Powered By Blogger

18 ஜூன் 2014

சித்தர் பாடல்கள் - 5 சட்டைமுனி

சட்டைமுனி ஞானம்


எண்சீர் விருத்தம்

காணப்பா பூசைசெய்யும் முறையைக் கேளாய்


கைம்முறையாய்ச் சுவடிவைத்துப் பூசை செய்வார்
பூணப்பா சிலபேர்தான் தீபம் வைத்துப்
புகழாகப் பூசை செய்வார் பெண்ணை வைத்தும்
நாளப்பா சக்கரத்தைப் பூசை செய்வார்
நம்முடைய பூசையென்ன மேருப் போலே
ஓதப்பா நாற்பத்துமுக் கோணம் வைத்தே
உத்தமனே, பூசை செய்வார் சித்தர்தாமே. 1

தானென்ற மேருவைத்தான் பூசை செய்வார்
சாபமிட்டால் அண்டரண்டம் தீயா வேகும்
தேனென்ற மேருவுக்குத் தீட்சை வேண்டும்
சிறுபிள்ளை யாமொருவன் தீண்டப்போகா
வானென்ற மேருவைத்தான் பூசை செய்தோர்
வாய்திறந்தே உபதேசம் சொன்ன ராகிற்
கோனென்ற வாதசித்தி கவன சித்தி
கொள்ளையிட்டான் அவன் சீடன் கூறினானே. 2

கூறியதோர் வாலையின்மூன் றெழுத்தைக் கேளாய்
குறியறிந்து பூசை செய்து பின்பு கேளாய்
மாறியதோர் திரிபுரையெட் டெழுத்தைக் கேளாய்
மைந்தனே இவளை நீபூசை பண்ணத்
தேறியதோர் புவனைதனின் எழுத்தைக் கேளாய்
திறமாகப் புவனையைநீ பூசை பண்ணு
ஆறியதோர் யாமளையா றெழுத்தை கேளாய்
அவளுடைய பதம் போற்றிப் பூசைபண்ணே. 3

பண்ணியபின் யாமளைஐந் தெழுத்தைக் கேளாய்
பண்பாகத் தீட்சையைந்தும் முடிந்த பின்பு
வண்ணியதோர் வாசியென்ற யோகத் துக்கு
மைந்தனே வைத்துப்ராணா யாமந் தீரும்
கண்ணியதோர் இத்தனையும் அறிந்தி ருந்தாம்
காயசித்தி விக்கினங்கள் இல்லை யில்லை
உண்ணியதோர் உலகமென்ன சித்தர் சொன்ன
உத்தமனே விட்டகுறை எடுக்கும் காணே! 4

தியங்கினால் கெர்சித்துத் துரத்துச் சண்ணுஞ்
சீறியர் மிலேச்சரையே சுகத்தி ன்ள்ளே
மயங்கினார் நாலுபா தத்தி னுள்ளும்
மனஞ்செவ்வை யாவதெப்போ தறிவதெப்போ ?
தயங்கினார் உலகத்திற் கோடி பேர்கள்
சாவதும் பிறப்பதுங்கா வடிபோ லாச்சு
துயங்கினார் துயரத்தால் ஞானம் போச்சு
சுடுகாட்டில் அறிவதுபோல் சுத்தப் பாழே. 5

பாழான மாய்கைசென் றொழிவ தெப்போ ?
பரந் தமனஞ் செவ்வையாய் வருவ தெப்போ ?
வாளான விழியுடைய பெண்ணைச் சேரும்
மயக்கமற்று நிற்பதெப்போ ? மனமே ஐயோ ?
காழான உலகமத னாசை யெல்லாங்
கருவறுத்து நிற்பதெப்போ ? கருதி நின்ற
கோளான கருவிவிட்டு மேலே நோக்கிக்
கூடுவது மேதனென்றால் மூலம்பாரே. 6

சித்தர் பாடல்கள் - 4 குதம்பைச் சித்தர்

குதம்பைச் சித்தர் பாடல்கள்


கண்ணிகள்

வெட்ட வெளிதன்னை மெய்யென்று இருப்போர்க்குப்


பட்டயம் ஏதுக்கடி - குதம்பாய்
பட்டயம் ஏதுக்கடி ? 1

மெய்ப்பொருள் கண்டு விளங்கும்மெய்ஞ் ஞானிக்குக்
கற்பங்கள் ஏதுக்கடி - குதம்பாய்
கற்பங்கள் ஏதுக்கடி ? 2

காணாமற் கண்டு கருத்தோடு இருப்போர்க்கு
வீணாசை ஏதுக்கடி - குதம்பாய்
வீணாசை ஏதுக்கடி ? 3

வஞ்சகம் அற்று வழிதன்னைக் கண்டோர்க்குச்
சஞ்சலம் ஏதுக்கடி - குதம்பாய்
சஞ்சலம் ஏதுக்கடி ? 4

ஆதாரமான அடிமுடி கண்டோர்க்கு
வாதாட்டம் ஏதுக்கடி - குதம்பாய்
வாதாட்டம் ஏதுக்கடி ? 5

நித்திரை கெட்டு நினைவோடு இருப்போர்க்கு
முத்திரை ஏதுக்கடி - குதம்பாய்
முத்திரை ஏதுக்கடி ? 6

தந்திரமான தலந்தனில் நிற்போர்க்கு
மந்திரம் ஏதுக்கடி - குதம்பாய்
மந்திரம் ஏதுக்கடி ? 7

சத்தியமான தவத்தில் இருப்போர்க்கு
உத்தியம் ஏதுக்கடி - குதம்பாய்
உத்தியம் ஏதுக்கடி ? 8

நாட்டத்தைப் பற்றி நடுவணை சேர்வோர்க்கு
வாட்டங்கள் ஏதுக்கடி - குதம்பாய்
வாட்டங்கள் ஏதுக்கடி ? 9

முத்தமிழ் கற்று முயங்குமெய்ஞ் ஞானிக்குச்
சத்தங்கள் ஏதுக்கடி - குதம்பாய்
சத்தங்கள் ஏதுக்கடி ? 10

உச்சிக்கு மேற்சென்று உயர்வெளி கண்டோர்க்கு
இச்சிப்பிங்கு ஏதுக்கடி - குதம்பாய்
இச்சிப்பிங்கு ஏதுக்கடி ? 11

வேகாமல் வெந்து வெளியெளி கண்டோர்க்கு
மோகாந்தம் ஏதுக்கடி - குதம்பாய்
மோகாந்தம் ஏதுக்கடி ? 12

சாகாமல் தாண்டித் தனிவழி போவோர்க்கு
ஏகாந்தம் ஏதுக்கடி - குதம்பாய்
ஏகாந்தம் ஏதுக்கடி ? 13

அந்தரந் தன்னில் அசைந்தாடு முத்தர்க்குத்
தந்திரம் ஏதுக்கடி - குதம்பாய்
தந்திரம் ஏதுக்கடி ? 14

ஆனந்தம் பொங்கி அறிவோடு இருப்பார்க்கு
ஞானந்தான் ஏதுக்கடி - குதம்பாய்
ஞானந்தான் ஏதுக்கடி ? 15

சித்தரக் கூடத்தைத் தினந்தினம் காண்போர்க்குப்
பத்திரம் ஏதுக்கடி - குதம்பாய்
பத்திரம் ஏதுக்கடி ? 16

முக்கோணம் தன்னில் முளைத்தமெய்ஞ் ஞானிக்குச்
சட்கோணம் ஏதுக்கடி - குதம்பாய்
சட்கோணம் ஏதுக்கடி ? 17

அட்டதிக்கெல்லாம் அசைந்தாடும் நாதர்க்கு
நட்டணை ஏதுக்கடி - குதம்பாய்
நட்டணை ஏதுக்கடி ? 18

முத்தி பெற்றுள்ளம் முயங்குமெய்ஞ் ஞானிக்குப்
பத்தியம் ஏதுக்கடி - குதம்பாய்
பத்தியம் ஏதுக்கடி ? 19

அல்லலை நீக்கி அறிவோடு இருப்போருக்குப்
பல்லாக்கு ஏதுக்கடி - குதம்பாய்
பல்லாக்கு ஏதுக்கடி ? 20

அட்டாங்க யோகம் அறிந்தமெய்ஞ் ஞானிக்கு
முட்டாங்கம் ஏதுக்கடி - குதம்பாய்
முட்டாங்கம் ஏதுக்கடி ? 21

வேகம் அடக்கி விளங்குமெய்ஞ் ஞானிக்கு
யோகந்தான் ஏதுக்கடி - குதம்பாய்
யோகந்தான் ஏதுக்கடி ? 22

மாத்தானை வென்று மலைமேல் இருப்போர்க்குப்
பூத்தானம் ஏதுக்கடி - குதம்பாய்
பூத்தானம் ஏதுக்கடி ? 23

செத்தாரைப் போலத் திரியுமெய்ஞ் ஞானிக்கு
கைத்தாளம் ஏதுக்கடி - குதம்பாய்
கைத்தாளம் ஏதுக்கடி ? 24

கண்டாரை நோக்கிக் கருத்தோடு இருப்போர்க்குக்
கொண்டாட்டம் ஏதுக்கடி - குதம்பாய்
கொண்டாட்டம் ஏதுக்கடி ? 25

காலனை வென்ற கருத்தறி வாளர்க்குக்
கோலங்கள் ஏதுக்கடி - குதம்பாய்
கோலங்கள் ஏதுக்கடி ? 26

வெண்காயம் உண்டு மிளகுண்டு சுக்குண்டு
உண்காயம் ஏதுக்கடி - குதம்பாய்
உண்காயம் ஏதுக்கடி ? 27

மாங்காய்ப்பால் உண்டு மலைமேல் இருப்போர்க்குத்
தேங்காய்ப்பால் ஏதுக்கடி - குதம்பாய்
தேங்காய்ப்பால் ஏதுக்கடி ? 28

பட்டணஞ் சுற்றிப் பகலே திரிவோர்க்கு
முட்டாக்கு ஏதுக்கடி - குதம்பாய்
முட்டாக்கு ஏதுக்கடி ? 29

தாவரமில்லை தனக்கொரு வீடில்லை
தேவாரம் ஏதுக்கடி - குதம்பாய்
தேவாரம் ஏதுக்கடி ? 30

தன்னை அறிந்து தலைவனைச் சேர்ந்தோர்க்குப்
பின்னாசை ஏதுக்கடி - குதம்பாய்
பின்னாசை ஏதுக்கடி ? 31

பத்தாவுந் தானும் பதியோடு இருப்பார்க்கு
உத்தாரம் ஏதுக்கடி - குதம்பாய்
உத்தாரம் ஏதுக்கடி ? 32

சித்தர் பாடல்கள் - 3 கடுவெளிச் சித்தர்

கடுவெளிச் சித்தர் - ஆனந்தக் களிப்பு


பல்லவி

பாபஞ்செய் யாதிரு மனமே - நாளைக்
கோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான்
பாபஞ்செய் யாதிரு மனமே.

