Powered By Blogger

12 மே 2013

நீரிழிவு

                    குருதியில் அளவுக்கு அதிகமான குளுக்கோஸ் காணப்படுகின்ற மாற்ற முடியாத நிலை நீரிழிவு எனப்படும். உடலுக்குத் தேவையான சக்திக்காக நாம் உண்ணும் உணவின் அதிகமான பகுதி குளுக்கோஸாக மாற்றமடைகிறது.

எமது வயிற்றுக்கு அருகில் காணப்படும் சதையி (பங்கிறியஸ்) என்னும் உறுப்பு இன்சுலின் என்னும் சுரப்பை சுரந்து குளுக்கோஸ் எமது உடற்கலங்களில் கலப்பதற்கு உதவுகின்றது. உங்களுக்கு நீரிழிவு காணப்படும் போது, உங்கள் உடல் போதுமான அளவு இன்சுலினை சுரப்பது இல்லை. அல்லது அது சுரக்கின்ற இன்சுலினை பயன்படுத்த வேண்டிய அளவுக்கு பயன்படுத்த முடியாத நிலையை அடைகின்றது. இந்நிலை உங்கள் குருதியில் வெல்லத்தின் அளவை அதிகரிக்கச் செய்கின்றது. இந்த வெல்லம் குருதியில் மட்டும் காணப்படுவதோடு மட்டுமல்லாது, சிறுநீரிலும் பிரதிபலிக்கக் கூடும். இருதயக் கோளாறு, குருடு, சிறுநீரகம் செயலிழத்தல் போன்ற பாரிய நோய்களுக்கு கூட நீரிழிவு வழிவகுக்கக் கூடும்.

நீரிழிவு நோயில் வகை1 டயபிற்றிஸ், வகை2 டயபிற்றிஸ் என இரண்டு வகைகளுண்டு. நீரிழிவு உள்ளவர்களில் முக்கால் வாசி பேருக்கு இரண்டாம் வகை நீரிழிவே காணப்படுகிறது.

சாதாரண குருதி வெல்லக் கட்டுப்பாடு:

உடலில் குளுக்கோஸ் சக்தியாக மாற்றப்படுகிறது. இது தயாரிக்கப்பட்ட இனிப்பு வகைகள், கேக் என்பவற்றில் இருந்தும் உருளைக்கிழங்கு, ரொட்டி போன்ற மாப்பொருள் உணவுகள் சமிபாடு அடையும் போதும் பெறப்படுகிறது. ஈரலும் சேமிப்பு வெல்லத்தை குளுக்கோசாக மாற்றித் தரும். சாதாரணமான நிலையில் இன்சுலின் சுரப்பானது குருதியில் இருக்க வேண்டிய குளுக்கோஸ் அளவினை கவனமாக பேணி ஒழுங்குபடுத்திக் கொண்டிருக்கும்.

மேலும் இன்சுலின், கலங்கள் தேவையான குளுக்கோஸ்ஸை குருதியில் இருந்து உள்ளெடுக்கத் தூண்டுகிறது. அத்துடன் ஈரலைத் தூண்டி மேலதிக வெல்லத்தை சேமிக்கவும் உதவுகிறது. உணவு உண்ட பின்னர் குருதியில் உள்ள வெல்லத்தின் அளவு கூடுகின்றது. இதனால் உடனே இன்சுலின் அதிகமாக சுரக்கின்றது. குருதியில் வெல்ல அளவு குறையும் போது இன்சுலின் அளவும் குறைகின்றது. சதையியினால் சுரக்கப்படும் பிறிதொரு சுரப்பு குளுக்கோகன் ஆகும். இச்சுரப்பு வெல்லம் உடலுக்கு தேவைப்படும் போது, ஈரலைத் தூண்டி சேமிப்பில் இருந்து வெல்லத்தை விடுவிக்க உதவும். இச்செயலினாலும் குருதியில் வெல்லத்தின் அளவு அதிகரிக்கும்.

நீரிழிவின் அறிகுறிகள் யாவை?

