்லாம் ஓடிப்போம் கோனே.
    119
    முக்காய மாடுகளை முன்னங்கட்டுக் கோனே - இனி
    மோசமில்லை நாசமில்லை முத்திஉண்டாங் கோனே.
    120
    கன்மமல மாடுகளைக் கடைக்கட்டுக் கோனே - மற்றக்
    கன்மத்திர யப்பசுவைக் கடையிற்கட்டுக் கோனே.
    121
    காரணக்கோ மூன்றையுங் கால்பிணிப்பாய் கோனே - நல்ல
    கைவசமாய் சாதனங்கள் கடைப்பிடிப்பாய் கோனே.
    122
    பிரம்மாந்திரத்திற்பே ரொளிகாண் எங்கள்கோனே - முத்தி
    பேசாதிருந்து பெருநிட்டைசார் எங்கள் கோனே.
    123
    சிரமதிற் கமலச் சேவைதெரிந் தெங்கள்கோனே - வாய்
    சித்திக்குந் தந்திரம் சித்தத்தறியெங்கள் கோனே.
    124
    விண்நாடி வத்துவை மெய்யறிவிற் காணுங்கோனே - என்றும்
    மெய்யே மெய்யில்கொண்டு மெய்யறிவில் செல்லுங்கோனே.
    125
    கண்ணாடியின் உள்ளே கண்டுபார்த்துக் கொள்ளுகோனே - ஞானக்
    கண்ணன்றிக் கண்ணடிகாண ஒண்ணாதெங்கள் கோனே.
    126
    சூனியமானத்தைச் சுட்டுவார் எங்குண்டு கோனே - புத்தி
    சூக்குமமேயதைச் சுட்டுமென்று எண்ணங்கொள் கோனே.
    127
    நித்தியமானது நேர்படி லேநிலை கோனே! - என்றும்
    நிற்குமென்றே கண்டு நிச்சயங்காணெங்கள் கோனே.
    128
    சத்தியும் பரமும் தன்னுட் கலந்தேகோனே - நிட்டை
    சாதிக்கில் இரண்டுந்தன்னுள்ளே காணலாங் கோனே.
    129
    கூகைபோல் இருந்து மோனத்தைச்சாதியெங் கோனே - பர
    மூலநிலைகண்டு மூட்டுப் பிறப்பறு கோனே.
    130

    --------------------------------------------------
    2. வயங்கும் - விளங்கும்
    7. சகளம் - உருவுள்ளது; நிட்களம் - உருவமில்லாதது
    8. நாரி இடப்பாகன் - அர்த்தநாரீஸ்வரன்
    9. முப்பாழ் - விந்து, மோகினி, மான் ஆகிய மூன்று மாயை
    24. போக்கியம் - அனுபவம்
    32. கோசம் - கருப்பை
    38. அத்தன் - தந்தை
    51. மூவர் முதல் - மும்மூர்த்திகளின் தலைவன்
    52. சுகவாரி - இன்பக்கடல்
    53. சராசரம் - உலகம்; பவம் - பிறப்பு
    57. காமியம் - விருப்பம்
    70. கால் - காற்று
    80. மூவாசை - மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசை;
    தேவாசை - கடவுள் மீது கொள்ளும் ஆசை
    82. அப்பு - நீர்
    85. வாயா - வாய்க்காது
    86. நட்டணை - நடிப்பு
    114. தற்பரம் - பரம்பொருள்
    129. நிட்டை - சிவயோகம்

சித்தர் பாடல்கள் 8 அகப்பேய்ச் சித்தர்



அகப்பேய்ச் சித்தர் பாடல்கள்

    நஞ்சுண்ண வேண்டாவே - அகப்பேய்
    நாயகன் தாள் பெறவே
    நெஞ்சு மலையாதே - அகப்பேய்
    நீ ஒன்றுஞ் சொல்லாதே!
என்று இவர் அலையும் மனதைப் பெண்பேயாக உருவகப்படுத்தி, முன்நிறுத்தி, அகப்பேய் என்று ஒவ்வொரு அடியிலும் விளித்துப் பாடுவதால் அகப்பேய்ச் சித்தர் எனப்பட்டார். 'அகப்பேய்' என்பது மருவி, இவரை 'அகப்பைச் சித்தர்' எனக் கூறுவதும் உண்டு.

இவரைப் பற்றிய மற்றெந்த குறிப்பும் இல்லை.