சரணங்கள்

சாபம் கொடுத்திட லாமோ ? - விதி


தன்னை நம்மாலே தடுத்திடலாமோ ?
கோபந் தொடுத்திடலாமோ ? - இச்சை
கொள்ளக் கருத்தைக் கொடுத்திடலாமோ ? 1

சொல்லருஞ் சூதுபொய் மோசம் - செய்தால்
சுற்றத்தை முற்றாய்த் துடைத்திடும் நாசம்
நல்லபத்த திவிசு வாசம் - எந்த
நாளும் மனிதர்க்கு நம்மையாய் நேசம். 2

நீர்மேற் குமிழியிக் காயம் - இது
நில்லாது போய்விடும் நீயறிமாயம்
பார்மீதில் மெத்தவும் நேயம் - சற்றும்
பற்றா திருந்திடப்பண்ணு முபாயம். 3

நந்த வனத்திலோ ராண்டி - அவன்
நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டிக்
கொண்டுவந் தானொரு தோண்டி - மெத்தக்
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி. 4

தூடண மாகச்சொல் லாதே - தேடுஞ்
சொத்துகளிலொரு தூசும் நில்லாதே
ஏடாணை மூன்றும் பொல்லாதே - சிவத்
திச்சைவைத் தாலெம லோகம் பொல்லாதே. 5

நல்ல வழிதனை நாடு- எந்த
நாளும் பரமனை நத்தியே தேடு
வல்லவர் கூட்டத்திற் கூடு - அந்த
வள்ளலை நெஞ்சினில் வாழ்த்திக் கொண்டாடு. 6

நல்லவர் தம்மைத் தள்ளாதே - அறம்
நாலெட்டில் ஒன்றேனும் நாடித்தள் ளாதே
பொல்லாக்கில் ஒன்றுங்கொள்ளாதே - கெட்ட
பொய்மொழிக் கோள்கள் பொருந்த விள்ளாதே. 7

வேத விதிப்படி நில்லு - நல்லோர்
மேவும் வழியினை வேண்டியே செல்லு
சாத நிலைமையே சொல்லு - பொல்லாச்
சண்டாளக் கோபத்தைச் சாதித்துக் கொல்லு. 8

பிச்சையென் றொன்றுங்கே ளாதே - எழில்
பெண்ணாசை கொண்டு பெருக்கமாளாதே
இச்சைய துன்னையாளாதே - சிவன்
இச்சை கொண்டதவ்வழி யேறிமீளாதே. 9

மெஞ்ஞானப் பாதையி லேறு - சுத்த
வேதாந்த வெட்ட வெளியினைத் தேறு
அஞ்ஞான மார்க்கத்தைத் தூறு - உன்னை
அண்டினோர்க் கானந்த மாம்வழி கூறு. 10

மெய்குரு சொற்கட வாதே - நன்மை
மென்மேலுஞ் செய்கை மிகவடக்காதே
பொய்க்கலை யால்நடவாதே - நல்ல
புத்தியைப் பொய்வழி தனில் நடத்தாதே. 11

கூடவருவ தொன்றில்லை - புழுக்
கூடெடுத் திங்ஙன் உலைவதே தொல்லை
தேடரு மோட்சம தெல்லை - அதைத்
தேடும் வழியைத் தெளிவோரு மில்லை. 12

ஐந்துபேர் சூழ்ந்திடுங் காடு - இந்த
ஐவர்க்கும் ஐவர் அடைந்திடும் நாடு
முந்தி வருந்திநீ தேடு - அந்த
மூலம் அறிந்திட வாமுத்தி வீடு. 13

உள்ளாக நால்வகைக் கோட்டை - பகை
ஓடப் பிடித்திட்டால் ஆளலாம் நாட்டை
கள்ளப் புலனென்னுங் காட்டை - வெட்டிக்
கனலிட் டெரித்திட்டாற் காணலாம் வீட்டை. 14

காசிக்கோ டில்வினை போமோ - அந்தக்
கங்கையா டில்கதி தானுமுண் டாமோ ?
பேசுமுன் கன்மங்கள் சாமோ ? - பல
பேதம் பிறப்பது போற்றினும் போமோ. 15

பொய்யாகப் பாராட்டுங் கோலம் - எல்லாம்
போகவே வாய்த்திடும் யார்க்கும் போங்காலம்
மெய்யாக வேசுத்த காலம் - பாரில்
மேவப் புரிந்திடில் என்னனு கூலம் ? 16

சந்தேக மில்லாத தங்கம் - அதைச்
சார்ந்து கொண்டாலுமே தாழ்விலாப் பொங்கம்;
அந்த மில்லாதவோர் துங்கம் - எங்கும்
ஆனந்தமாக நிரம்பிய புங்கம். 17

பாரி லுயர்ந்தது பக்தி - அதைப்
பற்றின பேர்க்குண்டு மேவரு முத்தி
சீரி லுயரட்ட சித்தி - யார்க்குஞ்
சித்திக்கு மேசிவன் செயலினால் பத்தி. 18

அன்பெனும் நன்மலர் தூவிப் - பர
மானந்தத் தேவியின் அடியிணை மேவி
இன்பொடும் உன்னுட லாவி - நாளும்
ஈடேற்றத் தேடாய்நீ இங்கே குலாவி. 19

ஆற்றும் வீடேற்றங் கண்டு - அதற்
கான வழியை யறிந்து நீகொண்டு
சீற்றமில் லாமலே தொண்டு - ஆதி
சிவனுக்குச் செய்திடிற் சேர்ந்திடும் தொண்டு. 20

ஆன்மாவால் ஆடிடு மாட்டம் - தேகத்
தான்மா அற்றபோதே யாமுடல் வாட்டம்
வான்கதி மீதிலே நாட்டம் - நாளும்
வையிலுனக்கு வருமே கொண்டாட்டம். 21

எட்டுமி ரண்டையும் ஓர்ந்து - மறை
எல்லா முனக்குள்ளே ஏகமாய்த் தேர்ந்து
வெட்ட வெளியினைச் சார்ந்து - ஆனந்த
வெள்ளத்தின் மூழ்கி மிகுகளி கூர்ந்து. 22

இந்த வுலகமு முள்ளு - சற்றும்
இச்சைவையாமலே யெந்நாளும் தள்ளு
செத்தேன் வெள்ளம் மதைமொள்ளு - உன்றன்
சிந்தைதித் திக்கத் தெவிட்டவுட் கொள்ளு. 23

பொய்வேதந் தன்னைப் பாராதே - அந்தப்
போதகர் சொற்புத்தி போத வாராதே!
மையவிழி யாரைச் சாராதே - துன்
மார்க்கர்கள் கூட்டத்தில் மகிழ்ந்து சேராதே. 24

வைதோரைக் கூடவை யாதே: - இந்த
வையம் முழுதும் பொய்த்தாலும் பொய்யாதே
வெய்ய வினைகள் செய்யாதே - கல்லை
வீணிற் பறவைகள் மீதி லெய்யாதே. 25

சிவமன்றி வேறே வேண்டாதே - யார்க்குந்
தீங்கான சண்டையைச் சிறக்கத் தூண்டாதே
தவநிலை விட்டுத் தாண்டாதே - நல்ல
சன்மார்க்க மில்லாத நூலை வேண்டாதே. 26

பாம்பினைப் பற்றியாட் டாதே - உன்றன்
பத்தினி மார்களைப் பழித்துக்காட் டாதே
வேம்பினை யுலகிலூட் டாதே - உன்றன்
வீறாப்புத் தன்னை விளங்கநாட் டாதே. 27

போற்றுஞ் சடங்கை நண்ணாதே - உன்னைப்
புகழ்ந்து பலரிற் புகல வொண்ணாதே;
சாற்றுமுன் வாழ்வை யெண்ணாதே - பிறர்
தாழும் படிக்கு நீதாழ்வைப் பண்ணாதே. 28

கஞ்சாப் புகைபிடி யாதே - வெறி
காட்டி மயங்கிய கட்குடி யாதே!
அஞ்ச வுயிர் மடியாதே - பத்தி
அற்றவஞ் ஞானத்தின் நூல்படி யாதே. 29

பத்தி யெனுமேணி நாட்டித் - தொந்த
பந்தமற்ற விடம் பார்த்ததை நீட்டிச்
சத்திய மென்றதை யீட்டி - நாளும்
தன்வச மாக்கிக்கொள் சமயங்க ளோட்டி. 30

செப்பரும் பலவித மோகம் - எல்லாம்
சீயென் றொறுத்துத் திடங்கொள் விவேகம்
ஒப்பரும் அட்டாங்க யோகம் - நன்றாய்
ஓர்ந்தறி வாயவற் றுண்மைசம் போகம். 31

எவ்வகை யாகநன் னீதி - அவை
எல்லா மறிந்தே யெடுத்து நீபோதி
ஒவ்வா வென்ற பலசாதி - யாவும்
ஒன்றென் றறிந்தே யுணர்ந்துற வோதி. 32

கள்ள வேடம் புனையாதே - பல
கங்கையி லேயுன் கடன் நனையாதே
கொள்ளை கொள்ள நினையாதே - நட்பு
கொண்டு புரிந்துநீ கோள் முனையாதே. 33

எங்கும் சுயபிர காசன் - அன்பர்
இன்ப இருதயத் திருந்திடும் வாசன்
துங்க அடியவர் தாசன் - தன்னைத்
துதுக்கிற் பதவி அருளுவான் ஈசன். 34

சித்தர் பாடல்கள் - 2 இராமதேவர்

இராமதேவர் - பூஜாவிதி


ஆதியென்ற மணிவிளக்கை அறி வேணும்


அகண்டபரி பூரணத்தைக் காண வேணும்
சோதியென்ற துய்யவெளி மார்க்க மெல்லாஞ்
சுகம்பெறவெ மனோன்மணி யென்னாத்தாள் தன்னை
நீதியென்ற பரஞ்சோதி ஆயி பாதம்
நிற்குணத்தி னின்றநிலை யாருங் காணார்
வேதியென்ற வேதாந்தத் துள்ளே நின்று
விளங்கவும் பூசையிது வீண் போகாதே. 1