அதிக தண்ணீர்த் தாகம் முதற்கொண்டு, பார்வை மங்கல் வரை பல்வேறு அறிகுறிகள் தென்படும். கீழ்க்குறிப்பிடப்படும் ஏதாவது ஒரு அறிகுறி உங்களுக்கு இருப்பின் நீங்கள் வைத்தியரை சந்திப்பது நல்லது.

- அதிகளவில் அடிக்கடி சிறுநீர் கழிதல்.

- அதிகரித்த தண்ணீர்த் தாகம்

- காரணம் கூறமுடியாத எடை குறைவு.

- அதிக பசி.

- களைப்பும் சோர்வும்

- பார்வையில் திடீர் மாற்றம்.

- உள்ளங்கையில் அல்லது பாதத்தில் விறைப்பு.

- உலர்ந்த சருமம்

- ஏற்படும் காயங்கள் மாறாது இருத்தல்

- ஜனன உறுப்புக்களில் அரிப்பு அல்லது நீர்க்கசிதல்

- தொற்றுக்கள் அடிக்கடி ஏற்படல்

இவற்றை விட மேலதிகமாக முதலாம் பிரிவு நீரிழிவு ஏற்படின் வாந்தி, மலச்சிக்கல், பார்வைமங்கல், சரும வியாதிகள், வயிற்று நோ என்பன ஏற்படும்.

நீரிழிவு நோயைக் கண்டுபிடித்தல்

சிறுநீர் பரிசோதனையின் போது மேலதிக வெல்லம் இருப்பது நீரிழிவு நோய் தோன்றியிருப்பதன் அறிகுறியாகும். வேறு பரிசோதனை செய்வதன் மூலம் நீரிழிவு நோயை உறுதிப்படுத்தலாம்.

முதல் வகை நீரிழிவில் அறிகுறிகள் விரைவாக ஆரம்பித்து கடுமையாகும். இரண்டாவது பிரிவில் அறிகுறிகள் மெதுவாக ஆரம்பிப்பதோடு கடுமையாகவும் இருக்காது.

நீரிழிவு நோயின் வகைகளும் காரணிகளும்

முதலாம் வகை:

இவர்களில் இன்சுலின் சிறிதளவும் சுரக்கப்படுவதில்லை. இது பெரும்பாலும் சிறுவர்களிலும் இளவயதினர்களிடமும் வழமையாக ஆரம்பிக்கும். இவர்களுக்கு உணவுக்கட்டுப்பாடும் இன்சுலின் ஏற்றலுமே சிகிச்சையாகும். நோய் காணப்பட்டோரில் 5 - 10 சதவீதமானோர் முதலாம் வகை நோயை உடையோராய் இருப்பர். இவர்களில் ஆபத்து அறிகுறிகள் தெளிவாக வெளித்தெரிய மாட்டாது. இவர்களின் உடல் நோய் எதிர்ப்புத் தன்மை, பரம்பரை, சூழல் காரணிகள் என்பவை நோய்க்கு காரணங்களாக அமையலாம்.

இரண்டாம் வகை:

நோயாளரில் சுரக்கும் இன்சுலின் அளவு போதாமல் இருக்கும் அல்லது இன்சுலின் சரியாக தொழிற்படாமல் இருக்கும். இது பொதுவாக வயதாகும் போதே மக்களை பாதிக்கும். பொதுவாக 40 வயதுக்கு மேற்பட்டோரை இது தாக்கும். 90 - 95 சதவீதமான நீரிழிவு நோயாளர்களுக்கு இரண்டாம் வகையே காணப்படுகிறது. முதுமை, பருத்த உடம்பு, குடும்ப சரித்திரம், கர்ப்ப காலத்தில் நீரிழிவு இருந்தமை, உடல் உழைப்பின்மை ஆகியன ஒருவரில் தென்பட்டால் நீரிழிவு வருவதற்குரிய சாத்தியக்கூறுகளுண்டு.