இவர் பாடல்களில் சைவம் என்பதற்கு அன்பு என்று பொருள். அகங்காரம் அற்று வாழவேண்டும், சாதி வேற்றுமை, சாத்திர மறுப்பு போன்ற கருத்துகள்பேசப்படுகின்றன.
--

அகப்பேய் சித்தர் பாடல்கள்

நஞ்சுண்ண வேண்டாவே ......அகப்பேய்
நாயகன் தாள் பெறவே
நெஞ்சு மலையாதே .....அகப்பேய்
நீ ஒன்றுஞ் சொல்லாதே.
1
பராபர மானதடி .....அகப்பேய்
பரவையாய் வந்தடி
தராதலம் ஏழ்புவியும் .....அகப்பேய்
தானே படைத்ததடி.
2
நாத வேதமடி .....அகப்பேய்
நன்னடம் கண்டாயோ
பாதஞ் சத்தியடி .....அகப்பேய்
பரவிந்து நாதமடி.
3
விந்து நாதமடி .....அகப்பேய்
மெய்யாக வந்ததடி
ஐந்து பெரும்பூதம் .....அகப்பேய்
அதனிடம் ஆனதடி.
4
நாலு பாதமடி .....அகப்பேய்
நன்னெறி கண்டாயே
மூல மானதல்லால் .....அகப்பேய்
முத்தி அல்லவடி.
5
வாக்காதி ஐந்தடியோ .....அகப்பேய்
வந்த வகைகேளாய்
ஒக்கம் அதானதடி .....அகப்பேய்
உண்மையது அல்லவடி.
6
சத்தாதி ஐந்தடியோ .....அகப்பேய்
சாத்திரம் ஆனதடி
மித்தையும் ஆகமடி .....அகப்பேய்
மெய்யது சொன்னேனே.
7
வசனாதி ஐந்தடியோ .....அகப்பேய்
வண்மையாய் வந்ததடி
தெசநாடி பத்தேடி .....அகப்பேய்
திடன் இது கண்டாயே.
8
காரணம் ஆனதெல்லாம் .....அகப்பேய்
கண்டது சொன்னேனே
மாரணங் கண்டாயே .....அகப்பேய்
வந்த விதங்கள் எல்லாம்.
9
ஆறு தத்துவமும் .....அகப்பேய்
ஆகமஞ் சொன்னதடி
மாறாத மண்டலமும் .....அகப்பேய்
வந்தது மூன்றடியே.
10
பிருதிவி பொன்னிறமே .....அகப்பேய்
பேதமை அல்லவடி
உருவது நீரடியோ .....அகப்பேய்
உள்ளது வெள்ளையடி.
11
தேயு செம்மையடி .....அகப்பேய்
திடனது கண்டாயே
வாயு நீலமடி .....அகப்பேய்
வான்பொருள் சொல்வேனே.
12
வான மஞ்சடியோ .....அகப்பேய்
வந்தது நீகேளாய்
ஊனமது ஆகாதே .....அகப்பேய்
உள்ளது சொன்னேனே.
13
அகாரம் இத்தனையும் .....அகப்பேய்
அங்கென்று எழுந்ததடி
உகாரங் கூடியடி .....அகப்பேய்
உருவாகி வந்ததடி.
14
மகார மாயையடி .....அகப்பேய்
மலமது சொன்னேனே
சிகார மூலமடி .....அகப்பேய்
சிந்தித்துக் கொள்வாயே.
15
வன்னம் புவனமடி .....அகப்பேய்
மந்திரம் தந்திரமும்
இன்னமும் சொல்வேனே .....அகப்பேய்
இம்மென்று கேட்பாயே.
16
அத்தி வரைவாடி .....அகப்பேய்
ஐம்பத்தோர் அட்சரமும்
மித்தையாங் கண்டாயே .....அகப்பேய்
மெய்யென்று நம்பாதே.
17
தத்துவம் ஆனதடி .....அகப்பேய்
சகலமாய் வந்ததடி
புத்தியுஞ் சொன்னேனே .....அகப்பேய்
பூத வடிவலவோ.
18
இந்த விதங்களெல்லாம் .....அகப்பேய்
எம்இறை அல்லவடி
அந்த விதம்வேறே .....அகப்பேய்
ஆராய்ந்து காணாயோ.
19
பாவந் தீரவென்றால் .....அகப்பேய்
பாவிக்க லாகாதே
சாவதும் இல்லையடி .....அகப்பேய்
சற்குரு பாதமடி.
20
எத்தனை சொன்னாலும் .....அகப்பேய்
என் மனந்தேறாதே
சித்து மசித்தும்விட்டே .....அகப்பேய்
சேர்த்துநீ காண்பாயே.
21
சமய மாறுமடி .....அகப்பேய்
தம்மாலே வந்தவடி
அமைய நின்றவிடம் .....அகப்பேய்
ஆராய்ந்து சொல்வாயே.
22
ஆறாறும் ஆகுமடி .....அகப்பேய்
ஆகாது சொன்னேனே
வேறே உண்டானால் .....அகப்பேய்
மெய்யது சொல்வாயே.
23
உன்னை அறிந்தக்கால் .....அகப்பேய்
ஒன்றையும் சேராயே