போகாமல் நின்ற தோரையா நீதான்
பூரணத்தி னானகலை ஐந்தும் பெற்றே
ஆகாம லானந்த வல்லி யாலே
அடிமுடியி னடுவாசி யாறுக் குள்ளே
வாகாமல் வாலையுடை மூலத் தாலே
வழிதோன்றும் மூன்றெழுத்தை யுரைக்க வேணும்
சாகாமல் சாகுமடா இந்த மூலஞ்
சசிவட்டம் நடுக்கோண முக்கோண மாமே. 2

முக்கோண மூசுழிதற் கோண மாகி
முதலான மூலமணி வாலை தன்னில்
நாற்கோண நாலுவரை நயந்து காக்க
நாயகியாள் பரஞ்சோதி நாட்ட முற்றுத்
தீக்கோணத் திக்குதிசை யிருந்த மாயம்
தெரிந்திடவே யுரைத்திட்டேன் விவர மாக
தாக்கோண விட்டகுறை வந்த தென்றால்
தனியிருந்து பார்த்தவனே சித்த னாமே. 3

சித்தான மூன்றெழுத்துச் செயலாஞ் சோதி
சீரியவை யுங்கிலியும் சவ்வு மாகி
முத்தான லட்சவுரு செபிக்கச் சித்தி
முற்றிடுமே யெதிரியென்ற பேய்கட் குந்தான்
வித்தான வித்தையடா முட்டும் பாரு
விரிவான முகக்கருவு மூன்று கேளு
சத்தான அதன்கருவும் சிலையில் வைத்துச்
சதுரான விதிவிவர மறியக் கேளே. 4

கேளப்பா பலிகொடுத்துப் பூசை செய்து
கிருபையுள்ள வுருவேற்றித் திட்ட மாக
வாளப்பா சுடுகாட்டின் சாம்பல் தன்னில்
வளமாகப் புதைத்துவிடு நடுச் சாமத்தில்
ஆளப்பா அடியற்று மரண மாகி
ஆண்டிருந்த தவசுநிலை தான்கு லைந்து
காணப்பா கண்மணியே வீழ்வான் பாவி
கதைதெரியச் சொல்லுகிறேனின்னம் பாரே. 5

இன்னமின்னங் கண்முன்சோ தனையு மாகும்
ஈடேற வேணுமென்றா லிதனிற் சூட்சம்
அன்னமின்னா அகிற்கட்டை தேவ தாரம்
அறிவுடைய முளைச்சீவிச் சிங்கை யோதி
வன்னமின்னார் பேர்சொல்லி நசியென் றேதான்
வலுவான நூற்றெட்டு வுருவம் போடு
சன்னமின்னா மரத்தடியி லிருந்து கொண்டு
சதிராக ஆணிகொண் டடித்தி டாயே. 6

அடித்தமுளை பிடுங்கிவைத் திறுக்கிப் போடு
ஆனந்த வுருக்குலைந்து பட்டுப் போகும்
தொடுத்தமுதல் நாலாநாள் கண்டு தானுந்
தொகைமுடிந்து வாச்சுதடா விந்தப் போக்கு
விடுத்தபின்பு விடமேறிக் கருவிப் போகும்
விரிந்துரைத்தேன் பூட்டிதுவே வீண் போகாது
தடுத்துவிடு நகரத்தி லடித்துப் பாரு
தட்டழிந்து உயிர்புதலாய்ச் சேத மாமே. 7

ஆமப்பா அடிதரிசிங் களத்தி லானால்
அதியங்காண் கண்டவர்க்கே யடைக்க லம்போம்
வீமப்பா வெளிதிறந்து சொன்னேன் பாரு
விளையாட்டே யில்லையடா இந்தப் போக்கு
சோமப்பா சுத்தியுடன் தலையும் மூழ்கிச்
சுருக்கெனவே தியானிப்பா யாத்தாள் மூலம்
தாமப்பா சத்தியமே சொன்னேன் பாரு
தவறாது ராமனுடை வாக்யந் தானே. 8

தானென்ற மூலமுடன் சித்தி பண்ணு
தனதான நூற்றெட்டுக் குள்ளே சித்தி
ஆனென்ற அண்டர் பதியெட்டு மாடும்
அறுபத்து நால்மூலி யெல்லா மாடும்
கோனென்ற கோடு சித்துக் கணத்திலாடுங்
குணமாக ரேவதிநாட் செய்ய நன்று
வானென்ற அட்டமியிற் செய்ய நன்று
வளர்பிறையில் செய்தவனே யோகி யாமே. 9

யோகியா யாவதற்கீ துனக்குச் சொன்னேன்
ஓகோகோ முன்னுரைத்த மூலத் தாலே
யோகிகளா யேகாந்த வல்லி யாட்கிங்
ஏட்டிலே யெழுதினதால் எல்லா மாச்சு
தாகிகளாயத் தாயுடைய கிருபை யாலே
தவமாகும் மவமாகும் சுபமுண்டாகும்
மோகிகளால் மூலபூசா விதிபத் தாலே
முத்திபெறச் சித்திவிளை பத்து முற்றே. 10

சித்தர் பாடல்கள் - 1 அழுகணிச் சித்தர்


அழுகணிச் சித்தர் பாடல்கள்


கலித்தாழிசை

மூலப் பதியடியோ மூவிரண்டு வீடதிலே
கோலப் பதியடியோ குதர்க்கத் தெருநடுவே
பாலப் பதிதனிலே தணலாய் வளர்த்தகம்பம்
மேலப் பதிதனிலே என் கண்ணம்மா!
விளையாட்டைப் பாரேனோ! 1

எண்சாண் உடம்படியோ ஏழிரண்டு வாயிலடி
பஞ்சாயக் காரர்ஐவர் பட்டணமுந் தானிரண்டு
அஞ்சாமற் பேசுகின்றாய் ஆக்கினைக்குத் தான்பயந்து
நெஞ்சார நில்லாமல் என் கண்ணம்மா!
நிலைகடந்து வாடுறண்டி! 2

முத்து முகப்படியோ முச்சந்தி வீதியிலே
பத்தாம் இதழ்பரப்பிப் பஞ்சணையின் மேலிருத்தி
அத்தை யடக்கிநிலை ஆருமில்லா வேளையிலே
குத்து விளக்கேற்றி என் கண்ணம்மா!
கோலமிட்டுப் பாரேனோ! 3

சம்பா அரிசியடி சாதம் சமைத்திருக்க!
உண்பாய் நீயென்று சொல்லி உழக்குழக்கு நெய்வார்த்து
முத்துப் போலன்னமிட்டு முப்பழமும் சர்க்கரையும்
தித்திக்குந் தேனாமிர்தம் என் கண்ணம்மா!
தின்றுகளைப் பாரேனோ! 4

பைம்பொற் சிலம்பணிந்து பாடகக்கால் மேல்தூக்கிச்
செம்பொற் கலையுடுத்திச் சேல்விழிக்கு மையெழுதி
அம்பொற் பணிபூண் டறுகோண வீதியிலே
கம்பத்தின் மேலிருந்தே என் கண்ணம்மா!
கண்குளிரப் பாரேனோ! 5

எட்டாப் புரவியடி யீராறு காலடியோ
விட்டாலும் பாரமடி வீதியிலே தான்மறித்துக்
கட்டக் கயிறெடுத்துக் கால்நாலும் சேர்த்திறுக்கி
அட்டாள தேசமெல்லாம் என் கண்ணம்மா!
ஆண்டிருந்தா லாகாதோ! 6

கொல்லன் உலைபோலக் கொதிக்குதடி யென்வயிறு
நில்லென்று சொன்னால் நிலைநிறுத்தக் கூடுதில்லை
நில்லென்று சொல்லியல்லோ நிலைநிறுத்த வல்லார்க்குக்
கொல்லென்று வந்தநமன் என் கண்ணம்மா!
குடியோடிப் போகானோ! 7

ஊற்றைச் சடலமடி உப்பிருந்த பாண்டமடி
மாற்றிப் பிறக்க மருந்தெனக்குக் கிட்டுதில்லை
மாற்றிப் பிறக்க மருந்தெனக்கு கிட்டுமென்றால்
ஊற்றைச் சடலம் விட்டேஎன் கண்ணம்மா!
உன்பாதஞ் சேரேனோ! 8

வாழைப் பழந்தின்றால் வாய்நோகு மென்றுசொல்லித்
தாழைப் பழத்தின்று சாவெனக்கு வந்ததடி
தாழைப் பழத்தைவிட்டுச் சாகாமற் சாகவல்லோ
வாழைப் பழந்தின்றால் என் கண்ணம்மா!
வாழ்வெனக்கு வாராதோ! 9

பையூரி லேயிருந்து பாழூரிலே பிறந்து
மெய்யூரில் போவதற்கு வேதாந்த வீடறியேன்,
மெய்யூரிற் போவதற்கு வேதாந்த வீடறிந்தால்
பையூரும் மெய்யூரும் என் கண்ணம்மா!
பாழாய் முடியாவோ! 10

மாமன் மகளடியோ மச்சினியோ நானறியேன்
காமன் கணையெனக்குக் கனலாக வேகுதடி
மாமன் மகளாகி மச்சினியும் நீயானால்
காமன் கணைகளெல்லாம் என் கண்ணம்மா!
கண்விழிக்க வேகாவோ! 11

அந்தரத்தை வில்லாக்கி ஐந்தெழுத்தை யம்பாக்கி
மந்திரத்தே ரேறியல்லோ மான்வேட்டை யாடுதற்குச்
சந்திரரும் சூரியரும் தாம்போந்த காவனத்தே
வந்துவிளை யாடியல்லோ என் கண்ணம்மா!
மனமகிழ்ந்து பார்ப்பதென்றோ! 12

காட்டானை மேலேறிக் கடைத்தெருவே போகையிலே
நாட்டார் நமைமறித்து நகைபுரியப் பார்ப்பதென்றோ
நாட்டார் நமைமறித்து நகைபுரியப் பார்த்தாலும்
காட்டானை மேலேறி என் கண்ணம்மா!
கண்குளிரக் காண்பேனோ! 13

உச்சிக்குக் கீழடியோ ஊசிமுனை வாசலுக்குள்
மச்சுக்கு மேலேறி வானுதிரம் தானேடுத்துக்
கச்சை வடம்புரியக் காயலூர்ப் பாதையிலே
வச்சு மறந்தல்லோ என் கண்ணம்மா!
வகைமோச மானேண்டி! 14

மூக்கால் அரும்பெடுத்து மூவிரண்டாய்த் தான்தூக்கி
நாக்கால் வளைபரப்பி நாற்சதுர வீடுகட்டி
நாக்கால் வலைபரப்பி நாற்சதுர வீட்டினுள்ளே
மூக்காலைக் காணாமல் என் கண்ணம்மா
முழுதும் தவிக்கிறண்டி! 15