கர்ப்பகால நீரிழிவு

2-5 சதவீதமான கர்ப்பிணிப் பெண்களில் காணப்படும் இந்நோய் கர்ப்பகாலம் முடிந்ததும் மறைந்துவிடும். உடல் பருமன் அதிகமாக இருப்பதும் இதற்கு ஒரு காரணமாக இருக்கும். கர்ப்ப காலத்தில் நோய் இருந்தவர்களில் 40சதவீதம் ஆனோர்களுக்கு பிற்காலத்தில் இந்நோய் ஏற்பட இடமுண்டு.

நீரிழிவு ஏற்படக் காரணங்கள்

முதலாம் வகை நோயில் இன்சுலினை சுரக்கும் கலங்கள் சிதைவடைவதால் சுரப்பு பாரிய அளவில் வீழ்ச்சியடையும். இதற்கு உடலின் தன்னிச்சையான நோயெதிர்ப்பு செயற்பாட்டின் விளைவாக, இன்சுலின் சுரக்கும் கலங்கள் தாக்கியழிக்கப்படுவதே காரணமென நம்பப்படுகின்றது.

இரண்டாம் வகை நோயாளிகளில், இன்சுலின் சுரக்கப்பட்டாலும் அதன் செயற்திறன் குறைந்துபோவதனால் வெல்லநிலை மாற்றம் சரியாக நடைபெறுவதில்லை. வெல்லநிலை குருதியில் உயர்வாகக் காணப்படுவதனால் இன்னும் அதிகமாக இன்சுலின் சுரக்க தூண்டப்படுகின்றது. இந்நிலை நீடிக்கும்போது சதையியின் செயற்திறன் குறைவடைவதனால் போதியளவு இன்சுலின் சுரக்கப்படாமல் போகின்றது.

நீரிழிவு நோய்க்கான சிகிச்சை

குருதி வெல்லத்தை எப்போதும் சாதாரண அளவில் வைத்திருப்பதே சிகிச்சையின் நோக்கமாகும். சுயகட்டுப்பாட்டுப் பயிற்சி, நீரிழிவு நோய்க்கான சிகிச்சைக்கு இன்றியமையாதவையாகும். சிகிச்சையானது, தனிப்பட்ட முறையிலும் வைத்திய, மனோதத்துவ, வாழ்க்கை முறைகள் என்பவற்றை கருத்திற் கொண்டும் மேற்கொள்ளப்பட வேண்டும்.

முதலாம் வகை நீரிழிவுக்கு சிகிச்சை

இன்சுலின் சுரப்பின் குறைவு, முதலாம் வகை நீரிழிவை கட்டுப்படுத்துவது மிகவும் கடினமாக்குகிறது. கவனமாக திட்டமிடப்பட்ட உணவுப்பழக்கம், திட்டமிடப்பட்ட உடற்பயிற்சி, வீட்டில் தினந்தோறும் பலதடவை குருதி குளுக்கோஸ் அளவை பரிசோதித்தல், தினந்தோறும் பலதடவை ஊசி மூலம் இன்சுலினை ஏற்றிக் கொள்ளல் என்பன இதற்கான சிகிச்சை வழிகள் ஆகும்.

இரண்டாம் வகை நீரிழிவுக்கு சிகிச்சை

இதற்கு உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி, வீட்டில் குருதி வெல்லப் பரிசோதனை, சில நோயாளர்களுக்கு மருந்து அல்லது இன்சுலின் ஏற்றுதல் என்பன சிகிச்சைகளாக அமையும். நோயாளர்களில் சுமார் 40வீதமானோருக்கு இன்சுலின் ஊசியே தேவைப்படுகிறது.

அன்றாடம் கவனிக்க வேண்டியவை:

நீரிழிவிற்கான அன்றாட சுய கவனம் அத்தியாவசியமானது என்றாலும் உங்களது அன்றாட வாழ்க்கையை நடத்திச் செல்வதிலும் திட்டமிடுவதிலும் அது ஒரு சுமையாக அமைந்துவிடத் தேவையில்லை. உதாரணமாக ஒவ்வொரு நாளும் ஒரே நேரத்தில் மருந்துகளை எடுத்துக் கொள்ளுங்கள். இவ்வாறு நாள்தோறும் நீங்கள் பின்பற்றக் கூடிய சில குறிப்புகளை கீழே தருகிறோம்.