உன்னை அறியும்வகை .....அகப்பேய்
உள்ளது சொல்வேனே.
24
சரியை ஆகாதே .....அகப்பேய்
சாலோகங் கண்டாயே
கிரியை செய்தாலும் .....அகப்பேய்
கிட்டுவது ஒன்றுமில்லை.
25
யோகம் ஆகாதே .....அகப்பேய்
உள்ளது கண்டக்கால்
தேக ஞானமடி .....அகப்பேய்
தேடாது சொன்னேனே.
26
ஐந்துதலை நாகமடி .....அகப்பேய்
ஆதாயங் கொஞ்சமடி
இந்த விடந்தீர்க்கும் .....அகப்பேய்
எம் இறை கண்டாயே.
27
இறைவன் என்றதெல்லாம் .....அகப்பேய்
எந்த விதமாகும்
அறைய நீகேளாய் .....அகப்பேய்
ஆனந்த மானதடி.
28
கண்டு கொண்டேனே .....அகப்பேய்
காதல் விண்டேனே
உண்டு கொண்டேனே .....அகப்பேய்
உள்ளது சொன்னாயே.
29
உள்ளது சொன்னாலும் .....அகப்பேய்
உன்னாலே காண்பாயே
கள்ளமுந் தீராதே .....அகப்பேய்
கண்டார்க்குக் காமமடி.
30
அறிந்து நின்றாலும் .....அகப்பேய்
அஞ்சார்கள் சொன்னேனே
புரிந்த வல்வினையும் .....அகப்பேய்
போகாதே உன்னை விட்டு.
31
ஈசன் பாசமடி .....அகப்பேய்
இவ்வண்ணங் கண்டதெல்லாம்
பாசம் பயின்றதடி .....அகப்பேய்
பரமது கண்டாயே.
32
சாத்திரமும் சூத்திரமும் .....அகப்பேய்
சங்கற்பம் ஆனதெல்லாம்
பார்த்திடல் ஆகாதே .....அகப்பேய்
பாழ் பலங்கண்டாயே.
33
ஆறு கண்டாயோ .....அகப்பேய்
அந்த வினை தீர
தேறித் தெளிவதற்கே .....அகப்பேய்
தீர்த்தமும் ஆடாயே.
34
எத்தனை காலமுந்தான் .....அகப்பேய்
யோகம் இருந்தாலென் ?
முத்தனு மாவாயோ .....அகப்பேய்
மோட்சமும் உண்டாமோ ?
35
நாச மாவதற்கே .....அகப்பேய்
நாடாதே சொன்னேனே
பாசம் போனாலும் .....அகப்பேய்
பசுக்களும் போகாவே.
36
நாணம் ஏதுக்கடி .....அகப்பேய்
நல்வினை தீர்ந்தக்கால்
காண வேணுமென்றால் .....அகப்பேய்
காணக் கிடையாதே.
37
சும்மா இருந்துவிடாய் .....அகப்பேய்
சூத்திரஞ் சொன்னேனே
சும்மா இருந்தவிடம் .....அகப்பேய்
சுட்டது கண்டாயே.
38
உன்றனைக் காணாதே .....அகப்பேய்
ஊனுள் நுழைந்தாயே
என்றனைக் காணாதே .....அகப்பேய்
இடத்தில் வந்தாயே.
39
வானம் ஓடிவரில் .....அகப்பேய்
வந்தும் பிறப்பாயே
தேனை உண்ணாமல் .....அகப்பேய்
தெருவொடு அலைந்தாயே.
40
சைவ மானதடி .....அகப்பேய்
தானாய் நின்றதடி
சைவம் இல்லையாகில் .....அகப்பேய்
சலம்வருங் கண்டாயே
41
ஆசை அற்றவிடம் .....அகப்பேய்
ஆசாரங் கண்டாயே
ஈசன் பாசமடி .....அகப்பேய்
எங்ஙனஞ் சென்றாலும்.
42
ஆணவ மூலமடி .....அகப்பேய்
அகாரமாய் வந்ததடி
கோணும் உகாரமடி .....அகப்பேய்
கூடப் பிறந்ததுவே.
43
ஒன்றும் இல்லையடி .....அகப்பேய்
உள்ளபடி யாச்சே
நன்றிலை தீதிலையே .....அகப்பேய்
நாணமும் இல்லையடி.
44
சும்மா இருந்தவிடம் .....அகப்பேய்
சுட்டது சொன்னேனே
எம்மாயம் ஈதறியேன் .....அகப்பேய்
என்னையுங் காணேனே.
45
கலைகள் ஏதுக்கடி .....அகப்பேய்
கண்டார் நகையாரோ?
நிலைகள் ஏதுக்கடி .....அகப்பேய்
நீயார் சொல்வாயே.
46
இந்து அமிழ்தமடி .....அகப்பேய்
இரவி விடமோடி
இந்து வெள்ளையடி .....அகப்பேய்
இரவி சிவப்பாமே.
47
ஆணல பெண்ணலவே .....அகப்பேய்
அக்கினி கண்டாயே
தாணுவும் இப்படியே .....அகப்பேய்
சற்குரு கண்டாயே.
48
என்ன படித்தாலும் .....அகப்பேய்