காமமலர் தூவக் கருத்தெனக்கு வந்ததடி
பாமவலி தொலைக்கப் பாசவலி கிட்டுதில்லை
பாமவலி தொலைக்கப் பாசவலி நிற்குமென்றால்
காமமலர் மூன்றும் என் கண்ணம்மா!
கண்ணெதிரே நில்லாவோ! 16

தங்காயம் தோன்றாமல் சாண்கலக் கொல்லைகட்டி
வெங்காய நாற்றுவிட்டு வெகுநாளாய்க் காத்திருந்தேன்
வெங்காயந் தின்னாமல் மேற்றொல்லைத் தின்றலவோ
தங்காயந் தோணாமல் என் கண்ணம்மா!
சாகிறண்டி சாகாமல்! 17

பற்றற்ற நீரதிலே பாசி படர்ந்ததுபோல்
உற்றுற்றுப் பார்த்தாலும் உன்மயக்கம் தீரவில்லை
உற்றுற்றுப் பார்த்தாலும் உன்மயக்கந் தீர்ந்தக்கால்
பற்றற்ற நீராகும் என் கண்ணம்மா!
பாசியது வேறாமோ! 18

கற்றாரும் மற்றாருந் தொண்ணூற்றோ டாறதிலே
உற்றாரும் பெற்றாரும் ஒன்றென்றே யானிருந்தேன்
உற்றாரும் பெற்றாரும் ஊரைவிட்டுப் போகையிலே
சுற்றாரு மில்லாமல் என் கண்ணம்மா!
துணையிழந்து நின்றதென்ன ? 19

கண்ணுக்கு மூக்கடியோ காதோர மத்திமத்தில்
உண்ணாக்கு மேலேறி உன்புதுமை மெத்தவுண்டு
உண்ணாக்கு மேலேறி உன்புதுமை கண்டவர்க்கும்
கண்ணுக்கு மூக்கடியோ என் கண்ணம்மா!
காரணங்கள் மெத்தவுண்டே! 20

சாயச் சரக்கெடுத்தே சாதிலிங்கம் தான்சேர்த்து
மாயப் பொடிகலந்து வாலுழுவை நெய்யூற்றிப்
பொட்டென்று பொட்டுமிட்டாள் புருவத்திடை நடுவே
இட்ட மருந்தாலே என் கண்ணம்மா!
இவ்வேட மானேண்டி! 21

பாதாள மூலியடி பாடாணம் தான்சேர்த்து
வேதாளங் கூட்டியல்லோ வெண்டாரை நெய்யூற்றிச்
செந்தூர மையடியோ செகமெல்லாம் தான்மிரட்டித்
தந்த மருந்தாலே என் கண்ணம்மா!
தணலாக வேகுறண்டி! 22

கள்ளர் பயமெனக்குக் கால்தூக்க வொட்டாமல்
பிள்ளை யழுதுநின்றால பெற்றவட்குப் பாரமடி
பிள்ளை யழுவாமல் பெற்றமனம் நோகாமல்
கள்ளர் பயமெனக்கே என் கண்ணம்மா!
கடுகளவு காணாதோ! 23

பட்டணத்தை யாளுகின்ற பஞ்சவர்கள் ராசாக்கள்
விட்டுப் பிரியாமல் வீரியங்கள் தாம்பேசி
விட்டுப் பிரிந்தவரே வேறு படுங்காலம்
பட்டணமும் தான்பறிபோய் என் கண்ணம்மா
படைமன்னர் மாண்டதென்ன ? 24

ஆகாப் புலையனடி அஞ்ஞானந் தான்பேசிச்
சாகாத் தலையறியேன் தன்னறிவு தானறியேன்
வேகாத காலறியேன் விதிமோச மானேனடி
நோகாமல் நொந்தல்லோ என் கண்ணம்மா!
நொடியில்மெழு கானேனடி! 25

தாயைச் சதமென்றே தந்தையரை ஒப்பென்றே
மாயக் கலவிவந்து மதிமயக்க மானேனடி
மாயக் கலவிவிட்டு மதிமயக்கம் தீர்ந்தக்கால்
தாயுஞ் சதமாமோ என் கண்னம்மா
தந்தையரு மொப்பாமோ ? 26

அஞ்சாத கள்ளனடி ஆருமற்ற பாவியடி
நெஞ்சாரப் போய்சொல்லும் நேயமில்லா நிட்டூரன்
கஞ்சா வெறியனடி கைசேத மாகுமுன்னே
அஞ்சாதே யென்றுசொல்லி என் கண்ணம்மா
ஆண்டிருந்தா லாகாதோ! 27

உன்னை மறந்தல்லோ உளுத்த மரமானேன்
தன்னை மறந்தார்க்குத் தாய்தந்தை யில்லையடி
தன்னை மறக்காமற் றாயாரு முண்டானால்
உன்னை மறக்காமல் என் கண்னம்மா
ஒத்திருந்து வாழேனோ ? 28

காயப் பதிதனிலே கந்தமூலம் வாங்கி
மாயப் பணிபூண்டு வாழுஞ் சரக்கெடுத்தே
ஆயத் துறைதனிலே ஆராய்ந்து பார்க்குமுன்னே
மாயச் சுருளோலை என் கண்ணம்மா
மடிமேல் விழுந்ததென்ன ? 29

சித்திரத்தை குத்தியல்லோ சிலையை எழுதிவைத்து
உத்திரத்தைக் காட்டாமல் ஊரம்ப லமானேன்
உத்திரத்தைக் காட்டியல்லோ ஊரம்ப லமானால்
சித்திரமும் வேறாமோ என் கண்னம்மா!
சிலையுங் குலையாதோ! 30

புல்ல ரிடத்திற்போய்ப் பொருள்தனக்குக் கையேந்திப்
பல்லை மிகக்காட்டிப் பரக்க விழிக்கிறண்டி
பல்லை மிகக்காட்டமல் பரக்க விழிக்காமல்
புல்லரிடம் போகமல் என் கண்ணம்மா
பொருளெனக்குத் தாராயோ ? 31

வெட்டுண்ட சக்கரத்தால் வேண தனமளித்துக்
குட்டுண்டு நின்றேண்டி கோடிமனு முன்னாலே
குட்டுண்டு நில்லாமற் கோடிமனு முன்னாக
வெட்டுண்டு பிணிநீங்கி என் கண்ணம்மா
விழித்துவெளி காட்டாயோ! 32

ஐங்கரனைத் தொண்ட னிட்டேன் - ஆத்தாடி
அருளடைய வேணுமென்று
தாங்காமல் வந்தொருவன் - ஆத்தாடி
தற்சொரூபங் காட்டி யென்னை 33

கொள்ள பிறப்பறுக்க - ஆத்தாடி
கொண்டான் குருவாகி
கள்களப் புலனறுக்க - ஆத்தாடி
காரணமாய் வந்தாண்டி. 34

ஆதாரம் ஆறினையும் - ஆத்தாடி
ஐம்பத்தோர் அக்கரமும்
சூதான கோட்டையெல்லாம் - ஆத்தாடி
சுட்டான் துரிசறவே. 35

வாகாதி ஐவரையும் - ஆத்தாடி
மாண்டுவிழக் கண்டேண்டி
தத்துவங்க ளெல்லாம் - ஆத்தாடி
தலைகெட்டு வெந்ததடி. 36

மஞ்சன நீராட்டி - ஆத்தாடி
மலர்பறித்துத் தூவாமல்
நெஞ்சு வெறும்பாழாய் - ஆத்தாடி
நின்றநிலை காணேண்டி. 37

பாடிப் படித்து - ஆத்தாடி
பன்மலர்கள் சாத்தாமல்
ஓடித் திரியாமல் - ஆத்தாடி
உருக்கெட்டு விட்டேண்டி. 38

மாணிக்கத்து உள்ளளிபோல் - ஆத்தாடி
மருவி யிருந்தாண்டி
பேணித் தொழுமடியார் - ஆத்தாடி
பேசாப் பெருமையன் காண். 39

புத்தி கலங்கியடி - ஆத்தாடி
போந்தேன் பொரிவழியே
பதித்தறியாமல் - ஆத்தாடி
பாழியில் கவிழ்ந்தேனே. 40

தோற்றம் மொடுக்கம் இல்லா - ஆத்தாடி
தொல் பொருளை அறியார்கள் . . .

திருவாரூர் நான்மணி மாலை

குமரகுருபரர் அருளிச்செய்த
திருவாரூர் நான்மணி மாலை



காப்பு

    வெண்பா

    நாடுங் கமலேசர் நான்மணிமா லைக்குமிகப்
    பாடுங் கவிதைநலம் பாலிக்கும் - வீடொன்ற
    முப்போ தகத்தின் முயல்வோர்க்கு முன்னிற்கும்
    கைப்போ தகத்தின் கழல்.
    1
    நூல்
    நேரிசை வெண்பா

    நீரூர்ந்த முந்நீர் நிலவலய நீள்கொடிஞ்சித்
    தேரூர்ந்த செல்வத் தியாகனே - ஆரூர
    வீதிவிடங் காவடங்கா வேலைவிடம் போலுமதிப்
    பாதிவிடங் காகடைக்கண் பார்த்து.
    2

    கட்டளைக் கலித்துறை

    பார்பெற்ற வல்லிக்குப் பாகீ ரதிக்குமெய்ப் பாதியுமத்
    தார்பெற்ற வேணியுந் தந்தார் தியாகர் தடம்புயத்தின்
    சீர்பெற்றி லேமென்று நாணால் வணங்கிச் சிலையெனவும்
    பேர்பெற்ற தாற்பொன் மலைகுனித் தாரெம் பிரானென்பரே.
    3

    அறுசீர்க் கழிநெடிலடி யாசிரியவிருத்தம்

    என்பாக நகுதலையோ டெழிலாக

    வணிந்தகம லேச மற்றுன்
    றன்பாக மிடப்பாகத் தலை஢விகரு
    விழிதோய்ந்துந் தலைவி பாகத்
    தன்பாக நின்றிருநோக் கவைதோய்ந்துக்
    திருநிறம்வே றாகை யாலப்
    பொன்பாக மிதுவெனவு நின்பாக
    மிதுவெனவும் புகலொ ணாதே
    4

    நேரிசை யாசிரியப்பா

    ஒண்கதிர் பரப்புஞ் செங்கதிர்க் கடவுள்
    வெயில்கண் டறியா வீங்குருட் பிழம்பிற்
    புயல்கண் படுக்கும் பூந்தண் பொதும்பிற்
    காவலர்ப் பயந்து பாதபத் தொதுங்கிய