*குருதியில் உள்ள வெல்ல அளவை பரிசோதித்தல்: உணவின் முன் 120மி.கி.-டெ.லீ (4 - 7மிமோல்-லீ) குள் ஆகவும் உணவின் பின் 180மிகி-டெசிலீ (10 மிமோல்-லீ) குள் ஆகவும் இருத்தல் நல்லது. 140 மிகி-டெசிலீ ஆகவிருந்தால் பாதிப்;பான நோய் அபாயங்கள் ஏற்படாது.

* வைத்தியரினால் நிர்ணயிக்கப்பட்ட மருந்துகளை அளவாகவும் குறிப்பிட்ட நேரத்திலும் எடுத்தல்.

* பாதங்களை அடிக்கடி பரிசோதிக்கவும். பாதங்களில் ஏற்படும் நோய்கள் ஆபத்தானவை. அதை பரிசோதிப்பதன் மூலம் தவிர்க்கலாம். அதாவது புண் இலகுவில் மாறாவிட்டால் வைத்தியரை பார்க்கவும்.

* உடற்பயிற்சி செய்வது அவசியம். அதனால் குருதியில் வெல்லம் குறைவடையும். இதனால் உடல்நிலை நன்றாக இருக்கும். தினமும் 35-45 நிமிட உடற்பயிற்சி அவசியம்.

* உணவில் கவனம் செலுத்தவும். குறைவான கொழுப்பு, உப்பு எடுக்கவும். நார்ச்சத்து கூடிய உணவுகள், புதிதான மரக்கறி வகைகள், பழங்கள், கொழுப்பு குறைந்த புரத வகைகள் (மீன், கொழுப்பற்ற இறைச்சி), முழுத்தானியங்கள், அவரை இனங்கள், சோயா, உள்ளி, பாகற்காய் என்பவற்றை உண்டு வந்தால் குருதியில் வெல்ல அளவைக் குறைப்பதுடன் இருதய நோய்கள் ஏற்படுவதையும் தவிர்க்கலாம். உணவில் மாப்பொருளின் அளவைக் குறைக்கவேண்டும். தவிட்டுடன் கூடிய தானிய மாப்பொருட்களை உட்கொள்ளலாம் (உ-ம் முழுத்தானியப் பாண், பஸ்ரா, நூடில்ஸ், புறவுண் பாண், புறவுண் அரிசி, ஓட்ஸ், குரக்கன்).

*ஓவ்வொரு வேளை உணவும் 50சதவீதம் மரக்கறி, 30சதவீதம் புரதம், 20சதவீதம் மாப்பொருள் என்ற அளவுகளில் உண்ணவேண்டும். சூரியகாந்தி விதை, பூசணி விதை, எள், மற்றும் லின் சீட், கெம் சீட் போன்றவற்றை உணவில் சேர்த்தல் வேண்டும்.

*கூட்டுச் சேர்க்கப்பட்ட விற்றமின்கள், செலேனியம், நாகம் (சிங்), போன்றவற்றை தினமும் எடுக்கவேண்டும்.

*அல்பா லிப்பொயிக் அசிட், சுக்ரோகாட் ஆகியவற்றை எடுப்பதனால் இன்சுலினின் செயற்திறன் அதிகரிப்பதோடு குருதி வெல்ல அளவை நாள் முழுவதற்குமாக அதிக மாற்றத்திற்குள்ளாகாமல் பேணுகின்றது.

*ஐம்னிமா சில்வெஸ்ர கொம்பிளக்ஸ்- கறுவாப்பட்டை, அமரிக்கன் ஜின் செங், குர்மா ஆகியவற்றைக்கொண்ட மூலிகைக் கலவை, குருதியின் வெல்ல அளவை கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவுவதோடு அதிக வெல்லத்தால் ஏற்படும் சேதங்களையும் தடுக்கும்.

* ஒரு நாளுக்கு 2 இலீற்றர் தண்ணீர் அருந்த வேண்டும். இது நீர், மூலிகைத் தேனீர், இரசம், சூப் போன்றவை உள்ளடங்கலாம்.