எம்முரை யாகாதே
சொன்னது கேட்டாயே .....அகப்பேய்
சும்மா இருந்துவிடு.
49
காடும் மலையுமடி .....அகப்பேய்
கடுந்தவம் ஆனால்என்
வீடும் வெளியாமோ .....அகப்பேய்
மெய்யாக வேண்டாவோ.
50
பரத்தில் சென்றாலும் .....அகப்பேய்
பாரிலே மீளுமடி
பரத்துக்கு அடுத்தஇடம் .....அகப்பேய்
பாழது கண்டாயே.
51
பஞ்ச முகமேது .....அகப்பேய்
பஞ்சு படுத்தாலே
குஞ்சித பாதமடி .....அகப்பேய்
குருபா தங்கண்டாயே.
52
பங்கம் இல்லையடி .....அகப்பேய்
பாதம் இருந்தவிடம்
கங்கையில் வந்ததெல்லாம் .....அகப்பேய்
கண்டு தெளிவாயே.
53
தானற நின்றவிடம் .....அகப்பேய்
சைவங் கண்டாயே
ஊனற நின்றவர்க்கே .....அகப்பேய்
ஊனமொன்று இல்லையடி.
54
சைவம் ஆருக்கடி .....அகப்பேய்
தன்னை அறிந்தவர்க்கே
சைவம் ஆனவிடம் .....அகப்பேய்!
சற்குரு பாதமடி.
55
பிறவி தீரவென்றால் .....அகப்பேய்!
பேதகம் பண்ணாதே
துறவி யானவர்கள் .....அகப்பேய்!
சும்மா இருப்பார்கள்.
56
ஆரலைந் தாலும் .....அகப்பேய்!
நீயலை யாதேடி
ஊர லைந்தாலும் .....அகப்பேய்!
ஒன்றையும் நாடாதே.
57
தேனாறு பாயுமடி .....அகப்பேய்!
திருவடி கண்டவர்க்கே
ஊனாறு மில்லையடி .....அகப்பேய்!
ஒன்றையும் நாடாதே.
58
வெள்ளை கறுப்பாமோ .....அகப்பேய்!
வெள்ளியுஞ் செம்பாமோ
உள்ளது உண்டோ டி .....அகப்பேய்!
உன் ஆணை கண்டாயே.
59
அறிவுள் மன்னுமடி .....அகப்பேய்!
ஆதாரம் இல்லையடி
அறிவு பாசமடி .....அகப்பேய்!
அருளது கண்டாயே.
60
வாசியிலே றியதடி .....அகப்பேய்!
வான் பொருள் தேடாயோ
வாசியில் ஏறினாலும் .....அகப்பேய்!
வாராது சொன்னேனே.
61
தூராதி தூரமடி .....அகப்பேய்!
தூரமும் இல்லையடி
பாராமற் பாரடியோ .....அகப்பேய்!
பாழ்வினைத் தீரவென்றால்.
62
உண்டாக்கிக் கொண்டதல்ல .....அகப்பேய்!
உள்ளது சொன்னேனே
கண்டார்கள் சொல்வாரோ .....அகப்பேய்!
கற்வனை அற்றதடி.
63
நாலு மறைகாணா .....அகப்பேய்!
நாதனை யார் காண்பார்
நாலு மறை முடிவில் .....அகப்பேய்!
நற்குரு பாதமடி.
64
மூலம் இல்லையடி .....அகப்பேய்!
முப்பொருள் இல்லையடி
மூலம் உண்டானால் .....அகப்பேய்!
முத்தியும் உண்டாமே.
65
இந்திர சாலமடி .....அகப்பேய்!
எண்பத்தொரு பதமும்
மந்திரம் அப்படியே .....அகப்பேய்!
வாயைத் திறவாதே.
66
பாழாக வேணுமென்றால் .....அகப்பேய்!
பார்த்ததை நம்பாதே
கேளாமற் சொன்னேனே .....அகப்பேய்!
கேள்வியும் இல்லையடி.
67
சாதி பேதமில்லை .....அகப்பேய்!
தானாகி நின்றவர்க்கே
ஓதி உணர்ந்தாலும் .....அகப்பேய்!
ஒன்றுந்தான் இல்லையடி.
68
சூழ வானமடி .....அகப்பேய்!
சுற்றி மரக்காவில்
வேழம் உண்டகனி .....அகப்பேய்!
மெய்யது கண்டாயே.
69
தானும் இல்லையடி .....அகப்பேய்!
நாதனும் இல்லையடி
தானும் இல்லையடி .....அகப்பேய்!
சற்குரு இல்லையடி.
70
மந்திரம் இல்லையடி .....அகப்பேய்!
வாதனை இல்லையடி
தந்திரம் இல்லையடி .....அகப்பேய்!
சமயம் அழிந்ததடி.
71
பூசை பசாசமடி .....அகப்பேய்!
போதமே கோட்டமடி
ஈசன் மாயையடி .....அகப்பேய்!
எல்லாமும் இப்படியே.
72
சொல்ல லாகாதே .....அகப்பேய்!
சொன்னாலும் தோடமடி
இல்லை இல்லையடி .....அகப்பேய்!