    இருவே றுருவிற் கருவிரன் மந்தி
    பொன்னிறம் பழுத்த பூஞ்சுளை வருக்கை
    முன்னுறக் காண்டலு முளையெயி றிலங்க
    மடித்தலத் திருத்தி வகிர்ந்துவள் ளுகிரால்
    தொடுத்தபொற் சுளைபல வெடுத்துவாய் மடுப்பது

    மானிட மடங்க றூணிடைத் தோன்றி
    ஆடகப் பெயரி னவுணன்மார் பிடந்து
    நீடுபைங் குடரி னிணங்கவர்ந் துண்டென
    இறும்பூது பயக்கு நறும்பணை மருதத்
    தந்த ணாரூ ரெந்தையெம் பெரும

    சிங்கஞ் சுமந்த செழுமணித் தவிசிற்
    கங்குலும் பகலுங் கலந்தினி திருந்தாங்
    கிடம்பலம் பொலிந்த விறைவியு நீயும்
    நடுவண் வைகு நாகிளங் குழவியை
    ஒருவரி நெருவி ருள்ளநெக் குருக

    இருவிருந் தனித்தனி யேந்தினிர் தழீஇ
    முச்சுடர் குளிர்ப்ப முறைமுறை நோக்கி
    உச்சி மோந்துமப் பச்சிளங் குழவி
    நாறுசெங் குமுதத் தேறலோ டொழுகும்
    எழுதாக் கிளவியி னேழிசை பழுத்த

    இழுமென் குரல மழலைத் தீஞ்சொற்
    சுவையமு துண்ணுஞ் செவிகளுக் கையவென்
    பொருளில் புன்மொழி போக்கி
    அருள்பெற வமைந்ததோ ரற்புத முடைத்தே.
    5

    நேரிசை வெண்பா

    தேங்குபுக ழாரூர்த் தியாகர்க்கெண் டிக்குமொளி
    வீங்கு பகற்போது வெண்படமாம் - தூங்கிருள்சூழ்
    கங்குற் பொழுது கரும்படமாஞ் செம்படமாம்
    பொங்குற்ற புன்மாலைப் போது.
    6

    கட்டளைக் கலித்துறை

    போதொன் றியதண் பொழிற்கம லேசர்பொன் மார்பிலெந்தாய்
    சூதொன்று கொங்கைச் சுவடொன்ப ராற்றெல் களிற்றுரிவை
    மீதொன் றுவகண்டு வெங்கோப மாமுகன் வெண்மருப்பால்
    ஈதொன் றடுகளி றென்றெதிர் பாய்ந்த விணைச்சுவடே
    7

    அறுசீர்க் கழிநெடிலடி யாசிரியவிருத்தம்

    இணங்குகம லாலயமா லிதயத்திற் பொலிந்ததியா கேச ரம்பொற்
    கணங்குழைமண் மகலளிதய கமலத்தும் பொலிதலினக் குமல மான
    மணங்கமழ்பங் கயத்தடஞ்சூழ் கமலைகம லாலயப்பேர் வாய்த்த தான்மற்
    றணங்கனையா ரிதயமுந்தம் மருட்கொழுந ரிதயமுமொன் றாகுந் தானே.
    8

    நேரிசை யாசிரியப்பா

    தானமால் களிறு மாநிதிக் குவையும்
    ஏனைய பிறவு மீகுந ரீக
    நலம்பா டின்றி நாண்டுறந் தொரீஇ
    இலம்பா டலைப்ப வேற்குந ரேற்க
    புரவலர் புரத்தலு மிரவல ரிரத்தலும்
    இருவே றியற்கையு மிவ்வுல குடைத்தே அதா அன்று
    ஒருகா லத்தி லுருவமற் றொன்றே
    இடப்பான் முப்பத் திரண்டறம் வளர்ப்ப
    வலப்பா லிரத்தன் மாநிலத் தின்றே
    விண்டொட நிவந்த வியன்றுகிற் கொடிகள்
    மண்டலம் போழ்ந்து மதியக டுடைப்ப
    வாணிலா வமுதம் வழங்கியக் கொடிகள்
    வேனிலிற் பயின்ற வெப்பம தாற்றுபு
    கொடியா ரெத்துணைக் கொடுமை செய்யினும்
    மதியார் செய்திடு முதவியை யுணர்த்தும்
    பன்பணி மாடப் பொன்மதிற் கமலைக்
    கடிநகர் வைப்பினிற் கண்டேம்
    வடிவ மற்றிது வாழிய பெரிதே.
    9

    நேரிசை வெண்பா

    பெருமான் றமிழ்க்கமலைப் பெம்மான்கைம் மானும்
    கருமா னுரியதளுங் கச்சும் - ஒருமானும்
    சங்கத் தடங்காதுந் தார்மார்புங் கண்டக்கால்
    அங்கத் தடங்கா தவா.
    10

    கட்டளைக் கலித்துறை.

    வாவியம் போருகஞ் சூழ்கம லேசர்புள் வாய்கிழித்த
    தூவியம் போருகந் தோறுநின் றோர்துணைத் தாளடைந்த
    ஆவியம் போருகந் தாயிரங் கூற்றுடன் றாலுமஞ்சேல்
    நாவியம் போருக நன்னெஞ்ச மேயவர் நாமங்களே.
    11

    அறுசீர்க் கழிநெடிலடி யாசிரியவிருத்தம்

    நாம வேற்படைக் கடவுளைப் பயந்தருள்

    நங்கைதென் கமலேசர்
    வாம பாகத்தைக் கொளவலப் பாகநீர்
    மங்கைகொண் டனள்போலாம்
    தாம நீற்றொளி தன்னிறங் காட்டவெண்
    டலைநிரை நுரைகாட்டக்
    காமர் பூங்கொடி மடந்தையர் மதர்விழிக்
    கயலுலா வரலாலே
    12

    நேரிசை யாசிரியாப்பா

    வருமுலை சுமந்து வாங்கிய நுசுப்பிற்
    புரிகுழன் மடந்தையர் பொன்னெடு மாடத்
    தொண்கதிர் வயிரமுந் தண்கதிர் நீலமும்
    சேயொளி பரப்புஞ் செம்மணிக் குழாமும்
    மாயிரு டுரந்து மழகதி ரெறிப்பச்
    சுரநதி முதல வரநதி மூன்றும்
    திருவநீண் மருகிற் செல்வது கடுப்ப
    ஒள்ளொளி ததும்பு மொண்டமிழ்க் கமலைத்
    தெள்ளமு துறைக்குந் திங்களங் கண்ணித்
    தீநிறக் கடவுணின் கான்முறை வணங்குதும்
    கூற்றெனப் பெயரிய கொடுந்தொழி னுளையன்
    ஊற்றமில் யாக்கை யுவர்நீர்க் கேணிப்
    புலத்தலை யுயிர்மீ னலைத்தனன் பிடிப்ப
    ஐவளி பித்தென வமைத்துவைத் திருந்த
    முத்தலைத் தூண்டி றூண்டி யத்தலை
    வாழ்நாண் மிதப்பு நோக்கித் தாழா
    தயிறலைத் தொடங்கி யெயிறலைத் திருத்தலிற்
    றள்ளா முயற்சி தவறுபட் டொழிந்தென
    வெள்குறீஇ மற்றவன் விம்மித னாக
    அருட்பெருங் கடலினவ வாருயிர் மீனம்
    கருக்குழி கழியப் பாய்ந்து தெரிப்பரும்
    பரமா னந்தத் திரையொடு முலாவி
    எய்தரும் பெருமித மெய்த
    ஐயநின் கடைக்க ணருளுதி யெனவே
    13

    நேரிசை வெண்பா

    என்பணிந்த தென்கமலை யீசனார் பூங்கோயில்
    முன்பணிந்த தெய்வ முனிவோர்கள் - அன்பென்னாம்
    புண்சுமந்தோ நந்தி புடைத்தென்னார் புண்ணியனார்
    மண்சுமந்தா ரென்றுருகு வர்.
    14

    கட்டளைக் கலித்துறை

    வரந்தந் தருள வரதம்வைத் தாலென் வரதமிடக்
    கரந்தந்த தாலிவர் கையதன் றேபலி காதலித்துச்
    சிரந்தந்த செங்கைக் கமலேசர் நாமந் தியாகரென்ப
    தரந்தந்த வாள்விழி யாடந்த தாங்கொ லறம்வளர்த்தே
    15

    அறுசீர்க் கழிநெடிலடி யாசிரியவிருத்தம்

    வள்ளமுலைக் கலைமடந்தை மகிழ்நர்தலை மாலைசிர மாலை யாகக்
    கொள்ளுவது மலர்மடந்தை கொழுநர்தலை கிண்கிணியாக் கோத்துச் சாத்த
    உள்ளுவது மொழிவதுமற் றொழியாயே லடிமுடிகள் உணர்ந்தே மென்றே
    கள்ளமொழி வான்புகிற்றென் கமலேச லவர்க்கவையே கரியு மாமே.
    16

    நேரிசை யாசிரியப்பா

    கருந்தாது கடுத்த பெரும்பணை தாங்கும்
    படர்மருப் பெருமைபைங் குவளை குதட்டி
    மடிமடை திறந்து வழிந்தபா லருவி
    கரைபொரு தலைப்பப் பெருகுபூந் தடத்து
    வெண்டோ டவிழ்த்த முண்டகத் தவிசிற் ....(5)
    பானீர் பிரித்துண் டூவெள் ளெகினம்
    நூற்பெருங் கடலு ணுண்பொரு டெரித்து
    நாற்பயன் கொள்ளு நாமகட் பொருவும்
    மென்பான் மருதத் தண்புனற் கமலைத்
    தென்பான் மேருவிற் றிகழ்பூங் கோயில் .....(10)
    மூவ ரகண்ட மூர்த்தியென் றேத்தும்
    தேவ ரகண்ட தெய்வ நாயக
    நின்னடித் தொழும்பி னிலைமையின் றேனுநின்
    றன்னடித் தொழும்பர் சார்புபெற் றுய்தலிற்
    சிறியவென் விழுமந் தீர்ப்பது கடனென ......(15)
    அறியா யல்லை யறிந்துவைத் திருந்தும்
    தீரா வஞ்சத் தீப்பிறப் பலைப்பச்
    சோரா நின்றவென் றுயரொழித் தருள்கிலை
    புறக்கணித் திருந்ததை யன்றே குறித்திடிற்
    கோள்வாய் முனிவர் சாபநீர்ப் பிறந்த .....(20)
    தீவாய் வல்வினைத் தீப்பயன் கொண்மார்
    உடல்சுமந் துழலுமக் கடவுளர்க் கல்லதை
    பிறவியின் றுயர்நினக் கறிவரி தாகலின்
    அருளா தொழிந்தனை போலும்
    கருணையிற் பொலிந்த கண்ணுத லோயே. .....(25)
    17