* போதிய அளவு நித்திரை செய்ய வேண்டும். இதுவும் நோயைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க அவசியம். தினமும் 7-8 மணிநேர நித்திரை இரவில் அவசியம்.

* மனஇறுக்கங்களை தவிர்க்க வேண்டும். இதற்கு யோகாப்பயிற்சியும் பிரார்த்தனையும் பெரிதும் உதவும்.

* புகைத்தல், மது அருந்துதல் என்பவற்றை நிறுத்தவேண்டும்.

நீரிழிவிற்கான இயற்கை நலம்

பின்வரும் தயாரிப்புக்களைப் பயன்படுத்தலாம்.

 1. ஜிம்னிமா சில்வெஸ்ர கொம்பிளக்ஸ்:

சில மூலிகைகளின் பிரயோகத்தால் குருதியில் வெல்லத்தின் அளவு கட்டுப்படுத்தப்படுகிறது. அதன் மூலம் மேலதிக குருதி வெல்லத்தால் ஏற்படும் அழிவுகளில் இருந்து பாதுகாப்புக் கிடைக்கிறது. அத்துடன் குருதியில் வெல்லத்தின் அளவைக் கட்டுப்படுத்துவதற்கும், காத்திரமான வெல்ல அளவுகளைப் பேணுவதற்கும், கலமென்சவ்வு அழிவுகளை தடுப்பதற்கும் இது உதவிபுரிகிறது. இதில் மூலிகைகளான குர்மா (ஐம்னிமா சில்வெஸ்ர), கறுவாப்பட்டை, அமெரிக்கன் ஜின்செங் போன்றன காணப்பபடுகின்றன. இரண்டாம் வகை நீரிழிவை தணிக்க இது உதவுவதாக நம்பப்படுகிறது. இம்மூலிகைகளின் பயன்பாட்டால் முதலாம் இரண்டாம் வகை நீரிழிவுகளில் பயன்படும் இன்சுலின் அளவையும் கொடுக்கப்படும் மருந்துகளின் அளவையும் குறைக்க உதவுகின்றது.

2. சுக்ரோகாட்:

குரோமியம், விற்றமின் பி, விற்றமின் சி, மங்னீசியம் என்பன குறைவடைகின்றன. இதற்கு அடிப்படை குருதி வெல்லக் கட்டுப்பாடு ஆகும். குறோமியம் பொலிநிக்கற்றினேட் மூலம் குருதி வெல்ல அளவு தினமும் கூடிக்குறையாமல் இருக்க உதவுகின்றது. ஆகவே அன்றாட உணவுடன் ஒரு சுக்ரோகாட் கூட்டு வில்லையை உபயோகித்து வந்தால் நற்சுகத்துடன் வாழலாம்.

3. வைரமின்ஸ்:

புதிய பழங்கள், மரக்கறிகள், முழுத்தானியங்கள், முக்கிய கொழுப்பமிலங்கள், மீன், புரதம் நிறைந்த இறைச்சி என்பனவற்றை தினமும் உண்டு வந்தாலும் எமது தேவைகளை அவை பூரணப்படுத்தமாட்டா என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். எனவே தான் எல்லா விற்றமின்களும் தாது உப்புக்களும் நிறைந்த வில்லையை தினமும் உபயோகிக்க வேண்டும். அப்போது தான் எமது தேவைகள் பூர்த்தியடையும்.

தினம் ஒரு விற்றமின் தாது உப்புக் கூட்டில் லியூட்டின், பில்பெறி, பீற்றாகரட்டின், போரன், இரும்புச் சத்துக்களும் சேர்ந்து இருப்பதால் சகல விதத்திலும் உடலுக்குத் தேவையானவை யாவும் கிடைக்கின்றன.

4. அல்பா லிப்பொயிக் அசிட்:

அல்பா லிப்பொயிக் அசிட் மாத்திரை ஆனது இன்சுலினின் செயற்திறன் கூட்டுவதனால் வெல்ல நிலையைக் கட்டுப்படுத்தி, சதையி செயலிழந்து போகாவண்ணம் பாதுகாக்கிறது.