ஏகாந்தங் கண்டாயே.
73
தத்துவத் தெய்வமடி .....அகப்பேய்!
சதாசிவ மானதடி
மற்றுள்ள தெய்வமெல்லாம் .....அகப்பேய்!
மாயை வடிவாமே.
74
வார்த்தை அல்லவடி .....அகப்பேய்!
வாசா மகோசரத்தே
ஏற்ற தல்லவடி .....அகப்பேய்!
என்னுடன் வந்ததல்ல.
75
சாத்திரம் இல்லையடி .....அகப்பேய்!
சலனங் கடந்ததடி
பார்த்திடல் ஆகாதே .....அகப்பேய்!
பாவனைக் கெட்டாதே.
76
என்ன படித்தால்என் .....அகப்பேய்!
ஏதுதான் செய்தால்என்
சொன்ன விதங்களெல்லாம் .....அகப்பேய்!
சுட்டது கண்டாயே.
77
தன்னை அறியவேணும் .....அகப்பேய்!
சாராமற் சாரவேணும்
பின்னை அறிவதெல்லாம் .....அகப்பேய்!
பேயறி வாகுமடி.
78
பிச்சை எடுத்தாலும் .....அகப்பேய்!
பிறவி தொலையாதே
இச்சை அற்றவிடம் .....அகப்பேய்!
எம்இறை கண்டாயே.
79
கோலம் ஆகாதே .....அகப்பேய்!
குதர்க்கம் ஆகாதே
சாலம் ஆகாதே .....அகப்பேய்!
சஞ்சலம் ஆகாதே.
80
ஒப்பனை அல்லவடி .....அகப்பேய்!
உன்ஆணை சொன்னேனே
அப்புடன் உப்பெனவே .....அகப்பேய்!
ஆராய்ந்து இருப்பாயே.
81
மோட்சம் வேண்டார்கள் .....அகப்பேய்!
முத்தியும் வேண்டார்கள்
தீட்சை வேண்டார்கள் .....அகப்பேய்!
சின்மய மானவர்கள்.
82
பாலன் பிசாசமடி .....அகப்பேய்!
பார்த்தக்கால் பித்தனடி
கால மூன்றுமல்ல .....அகப்பேய்!
காரியம் அல்லவடி.
83
கண்டதும் இல்லையடி .....அகப்பேய்!
கண்டவர் உண்டானால்
உண்டது வேண்டடியோ .....அகப்பேய்!
உன்ஆணை சொன்னேனே
84
அஞ்சயும் உண்ணாதே .....அகப்பேய்!
ஆசையும் வேண்டாதே
நெஞ்சையும் விட்டுவிடு .....அகப்பேய்!
நிட்டையில் சேராதே.
85
நாதாந்த உண்மையிலே .....அகப்பேய்!
நாடாதே சொன்னேனே
மீதான சூதானம் .....அகப்பேய்!
மெய்யென்று நம்பாதே.
86
ஒன்றோடு ஒன்றுகூடில் .....அகப்பேய்!
ஒன்றுங் கெடுங்காணே
நின்ற பரசிவமும் .....அகப்பேய்!
நில்லாது கண்டாயே.
87
தோன்றும் வினைகளெல்லாம் .....அகப்பேய்!
சூனியங் கண்டாயே
தோன்றாமல் தோன்றிவிடும் .....அகப்பேய்!
சுத்த வெளிதனிலே.
88
பொய்யென்று சொல்லாதே .....அகப்பேய்!
போக்கு வரத்துதானே
மெய்யென்று சொன்னக்கால் .....அகப்பேய்!
வீடு பெறலாமே.
89
வேதம் ஓதாதே .....அகப்பேய்!
மெய்கண்டோ ம் என்னாதே
பாதம் நம்பாதே .....அகப்பேய்!
பாவித்துப் பாராதே.
90
------------------------------------------------
2. பரவை - கடல்
3. நடம் - கூத்து
4. நாலுபதம் - சரியை, கிரியை, யோகம், ஞானம்
6. வாக்காதி ஐவர் - வாக்கு, பாதம், பாணி, பாயுரு,
உபத்தம் ஆகிய கர்மேந்திரியங்கள்
7. மித்தை - பொய்
11. பிருதிவி - மண்
12. தேயு - தீ
17. அத்தி - யானை, நாடி
25. சரியை - கடவுளை கோவிலில் வைத்து வழிபடுதல்;
கிரியை - கடவுளை ஆகம விதிப்படி வழிபடுதல்
28. அறைய - கூற
34. ஆறு - வழி
52. குஞ்சிதபாதம் - நடனத்தில் வளையத் தூக்கிய பாதம்
69. மரக்கா - மரச்சோலை;
வேழம் - விலாம்பழத்தை பற்றும் ஒரு நோய்
72. பசாசம் - பிசாசு
74. வாசாம கோசரம் - வாக்குக்கு எட்டாதது
80. கோலம் - அலங்காரம்
82. சின்மயம் - அறிவு வடிவான கடவுள் நிலை
85. நிட்டை - சிவயோகம்
86. சூதானம் - சாக்கிரதை