    நேரிசை வெண்பா

    கண்ணனார் பொய்ச்சூள் கடிபிடித்தோ தென்புலத்தார்
    அண்ணலா ரஞ்சுவரென் றஞ்சியோ - விண்ணோர்
    விருந்தாடு மாரூரா மென்மலர்த்தா டூக்கா
    திருந்தாடு கின்றவா வென்.
    18

    கட்டளைக் கலித்துறை

    என்னுயிர்க் கொக்கு மிளஞ்சேயொ

    டேழுல கீன்றவன்னை
    மன்னுயிர்க் கொக்குங் கமலைப்
    பிரான்மணி கண்டங்கண்டு
    மின்னுயிர்க் கும்புய லென்றுமென்
    கொன்றைபைந் தாதுயிர்க்கப்
    பொன்னுயிர்க் கொண்கன் பொலன்றுகி
    லாமெந்தை பூந்துகிலே.
    19

    எண்சீர்க் கழிநெடிலடி யாசிரியவிருத்தம்

    பூமாதி னிதயகம லத்து வைகும்

    பொலிவானு மரியணைமேற் புணரி யீன்ற
    மாமாது வழிபடவீற் றிருத்த லானும்
    மறைமுதலு நடுமுதலு முடிவி னின்ற
    தாமாத றெளிவிப்பார் போலு நீலத்
    தரங்கநெடுங் கடன்ஞால மொருங்கு வாய்த்த
    கோமாது மனங்குழையக் குழைந்த வாரூர்க்
    குழகனார் கிண்கிணிக்கா லழக னாரே.
    20

    நேரிசை யாசிரியப்பா

    அழவிலர் சோதி முழுவெயி லெறிப்ப
    இளநில வெறிக்குங் குளிர்மதிக் குழவியும்
    வெஞ்சினம் பொதிந்த நஞ்சுமிழ் பகுவாய்
    வெள்ளைமுள் ளெயிற்றுப் பிள்ளைவா ளரவும்
    தெண்டிரை கொழிக்குந் தீம்புனற் கங்கைத் .....5
    தண்டுறை மருங்கிற் றனிவிளை யாட
    உடன்வைத் தாற்றிய படர்சடைக் கடவுள்
    எறுழ்வலித் தறுகட் டெறுசினக் கேழல்
    முளையெயி றிலங்க முருகுகொப் புளித்துத்
    தளையவி ழிதழித் தண்டார் மார்ப .....10
    திருவிழி யிரண்டிலு மிருசுடர் வழங்கலின்
    இரவுநன் பகலு மொருபுடை கிடந்தெனக்
    கடங்கலுழ் கரடத் தடங்களிற் றுரிவையும்
    மடங்கலீ ருரியு முடன்கிடந் தலமர
    விண்பட நிவந்த திண்பு யாசல .....15
    நெட்டிலைக் கமுகி னெடுங்கயி றார்த்துக்
    கட்டுபொன் னூசல் கன்னிய ராடவப்
    பைங்குலைக் கமுகு பழுக்காய் சிந்த
    வெண்கதிர் நித்திலம் வெடித்துகு தோற்றம்
    கந்தரத் தழகு கவர்ந்தன விவையென .....20
    அந்தி லாங்கவ ரார்த்தன ரலைப்ப
    ஒண்மிட றுடைந்தாங் குதிரஞ் சிந்தக்
    கண்முத் துகுத்துக் கலுழ்வது கடுக்கும்
    தண்டலை யுடுத்த வொண்டமிழ்க் கமலைப்
    பொற்பதி புரக்கு மற்புதக் கூத்தநின் .....25
    சேவடிக் கொன்றிது செப்புவன் கேண்மதி
    விலங்கினுண் மிக்கது விண்ணவர் தருவென
    ஒருங்குவைத் தெண்ணுவ தோர்வழக் கன்மையின்
    ஒத்த சாதியி னுயர்புமற் றிழிபும்
    வைத்தன ரல்லதை வகுத்தனர் யாரே .....30
    ஆருயிர்க் கமைத்த வோரெழு பிறப்பினுள்
    முற்படு தேவருண் முதல்வனென் றெடுத்துக்
    கற்பனை கடந்த கடவுணிற் பழிச்சும்
    தொன்மறைக் குலங்கள் முன்னிய தியாதெனப்
    பன்மறை தெரிப்பினும் பயன்கொள வரிதால் .....35
    தேவரி னொருவனென் றியாவரு மருளுற
    நீயே நின்னிலை நிகழாது மறைத்துக்
    கூறிய தாகு மாகலிற்
    றேறினர் மறையெனச் செப்பினர் நன்கே.
    21

    நேரிசை வெண்பா

    நல்லார் தொழுங்கமலை நாதனே நாதனெனக்
    கல்லாதார் சொல்லுங் கடாவிற்கு - வெல்லும்
    விடையே விடையாக மெய்யுணரா ரையுற்
    றிடையே மயங்குமிது வென்.
    22

    கட்டளைக் கலித்துறை

    இதுவே பொருளென் றெவரெவர் கூறினு மேற்பதெது
    அதுவே பொருளென் றறிந்துகொண் டேனப் பொருளெவர்க்கும்
    பொதுவே யென்றாலும் பொருந்து மெல்லோர்க்கும் பொதுவினிற்கும்
    மதுவே மலர்ப்பொழி லாரூரி னும்வைகும் வைகலுமே
    23

    அறுசீர்க் கழிநெடிலடி யாசிரியவிருத்தம்

    வைய முழுது முழுதுண்ண வல்லாற் களித்து நவநிதியும்
    கையி லொருவற் களித்தெமக்கே கதிவீ டளித்தோர் கன்னிகைக்கு
    மெய்யி லொருகூ றளித்தனரால் விமலர் கமலைத் தியாகரென்ப
    தைய ரிவர்க்கே தகுமுகமன் அன்று புகழு மன்றாமே.
    24

    நேரிசை யாசிரியப்பா

    ஆமையோ டணிந்து தலையோ டேந்திக்
    காமரு மடந்தையர் கடைதொறுங் கடைதொறும்
    பலிதேர்ந் துண்ணினு முண்ணு மொலிகழற்
    பைந்துழாய் முகிலும் பழமறை விரிஞ்சனும்
    இந்திரா தியரு மிறைஞ்சினர் நிற்ப .....5
    மற்றவர் பதங்கள் மாற்றியும் வழங்கியும்
    பற்றலர்ச் செகுத்து முற்றவர்த் தாங்கியும்
    பரசுநர் பரசப் பணிகுநர் பணிய
    அரசுவீற் றிருப்பினு மிருக்கு முரைசெயும்
    யோக சாதனம் போகிகட் கின்மையிற் .....10
    செஞ்சடை விரித்து வெண்பொடி பூசி
    எருக்கங் கண்ணியுஞ் சூடி விருப்புடை
    இடப்பான் மடந்தை நொடிப்போழ்து தணப்பினும்
    மடலூர் குறிப்புத் தோன்ற விடலரும்
    காமமீ தூர வேமுற் றிரந்தவள் .....15
    தாமரைச் சீறடி தைவந் தம்ம
    புலவியிற் புலந்துங் கலவியில் களித்தும்
    போகமார்ந் திருப்பினு மிருக்கும் யோகிகட்
    கெய்தா வொண்பொருள் கைவந்து கிடைப்ப
    ஞான முத்திரை சாத்தி மோனமோ .....20
    டியோகுசெய் திருப்பினு மிருக்கு மீகெழு
    தமனிய மாடத் தரமிய முற்றத்
    தைங்கணைக் கிழவ னரசிய னடாத்தக்
    கொங்கைமால் களிறுங் கொலைக்கண்வாட் படையும்
    சில்கா ழல்குல் வெல்கொடித் தேரும் .....25
    பல்வகை யுறுப்பும் படையுறுப் பாகப்
    பவக்குறும் பெரியுந் தவக்குறும் பெறிந்து
    நுணங்கிய நுசுப்பி னணங்கனார் குழுமிக்
    கைவகுத் திருந்து கழங்கெறிந் தாட
    மையுண் கண்கள் மறிந்தெழுந் தலமரல் .....30
    செம்முகத் தாமரைச் சிறையளிக் குலங்கள்
    அம்மென் காந்தளி னளிக்குல மார்த்தெழக்
    கலந்துடன் றழீஇக் காமுற னிகர்க்கும்
    பொலன்செய் வீதிப் பொன்மதிற் கமலை
    அண்ணன் மாநகர்க் கண்ணுதற் கடவுள் .....35
    கற்பனை கழன்று நிற்றலின்
    நிற்பதிந் நிலையெனு நியமமோ வின்றே
    25

    நேரிசை வெண்பா

    இன்னீ ருலகத்துக் கின்னுயிர்யா மென்றுணர்த்தும்
    நன்னீர் வயற்கமலை நாதனார் - பொன்னார்ந்த
    சேவடிக்கா ளானார் சிலரன்றே தென்புலத்தார்
    கோவடிக்கா ளாகார் குலைந்து.
    26

    கட்டளைக் கலித்துறை

    குலைவத்த செவ்விள நீர்குளிர் பூம்பொழிற் கொம்புக்கின்ப
    முலைவைத்த தொக்குங் கமலேசர் வேணி முகிழ்நகைவெண்
    டலைவைத்த வேனற் புனமொக்குங் கங்கையத் தண்புனத்தில்
    நிலைவைத்த மாதரை யொக்குங் கவணொக்கு நீள்பிறையே.
    27

    எண்சீர்க் கழிநெடிலடி யாசிரியவிருத்தம்

    பிறையொழுக வொழுகுபுனற் கங்கை யாற்றின்
    பேரணையிற் றொடுத்துவிக்க பெரும்பாம் பென்னக்
    கறையொழுகும் படவரவம் படரும் வேணிக்
    கண்ணுதலார் கமலையிற்பைங் கமலை போல்வீர்
    நறையொழுகு மலர்ப்பொழில்குத் தகையாத் தந்தீர்
    நானிரண்டு மாவடுவு நாடிக் காணேன்
    நிறையொழுகு மிளநீரு நிற்கக் காணேன்
    நீர்செய்த காரியமென் னிகழ்த்து வேனே.
    28

    நேரிசை யாசிரியப்பா

    வேனிலா னுறுப்பின் மென்றசை யிறைச்சி
    தீநாக் கறியத் திருக்கண் டிறந்தோய்
    நான்மறை முனிவன் கான்முளை நிற்ப
    விடற்கரும் பாசமோ டுடற்பொறை நீங்க
    உயிருண் கூற்றுக்குத் திருவடி வைத்தோய் .....5
    கருங்கடல் வண்ணன் வெள்விடை யாகி
    அடிக டாங்கிய வுதவிக் காங்கவன்
    முழுவென்பு சுமந்த கழுமுட் படையோய்
    தேவா சிரயன் றிருக்கா வணத்து
    மேவா நின்ற விண்ணவர் குழாங்கள் .....10
    உதுத்திர கணங்களென் றோடினர் வணங்கி
    அருக்கிய முதல வகனமர்ந் தளிப்ப
    இத்தலத் துற்றவ ரினித்தலத் துறாரெனக்
    கைத்தலத் தேந்திய கனன்மழு வுறழும்
    மழுவுடைக் கைய ராகி விழுமிதின் .....15
    மாந்தர் யாவருங் காந்தியிற் பொலியும்
    வரமிகு கமலைத் திருநகர்ப் பொலிந்தோய்
    எழுதாக் கிளவிநின் மொழியெனப் படுதலின்
    நின்பெருந் தன்மை நீயே நவிற்றுதல்
    மன்பெரும் புலமைத் தன்றே யும்பரின் .....20
    நின்னோ ரன்னோ ரின்மையி னின்னிலை
    கூறாய் நீயெனிற் றேறுந ரிலரால்
    தன்னுடை யாற்றன் முன்னார் முன்னர்த்
    தற்புகழ் கிளவியுந் தகுமென் றம்ம
    நிற்புகழ்ந் திசைத்தனை நீயே யாக .....25
    இருடீர் காட்சிப் பொருடுணிந் துணர்த்தா
    தியங்கா மரபி னிதுவிது பொருளென
    மயங்கக் கூறுதல் மாண்புடைத் தன்றே
    அளவில் காட்சியை யையமின் றுணர்த்தலிற்
    றளரா நிலைமைத் தென்ப வென்றலிற் .....30
    றன்னுடை மயக்கந் திசைமேல் வைத்துச்
    சென்னெறி பிழைத்தோன் திசைமயங் கிற்றென
    மொழிகுவ தேய்ப்ப முதுக்குறை வின்மையிற்
    பழமறை மயங்கிற் றென்னா முழுவதும்
    எய்யா திசைக்குதும் போலும் .....35
    ஐயநின் றன்மை யளப்பரி தெமக்கே.
    29

    நேரிசை வெண்பா

    அள்ளற் கருஞ்சேற் றகன்பணைசூ ழாரூரர்
    வெள்ளப் புனற்சடைமேல் வெண்டிங்கள் - புள்ளுருவாய்
    நண்ணிலா தாரை நகைக்கு நகையையன்றே
    தண்ணிலா வென்னுஞ் சகம்.
    30

    கட்டளைக் கலித்துறை

    தண்மல ரும்பொழிற் றென்கம லேசர்க்குச் சாத்துகின்ற
    ஒண்மலர் சொன்மலர்க் கொவ்வாது போலுமற் றோர்புலவன்
    பண்மலர் சாத்திப் பணிகொண்ட வாபச்சை மால்சிவந்த
    கண்மலர் சாத்தியுங் காண்பரி தான கழன்மலரே.
    31

    அறுசீர்க் கழிநெடிலடி யாசிரியவிருத்தம்

    மல்லல்வளங் கனிந்தபுகழ்க் கமலேசர் திருவுருவும் வாம பாகத்
    தல்லமர்பைங் குழலுமையா டிருவுருவு மிருவருக்கும் அமுத மான
    கொல்லயில்வேற் பசுங்குழவி திருவுருவு மருவுருவாம் குணங்கண் மூன்றின்
    நல்லுருவா தலினன்றோ விவரகில காரணராய் நவில்கின் றாரே.
    32

    நேரிசை யாசிரியப்பா

    நவமணி குயின்ற நாஞ்சில்சூழ் கிடக்கும்
    உவளகங் கண்ணுற் றுவாக்கட லிஃதெனப்
    பருகுவா னமைந்த கருவிமா மழையும்
    செங்கண்மால் களிறுஞ் சென்றன படிய
    வெங்கண்வா ளுழவர் வேற்றுமை தெரியார் .....5
    வல்விலங் கிடுதலின் வல்விலங் கிதுவெனச்
    செல்விலங் கிடவெதிர் சென்றனர் பற்றக்
    காக பந்தரிற் கைந்நிமிர்த் தெழுந்து
    பாகொடு முலாவிப் படர்தரு தோற்றம்
    நெடுவேல் வழுதி நிகளம் பூட்டிக் .....10
    கொடுபோ தந்த கொண்டலை நிகர்க்கும்
    சீர்கெழு கமலைத் திருநகர் புரக்கும்
    கார்திரண் டன்ன கறைமிடற் றண்ணல்
    மூவரென் றெண்ணநின் முதற்றொழில் பூண்டும்
    ஏவலிற் செய்துமென் றெண்ணா ராகி .....15
    அடங்கா வகந்தைக் கறிவெலாம் வழங்கி
    உடம்பு வேறா யுயிர்ப்பொறை சுமந்து
    நாளு நாளு நேடினர் திரிந்தும்
    காணா தொழிந்ததை நிற்க நாணா
    தியாவரு மிறைஞ்ச விறுமாப் பெய்துபு .....20
    தேவரென் றிருக்குஞ் சிலர்பிறர் தவத்தினும்
    மிகப்பெருந் தொண்ரொடிகலிமற் றுன்னொடும்
    பகைத்திறம் பூண்ட பதகனே யெனினும்
    நின்றிருப் பாத நேர்வரக் கண்டு
    பொன்றின னேனும் புகழ்பெற் றிருத்தலின் .....25
    இமையா முக்கணெந் தாய்க்கு
    நமனார் செய்த நற்றவம் பெரிதே.
    33

    நேரிசை வெண்பா

    நற்கரும்பு முக்கட் கரும்பென்னு நங்கைமீர்
    விற்கரும்பன் கைக்கரும்போ வேம்பென்னும் - சொற்கரும்பின்
    வாமக் கரும்பு மனைக்கரும்பா மாரூரர்
    காமக் கரும்புங் கரும்பு.
    34

    கட்டளைக் கலித்துறை

    கரும்புற்ற செந்நெல் வயற்கம லேசர்கண் டார்க்குமச்சம்
    தரும்புற்றி னிற்குடி கொண்டிருந் தாரது தானுமன்றி
    விரும்புற்று மாசுணப் பூணணிந் தார்வெவ் விடமுமுண்டார்
    சுரும்புற்ற கார்வரைத் தோகைபங் கான துணிவுகொண்டே.
    35

    எழுசீர்ச் சந்தவிருத்தம்

    கொண்டலை யலைத்தபல தண்டலை யுடுத்தழகு

    கொண்டக மலைப்ப தியுளார்க்
    கண்டபி னெனக்கிதழி தந்தன ரெனப்பசலை
    கண்டுயிர் தளிர்த்த மடவாள்
    அண்டரமு தொத்தவமு தந்தனை யிருட்கடுவி
    தன்பரருண் மிச்சில் கொலெனா
    உண்டிடு முளத்திலவ ருண்குவரென் மிச்சிலென
    உண்டதை மறுத்து மிழுமே.
    36

    நேரிசை யாசிரியப்பா

    உமிழ்தேன் பிலிற்று மொள்ளிணர்க் கூந்தல்
    அமிழ்துகு மழலை யம்மென் றீஞ்சொற்
    சில்லரித் தடங்கண் மெல்லிய லொருந்தி
    வரிசிலைத் தடக்கைக் குரிசின்மற் றொருவன்
    பொன்னெடு மார்பிற் பொலன்கல னிமைப்பத் .....5
    தன்னுருத் தோற்றந் தரிக்கலள் வெகுண்டு
    மாலா யினனென வணங்கின னிரத்தலிற்
    றோலா மொழியை வாழியை பெரிதெனப்
    புலந்தன ளெழுதலுங் கலங்கின் வெரீஇக்
    கண்மலர் சிவப்ப மெய்பசப் பெய்தலிற் .....10
    றானு மாலாந் தன்மையள் கொல்லெனத்
    தேரினன் றாழ்ந்து சிலம்படி திருத்திப்
    பஞ்சியிற் பொலிந்த குஞ்சிய னிரப்பக்
    கூடின ளல்லள் கூடா ளல்லள்
    கைம்மிகு சீற்றமுங் காதலு மலைப்ப .....15
    வெள்ளப் புண்ர்ச்சியின் வேட்கையுள் ளடக்கி
    உள்ளப் புணர்ச்சிய ளூடின ணிற்பது
    தாதவிழ் தெரியற் சாக்கியர் பெருமான்
    காதலுட் கிடப்பக் கல்லெறிந் தற்றே
    இத்திற மகளி ரிளைஞரோ டாடும் .....20
    நித்தில மாட நீண்மறு குடுத்த
    மைம்மா முகிறவழ் மணிமதிற் கமலைப்
    பெம்மா னருமைப் பெருமா ளாயினும்
    ஊனுண் வாழ்க்கைக் கானவர் குருசில்
    செஞ்சிலை சுமந்த கருமுகி லேய்ப்ப .....25
    உண்டுமிழ் தீநீ ருவந்தன ராடியும்
    விருப்படிக் கொண்ட மிச்சிலூன் மிசைந்தும்
    செருப்படிக் கடிகள் செம்மாந் திருந்தும்
    தொல்புகழ் விசயன் வில்லடி பொறுத்தும்
    அருந்தமிழ் வழுதி பிரம்படிக் குவந்தும் .....30
    நள்ளிருள் யாமத்து நாவலர் பெருமான்
    தள்ளாக் காத றணித்தற் கம்ம
    பரவை வாய்தலிற் பதமலர் சேப்ப
    ஒருகா லல்ல விருகா னடந்தும்
    எளியரி னெளிய ராயினர் .....35
    அளியர் போலு மன்பர்க டமக்கே.
    37

    நேரிசை வெண்பா

    தம்மேனி வெண்பொடியாற் றண்ணளியா லாரூரர்
    செம்மேனி கங்கைத் திருநதியே - அம்மேனி
    மானே யமுனையந்த வாணிநதி யுங்குமரன்
    தானே குடைவேந் தனித்து.
    38