சித்தர் பாடல்கள் - 7 திருவள்ளுவர்

திருவள்ளுவர் ஞானம்


காப்பு

அண்டம்பிண்டம் நிறைந்துநின்ற அயன்மால் போற்றி!


அகண்டம்பரி பூரணத்தின் அருளே போற்றி!
மண்டலஞ்சூழ் இரவிமதி சுடரே போற்றி!
மதுரதமி ழோதும் அகத்தியனே போற்றி!
எண்டிசையும் புகழுமென்றன் குருவே போற்றி!
இடைகலையின் சுழுமுனையின் கமலம் போற்றி!
குண்டலிக்குள் அமர்ந்து நின்ற குகனே போற்றி!
குருமுனியின் தாளினையெப் போதும் போற்றி!1

கட்டளைக் கலித்துறை

அன்னை யெனுங்கர்ப்ப மதனில்வந் துமதிலேயிருந்தும்
நன்னயமாயய்ப் பத்துத்திங்களு நானகத் தேயிருந்தேன்
என்ன அதிசயங் காணிவ்வுலகி லேயமைந்த
உன்னதமெல்லா மமைந்தேன் உண்மையைக் காண்கிலரே. 1

அம்புவி தன்னிலேயுதித் தாய்ந்தறி பாடைதன்னை
வம்புலகத் தார்வசிய மாய்க்கைப் பிடித்தேபிரிந்து
கும்பி தனிலேயுழன்று மக்குண்டலி பொற்கமலம்
நம்பியிருந்தேன் சிலநாள் ரகசியங் காண்கிலனே! 2

தரவு கொச்சகம்

அண்டரண்ட வான்புவியும் ஆகமத்தி னுட்பொருளும்
கண்டிதமா யான்விளங்குக் காயமதி லேயறியும்
வண்டரெனை நீசனென்ற வாறுதனை யேயழித்தேன்
விண்டரக சியந்தன்னை விளக்கமது காண்கிலரே. 3

வையமதி லேயுதிக்கு மாண்பர்கனே யுங்களுயிர்
மெய்யென் றிருந்தசைவு வெளிப்படுவ தென்னவிதம்?
அய்யமில்லா வாழ்ந்துலகில் ஆண்மையாய்ப் பூண்டமதிப்
பொய்யெனுமிவ் வாழ்க்கையது போகுஞ்சுடு காடுளதே! 4

கட்டளைக் கலித்துறை

வீடானமூலச் சுழிநாத வீட்டில்விளங்கும் விந்து
நீடாழி லோகந்தழைத்துப் பெருகியு நின்றிலகுந்
தேடாதழித்த பொருளான பொக்கிடந் தேடியென்ன
காடானநாடு சுடுகாடு சேர்வதுங் கண்டிலரே! 5

எழுவகைத் தோற்றமும் நால்வகை யோனியிலெய்திடினும்
பொழியச் சுரோணிதம் நாதவிந்து பொருள் போதகத்தால்
கழியக்கழியக் கடலுயிர் தேய்பிறை கண்டுமிருந்
தழியப் பெருந்தரை யெந்நாளிருந்தும் அனித்தியமே! 6

எந்நா ளிருந்தென்ன முன்னாளனுப்படி யிந்தவுடல்
தன்னா லழிவதுந் தானறியாதெனத் தந்தைவிதி
உன்னலழிவ துடலுயிர் காயமொழிவ துங்கண்
டந்நா ளனுப்படி கண்டுபிருந் தறியாதவரே ? 7

யோனிக்குளாசை யழியா தனித்தியம் உங்களுயிர்
தேனிக்குள் இன்பஞ்சுகாதித மோவருஞ் சிற்றின்பத்தில்
ஊனற்றுக்காய முடலற்று போம்பொழு தொன்றறியா
ஈனர்க்குச் சொர்க்கஞ் சுடுகாடொழிய இனியில்லையே. 8

நேரிசை வெண்பா

இந்தவுடல் காயம் இறந்துவிடு மிவ்வுலகில்
வந்தவழி தானறியா வாழ்க்கை - இந்தவுடல்
அற்பக் குழியி லரவ மிருப்பதெனும்
கற்பகத்தை யாண்டிடுமோ காண். 9

ஞானமறிந் தோர்க்கு நமனில்லை நாள்தோறும்
பானமதை யுண்டு பசியினால் - ஞானமது
கண்டால் உடலுயி ருங்காயம் வலுவாகும்
உண்டால் அமிர்தரச முண். 10

சுழியறியார்க் கென்ன சுகமறியார்க் கென்ன
வழியறியார்க் கென்ன எய்துமாறு - சுழியறியா
மூலமறிந் தவ்வழியில் முத்தியடை யார்க்குநமன்
காலனவர்க் கேமரணங் காண். 11

வேத மறைஞான மெய்யுணர்வு தானாகில்
நாதனரு ளால்பதவி நாடுமே - வேதமறை
னாலு பொருளுள் நற்பொருளின் ஆற்றியப்
பாலுமது நெய்யெனவும் பார். 12

முதலிருந்த ஊழ்வினையை முப்பாழைச் சுட்டுப்
பதறா மதிபாடு பட்டேன் - முதலிருந்த
நல்வினையுந் தீவினையு நாடாம லும்பிறந்து
வல்வினையிற் போக்கிவிட்டேன் வாழ்வு. 13

காயசித்தி யாலெனது கன்மவினை போக்கியபின்
மாயசித்தி மூலசுழி வாய்க்குமே - காயசித்தி
மூலப் புளியால் முதல்தீட்சை யாச்சுது இனிக்
காலமென்னி ரண்டாண்டில் காண். 14