    கட்டளைக் கலித்துறை

    தன்னொக்குஞ் செல்வக் கமலைப்

    பிரான்செஞ் சடாடவிமற்
    றென்னொக்கு மென்னி னெரியொக்குங்
    கொன்றை யெரியிலிட்ட
    பொன்னொக்கும் வண்டு கரியொக்குங்
    கங்கையப் பொன்செய்விக்கும்
    மின்னொக்கும் பொன்செய் கிழக்கொல்ல
    னொக்குமவ் வெண்பிறையே
    39

    அறுசீர்க் கழிநெடிலடி யாசிரியவிருத்தம்

    வெண்ணிலவு கொழித்தெறிக்குஞ் செஞ்சடைமோ

    லியர்வீதி விடங்க ராரூர்க்
    கண்ணுதல்பொற் புயவரைசேர் தனவரைக
    ளிரண்டவற்றுட் கனக மேரு
    அண்ணல்புய வரைக்குடைந்து குழைந்துதலை
    வணங்கிடுநம் அன்னை பார
    வண்ணமுலைத் தடவரையவ் வரைகுழயப்
    பொருவதல்லால் வணங்கி டாதே.
    40

    நேரிசை யாசிரியப்பா

    வண்டுகூட் டுண்ண நுண்டுளி பிலிற்றித்
    தண்டே னுறைக்குந் தடமலர்ப் பொதும்பரின்
    விழுக்குலை தெறிப்ப விட்புலத் தவர்க்குப்
    பழுக்காய் தூக்கும் பச்சிளங் கமுகிற்
    செடிபடு முல்லைக் கொடிபடர்ந் தேறித் .....5
    தலைவிரித் தன்ன கிளைதொறும் பணைத்து
    மறிந்துகீழ் விழுந்தந் நறுந்துணர்க் கொடிகள்
    நாற்றிசைப் புறத்து நான்றன மடிந்து
    தாற்றிளங் கதலித் தண்டினிற் படரவப்
    பைங்குலைக் கமுகிற் படர்சிறை விரித்தொரு .....10
    கண்செய் கூந்தற் களிமயி னடிப்ப
    நெடுந்தாண் மந்திகள் குடங்கையிற் றூக்கி
    முட்புறக் கனிக டாக்கக் கொட்புறும்
    வானர மொன்று வருக்கைத் தீங்கனி
    தானெடுத் தேந்துபு தலைமேற் கொண்டு .....15
    மந்திக டொடர மருண்டுமற் றந்தப்
    பைந்துணர்க் கொடியிற் படர்தரு தொற்றம்
    வடஞ்சூழ்ந்து கிடந்த நெடும்பெருங் கம்பத்
    தணங்கனா ளொருத்தி யாடின ணிற்பப்
    பெரும்பணை தாங்கி மருங்கினர் கொட்டக் .....20
    குடந்தலைக் கொண்டொரு கூன்கழைக் கூத்தன்
    வடந்தனி னடக்கும் வண்ணம தேய்க்கும்
    பூம்பணை மருதத் தீம்புனற் கமலைத்
    திருநகர் புரக்குங் கருணையங் கடவுள்
    அன்பெனு மந்தரத் தாசை நாண் பிணித்து .....25
    வண்டுழாய் முகுந்தன் மதித்தனன் வருந்த
    அருட்பெருங் கடலிற் றொன்றி விருப்பொடும்
    இந்திரன் வேண்ட வும்பர்நாட் டெய்தி
    அந்தமி றிருவொடு மரசவற் குதவி
    ஒருகோ லோச்சி யிருநிலம் புரப்பான் .....30
    திசைதிசை யுருட்டுந் திகிரியன் சென்ற
    முசுகுந் தனுக்கு முன்னின் றாங்குப்
    பொன்னுல கிழிந்து புடவியிற் றோன்றி
    மன்னுயிர்க் கின்னருள் வழங்குதும் யாமென
    மேவர வழங்குமான் மன்ற .....35
    யாவரு நமர்கா ளிறைஞ்சுமின் னீரே.

ஸ்ரீ காலபைரவாஷ்டகம்



தேவராஜஸேவ்யமானபாவனாம்க்ரிபங்கஜம்
வ்யாலயக்யஸுஉத்ரமின்துஷேகரம் க்ருபாகரம் .
நாரதாதியோகிவ்ரு‍ந்தவந்திதம் திகம்பரம்
காஷிகாபுராதினாதகாலபைரவம் பஜே ..   ௧..

பானுகோடிபாஸ்வரம் பவாப்திதாரகம் பரம்
நீலகண்டமீப்ஸிதார்ததாயகம் த்ரிலோசனம் .
காலகாலமம்புஜாக்ஷமக்ஷஷுஉலமக்ஷரம்
காஷிகாபுராதினாதகாலபைரவம் பஜே ..   ௨..

ஷூலடம்கபாஷதண்டபாணிமாதிகாரணம்
ஷ்யாமகாயமாதிதேவமக்ஷரம் நிராமயம் .
பீமவிக்ரமம் ப்ரபும் விசித்ரதாண்டவப்ரியம்
காஷிகாபுராதிநாதகாலபைரவம் பஜே ..   ௩..

புக்திமுக்திதாயகம் ப்ரஷஸ்தசாருவிக்ரஹம்
பக்தவத்ஸலம் ஸ்திதம் ஸமஸ்தலோகவிக்ரஹம் .
வினிக்வணன்மனோக்யஹேம கிங்கிணீலஸத்கடிம்
காஷிகாபுராதினாதகாலபைரவம் பஜே ..   ௪..

தர்மஸேதுபாலகம் த்வதர்மமார்கனாஷனம்
கர்மபாஷமோசகம் ஸுஷர்மதாயகம் விபும் .
ஸ்வர்ணவர்ணஷேஷ்ஹபாஷஷோபிதாம் கமண்டலம்
காஷிகாபுராதினாதகாலபைரவம் பஜே ..   ௫..

ரத்னபாதுகாப்ரபாபிராமபாதயுக்மகம்
நித்யமத்விதியமிஷ்டதைவதம் நிரம்ஜனம் .
ம்ரு‍த்யுதர்பனாஷனம் கராலதம்ஷ்ட்ரமோக்ஷணம்
காஷிகாபுராதினாதகாலபைரவம் பஜே ..   ௬..

அட்டஹாஸபின்னபத்மஜாண்டகோஷஸம்ததிம்
த்ரு‍ஷ்டிபாத்தனஷ்டபாபஜாலமுக்ரஷாஸனம் .
அஷ்டஸித்திதாயகம் கபாலமாலிகாதரம்
காஷிகாபுராதினாதகாலபைரவம் பஜே ..   ௭..

பூதஸம்கனாயகம் விஷாலகீர்திதாயகம்
காஷிவாஸலோகபுண்யபாபஷோதகம் விபும் .
நீதிமார்ககோவிதம் புராதனம் ஜகத்பதிம்
காஷிகாபுராதினாதகாலபைரவம் பஜே ..   ௮..

          .. பல ஷ்ருதி ..
காலபைரவாஷ்டகம் படம்தி யே மனோஹரம்
க்யானமுக்திஸாதனம் விசித்ரபுண்யவர்தனம் .
ஷோகமோஹதைன்யலோபகோபதாபனாஷனம்
ப்ரயான்தி காலபைரவாம்க்ரிஸன்னிதிம் நரா த்ருவம்

.. இதி ஸ்ரீமசங்கராசார்யவிரசிதம் 
ஸ்ரீ காலபைரவாஷ்டகம் சம்பூர்ணம் ..

96 தத்துவங்கள்

அகக்கருவிகள் 36
  1. பூதம் 5
    1. மண்
    2. நீர்
    3. தீ
    4. காற்று
    5. ஆகாயம்
  2. தன்மாத்திரை 5
    1. ச்ப்தம்
    2. ஸ்பரிசம்
    3. ரூபம்
    4. ரசம்
    5. கந்தம்
  3. கன்மேந்திரியம் 5
    1. வாக்கு
    2. பாதம்
    3. கை
    4. எருவாய்
    5. கருவாய்
  4. ஞானேந்திரியம் 5
    1. செவி
    2. கண்
    3. மூக்கு
    4. நாக்கு
    5. மெய்
  5. அந்தக்கரணம் 4
    1. மனம்
    2. அகங்காரம்
    3. புத்தி
    4. சித்தம்
  6. வித்தியா தத்துவம் 7
    1. புருடன்
    2. அராகம்
    3. வித்தை
    4. கலை
    5. நியதி
    6. காலம்
    7. மாயை
  7. சிவத்டத்துவம் 5
    1. சுத்தவித்தை
    2. ஈச்சுரம்
    3. சாதாக்கியம்
    4. விந்து
    5. நாதம்
புறக்கருவிகள் 60
  1. பிருதிவியின் காரியம்
    1. மயிர்
    2. தோல்
    3. எலும்பு
    4. நரம்பு
    5. தசை
  2. அப்புவின் காரியம்
    1. நீர்
    2. உதிரம்
    3. மூளை
    4. மச்சை
    5. சுக்கிலம்
  3. தேயுவின் காரியம்
    1. ஆகாரம்
    2. நித்திரை
    3. பயம்
    4. மைதுனம்
    5. சோம்பல்
  4. வாயுவின் காரியம்
    1. ஓடல்
    2. இருத்தல்
    3. நடத்தல்
    4. கிடத்தல்
    5. தத்தல்
  5. ஆகாயத்தின் காரியம்
    1. குரோதம்
    2. லோபம்
    3. மோகம்
    4. மதம்
    5. மாற்சரியம்
  6. வசனாதி 5
    1. வசனம்
    2. கமனம்
    3. தானம்
    4. விசர்க்கம்
    5. ஆனந்தம்
  7. வாயு 10
    1. பிராணன்
    2. அபானன்
    3. வியானன்
    4. உதானன்
    5. சமானன்
    6. நாகன்
    7. கூர்மன்
    8. கிருதரன்
    9. தேவதத்தன்
    10. தனஞ்சயன்
  8. நாடி 10
    1. இடை
    2. பிங்கலை
    3. சுழுமுனை
    4. காந்தாரி
    5. அத்தி
    6. சிங்குவை
    7. அலம்புடை
    8. புருடன்
    9. சங்கினி
    10. குகு
  9. வாக்கு 4
    1. சூக்குமை
    2. பைசந்தி
    3. மத்திமை
    4. வைகரி
  10. ஏடணை 3
    1. தாரவேடணை
    2. புத்திர்வேடணை
    3. அர்த்தவேடணை
  11. குணம் 3
    1. சாத்துவீகம்
    2. இராசதம்
    3. தாமதம்