கல்லுப்பின் வாருங் கருத்தறியா துண்டுமனு
வல்வினைக் குள்ளாகி மரணமார் - கல்லுப்பு
வெள்ளைக் கல்லுப்பு வெகுவிதமாய் வந்தாலும்
உள்ளமதி லுண்டென்றே உன். 15

என்றும்இந் துப்பாகும் எண்சாணு டலிருக்கக்
கண்டுமறி யாததென்ன காரணமோ - என்றுமதி
வாரி யமுரியதை வன்னிவிட்டுக் காய்ச்சியபின்
வீரியமா யானுணரு மெய். 16

உப்பின் கசடுதான் ஊறலது மாறினதால்
மூப்புசுன்ன மாவதற்கு முன்னமே - உப்பதனால்
கற்பாந்தங் கோடி காய மிதுவலுத்துச்
சொற்பாயும் வாசியில் தேகம். 17

அஞ்சுபஞ்ச பூதம் அறிந்தால் அனித்தியம்போல்
அஞ்சு வசப்படுவ தாண்டதனில் - அஞ்சினையும்
கண்டறி வோர்ஞானக் கார்சி யதினினைவு
விண்டறிய லாமே விதி. 18

எண்சாணாந் தேக மெடுத்தாலென் னாண்டையே
பெண்சாரல் நீக்கியே பேரின்பம் - க்ண்காணத்
தேக மொழியாமல் சித்தி பெறுஞானம்
யோகசித்தி போசைவிதி யுன். 19

சித்தர் பாடல்கள் - 6 திருமூல நாயனார்

திருமூல நாயனார் ஞானம்


அடியாகி அண்டரண்டத் தப்பால் ஆகி


அகாரமெனுமெழுத் ததுவே பாதமாகி
முடியாகி நடுவாகி மூலந் தன்னில்
முப்பொருளுந் தானாகி முதலுமாகிப்
படியாய்முப் பாழற்றுப் படிக்கு மப்பாற்
படிகடந்த பரஞ்சோதிப் பதியுமாகி
அடியாகு மூலமதே அகார மாகி
அவனவளாய் நின்றநிலை யணுவ தாமே. 1

அதுவாகி அவனளாய் எல்லா மாகி
அடிநடுவு முடிவாகி யகண்ட மாகிப்
பொதுவாகிப் பல்லுயிர்க ளனைத்துக் கெல்லாம்
புகலிடமாய் எப்பொருட்கு மூலமாகி
மதுவாகி வண்டாகிச் சுவையு மாகி
மலராகி மணமாகி மதிக்க வொண்ணா
அதுவாரும் அகாரமதே மூலமாகி
அண்டமெல்லாந் தாங்கிநின்ற அம்மூலமே. 2

மூலமெனு மாதார வட்டந் தானே
முச்சுடரு முக்கோண மூன்று நாடிச்
சீலமெனுஞ் சிவலிங்க பாத தீர்த்தந்
திருவடியுந் திருமேனி நடமுமாகும்
கோலமுடன் அன்ட மெல்லாந் தாங்கிக்கொண்டு
கொழுந்து விட்டகம்பமதாய் மேலேநோக்கி
ஆலமுண்ட கண்டமெலாந் தானாய் நின்ற
அகாரமுதல் அவ்வெழுத்தை அறிந்துபாரே. 3

அரிந்ததுவுந் தற்பரமே அகார மாகும்
அறிவுடைய உகாரம்சிற் பரம தாகும்
பிறந்ததுவு முலகமெலாஞ் சமயந் தானாம்
பேதமெனுங் கருவிவகை யெல்லா மாகும்
அறிந்ததுவும் அகாரமெனும் பாதந் தன்னை
அடிமுடியென்று அனுதினமும் அறிந்து நோக்கே. 4

நோக்கமுடன் மூலமெனும் பாதந் தன்னை
நுண்பொருளாஞ் சிற்பரத்தினூடே நோக்கு
தீர்க்கமுட னாதார வகையுந் தாண்டித்
திருநயனம் நாசிநெற்றி நடுவே பார்த்துப்
போக்கறிந்திங் கிந்தநிலை நோக்க வல்லார்
புரிசடையோன் தன்னுடைய புதல்வ ராவார்
ஆக்கமுடன் அருட்சுடர்போற் குருவைத் தானே
அனுதினமும் நோக்கி நிற்பார் ஆசானாமே. 5

ஆசானு மீசானு மொன்றே யாகும்
அவனவளு மொன்றாகும் அது தானாகும்
பேசாத மந்திரமு மிதுவே யாகும்
பேரொளியின் வடிவாகும் பேரு மாகும்
நேசாருங் கலைகளெலாந் தானே யாகும்
நிலையான ஓங்கார பூட மாகும்
ஈசானை ஆசானாய்க் காணும் பேர்க்கிங்
கின்பமுடன் கயிலாச மெய்த லாமே. 6

எய்தரியா பரசிவத்தின் மூலந் தன்னில்
இருசுடரும் உதித்தொடுங்கு மிடமே யென்று
மெய்த்தொழுயுஞ் சுழுமுனையே கம்ப மாகி
மெய்ப்பொருளாஞ் சோதி யென மேவி நிற்கும்
இவ்வகையே மூலமெனும் பாதந் தன்னை
இருநேர மர்றிடத்தே யிறைஞ்சிக் காணே. 7

காண்பதுதான் பேரொளியின் காட்சி யாகும்
காணரிய பொருளாகுங் காட்டும் போதே
ஆண் பெண்ணாய் அலியாகி அடியுமாகி
அப்பாலைக் கப்பாலாய் அமர்ந்த சோதி
வீண்பயிலும் வேதமெல்லாந் தேடிக் கானா
வெறும்பாழ தாகியே மேவி நின்றார்
சேண்பயிலும் செகசோதி மூலந் தன்னைத்
தேடரிய பாதவென்றே தெளிந்து நோக்கே. 8

தெளிவரிய பாதமது கார மாகிச்
சிற்பரமுந் தற்பரமுந் தானேயாகி
அழிவரிய சோதியது தானே யாகி
அடிநடுவு முடியாகி யமர்ந்து நின்று
மொழிவரிய முதலாகி மூலமாகி
முச்சுடர்ந் தானாகி முடிந்த் சோதி
சுழியினிலே முனையாகிக் கோப மாகிச்
சொல்லரிய வெழுத்தொன்றே தொகுத்துப் பாரீர். 9

சித்தர் பாடல்கள் - 5 சட்டைமுனி

சட்டைமுனி ஞானம்


எண்சீர் விருத்தம்

காணப்பா பூசைசெய்யும் முறையைக் கேளாய்


கைம்முறையாய்ச் சுவடிவைத்துப் பூசை செய்வார்
பூணப்பா சிலபேர்தான் தீபம் வைத்துப்
புகழாகப் பூசை செய்வார் பெண்ணை வைத்தும்
நாளப்பா சக்கரத்தைப் பூசை செய்வார்
நம்முடைய பூசையென்ன மேருப் போலே
ஓதப்பா நாற்பத்துமுக் கோணம் வைத்தே
உத்தமனே, பூசை செய்வார் சித்தர்தாமே. 1

தானென்ற மேருவைத்தான் பூசை செய்வார்
சாபமிட்டால் அண்டரண்டம் தீயா வேகும்
தேனென்ற மேருவுக்குத் தீட்சை வேண்டும்
சிறுபிள்ளை யாமொருவன் தீண்டப்போகா
வானென்ற மேருவைத்தான் பூசை செய்தோர்
வாய்திறந்தே உபதேசம் சொன்ன ராகிற்
கோனென்ற வாதசித்தி கவன சித்தி
கொள்ளையிட்டான் அவன் சீடன் கூறினானே. 2

கூறியதோர் வாலையின்மூன் றெழுத்தைக் கேளாய்
குறியறிந்து பூசை செய்து பின்பு கேளாய்
மாறியதோர் திரிபுரையெட் டெழுத்தைக் கேளாய்
மைந்தனே இவளை நீபூசை பண்ணத்
தேறியதோர் புவனைதனின் எழுத்தைக் கேளாய்
திறமாகப் புவனையைநீ பூசை பண்ணு
ஆறியதோர் யாமளையா றெழுத்தை கேளாய்
அவளுடைய பதம் போற்றிப் பூசைபண்ணே. 3

பண்ணியபின் யாமளைஐந் தெழுத்தைக் கேளாய்
பண்பாகத் தீட்சையைந்தும் முடிந்த பின்பு
வண்ணியதோர் வாசியென்ற யோகத் துக்கு
மைந்தனே வைத்துப்ராணா யாமந் தீரும்
கண்ணியதோர் இத்தனையும் அறிந்தி ருந்தாம்
காயசித்தி விக்கினங்கள் இல்லை யில்லை
உண்ணியதோர் உலகமென்ன சித்தர் சொன்ன
உத்தமனே விட்டகுறை எடுக்கும் காணே! 4

தியங்கினால் கெர்சித்துத் துரத்துச் சண்ணுஞ்
சீறியர் மிலேச்சரையே சுகத்தி ன்ள்ளே
மயங்கினார் நாலுபா தத்தி னுள்ளும்
மனஞ்செவ்வை யாவதெப்போ தறிவதெப்போ ?
தயங்கினார் உலகத்திற் கோடி பேர்கள்
சாவதும் பிறப்பதுங்கா வடிபோ லாச்சு
துயங்கினார் துயரத்தால் ஞானம் போச்சு
சுடுகாட்டில் அறிவதுபோல் சுத்தப் பாழே. 5

பாழான மாய்கைசென் றொழிவ தெப்போ ?
பரந் தமனஞ் செவ்வையாய் வருவ தெப்போ ?
வாளான விழியுடைய பெண்ணைச் சேரும்
மயக்கமற்று நிற்பதெப்போ ? மனமே ஐயோ ?
காழான உலகமத னாசை யெல்லாங்
கருவறுத்து நிற்பதெப்போ ? கருதி நின்ற
கோளான கருவிவிட்டு மேலே நோக்கிக்
கூடுவது மேதனென்றால் மூலம்பாரே. 6