Powered By Blogger

28 ஜனவரி 2013

கண்ணப்ப நாயனார்



           உடுப்பூர் என்பது பூம்பொழில்களும், புத்தம் புது மலர்ச்சோலைகளும் சூழ்ந்த மலைவள மிக்கப் பொத்தப்பி நாட்டிலுள்ள சிற்றூர். இத்தலத்தைச் சுற்றி ஓங்கி உயர்ந்த மலைகள் சூழ்ந்திருந்தன. யானைத் தந்தங்களை வேலியாகக் கொண்டதும், பெரிய மதில் அரண்களையும் உடையதுமான இவ்வூர் வேடர்களின் தனி நாடாய்த் திகழ்ந்தது. இவர்கள் மறவர் குலத்திற்கு ஏற்ப வேட்டையாடுவதில் வல்லவர்களாக இருந்தனர். தோலுடை தரித்து, ஊனை உண்டு, கொடுந்தொழில் புரியும் இவ்வேடர் குலத்திற்குத் தலைவனாக இருந்தவன்தான் நாகன். இவனது மனைவி தத்தை என்பவள். வாள் வலிமையும், தோள் வலிமையும் ஒருங்கே பெற்ற நாகன், குற்றம் புரிவதையே தொழிலாகக் கொண்டவன். அம்மறக்குடி மங்கையும் கணவனைப் போலவே வீரமும், வலிமையும் கொண்டு, பெண் சிங்கம் போலிருந்தாள். இருவரும் பல்வகைச் சிறப்புக்களோடும் வாழ்ந்து வந்தனரே தவிர, அவர்களுக்கு மன நிம்மதியில்லை. நாகனுக்கும், தத்தைக்கும் திருமணமாகிப் பல காலமாகியும் மக்கட்பேறு இல்லை. அதற்காக இருவரும் பக்தர்கள் குறை தீர்க்கும் எல்லாம்வல்ல முருகக் கடவுளைப் பல வழிகளில் அனுதினமும் வழிபட்டு வந்தனர். இவர்களது இடையறாத பக்திக்கு சுந்தரக் கடவுளும் கருணைக் காட்டினார். குன்றுகள் தோறும் குடியிருக்கும் குமரவேள், நாகனுக்கும், தத்தைக்கும் குழந்தைச் செல்வத்தை அருளினார். முருகப் பெருமானின் திருவருளால் மறவர்குடி மங்காது விளங்க, தத்தை ஒரு ஆண் மகவை ஈன்றெடுத்து மகிழ்ந்தாள். பிறக்கும்போதே குழந்தையைக் கைகளில் தூக்கமுடியாத அளவிற்குத் திண்ணமாய் இருந்ததால் அவர்கள் அக்குழந்தைக்கு திண்ணன் என்று சிறப்புப் பெயர் வைத்தனர். வேடர்கள் அனைவரும் மகிழ்ச்சிக் கடலில் மூழ்கி ஆரவாரித்தனர். புலிக்குட்டிபோல் வீரத்தோடு பிறந்த திண்ணன் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளரலானான். வேடர் குல முறைமைக்கு ஏற்ப உரிய பருவத்தில் திண்ணன் வில் வித்தையை முறையோடு பயின்று, உரிய காலத்தில் வல்லவனாக விளங்கினான்.பிரபஞ்சம் திண்ணனைப் பதினாறு பிராயம் நிரம்பப் பெற்ற வாலிபனாக்கியது. முதுமையை அடைந்த நாகன், தலைமைப் பதவிக்குத் தன் மகனை மாற்ற எண்ணி அதனை வேடர்களிடம் தெரிவத்தான். அவர்களும் நாகனின் விருப்பப்படியே திண்ணனைத் தலைவனாக ஏற்றுக்கொள்ள இசைந்தனர். திண்ணனாரும் வேடர்களுக்கு ஈடு இணையற்ற வீரத்தலைவர் ஆனார்.

உள்ளமும், உடலும் பூரித்துப்போன நாகன், தேவதைகளுக்குப் பூசை செய்யும் தேவராட்டியை வரவழைத்து குல வழக்கத்திற்கு ஏற்பத் தேவதைகளுக்குப் பூஜை செய்யுமாறு கட்டளையிட்டான். தேவராட்டி வழிபாடு செய்து, திண்ணன் தந்தையினும் மேம்பட்டவனாய் விளங்குவான் என்று ஆசி கூறினாள். ஒருநாள் குல வழக்கப்படி வேட்டைக்குப் புறப்பட எண்ணினார் திண்ணனார். இறைவழிபாட்டை முடித்துக் கொண்டு மற்றவர்களோடு வேட்டைக்குப் புறப்பட்டார். மேகம் போல் வேடர் கூட்டம் சூழ, திண்ணனார் வேட்டையாடக் காட்டிற்குள் புகுந்தார். குகைவிட்டுக் கிளம்பும் கொடும் புலியைப்போல் திண்ணனார் வேட்டையாடத் தொடங்கினார். பறவைகளும், கொம்புகளும் பெரு முழக்கமிட்டன. வேடர்களால் வாயால் சீழ்க்கையடித்தனர். கைகளைத் தட்டி ஓசை எழுப்பினர். வேடர்களின் ஆர்ப்பாட்டத்தில் காடே அதிர்ந்தது சிங்கங்கள் கர்ஜித்து வந்து, வேடர்களின் குத்தீட்டிகளுக்குப் பலியாயின. பாய்ந்து வந்து புலிகள் அம்பினால் தாக்கப்பட்டு உயிர் நீத்தன. துள்ளித் துள்ளி வந்த மான்கள் பல மடிந்து வீழ்ந்தன. மற்றும் பல வனவிலங்குகளும் வேடர்களின் கணைகளுக்குப் பலியாயின. இந்தச் சமயத்தில் திடுக்கிடும் நிகழ்ச்சி ஒன்று நடந்தது. வலையை அறுத்துக்கொண்டு தப்பி ஓடிய பெரிய பன்றி ஒன்று வேட்டை நாய்களிடமிருந்து எப்படியோ தப்பித்துக் கொண்டதோடல்லாமல் வேடர்கள் கணைகளுக்கும் தப்பி அதி வேகமாக ஓடத் தொடங்கியது. வேடர்கள் பன்றியைத் துரத்திக் கொண்டு ஓடினர். பன்றி சிக்கவில்லை. அனைவரும் களைப்பு மேலிடப் பின்தங்கினர். ஆனால் திண்ணனார் மட்டும் உறுதியோடு பன்றியைப் பின்தொடர்ந்து கற்களையும், முட்களையும், பாறைகளையும் பாராமல் காட்டு முயல்போல் பாய்ந்தோடியவாறு பன்றியைப் பிடிக்க முயற்சித்துக் கொண்டிருந்தார். திண்ணனின் மெய்க்காவலர்களாகிய நாணன், காடன் என்ற இருவர் மட்டும் அவரைப் பின்தொடர்ந்து ஓடினர். எல்லோரையும் ஏமாற்றிவிட்டுக் காற்றினும் கடுகப் பாய்ந்தோடிய பன்றியைப் பிடித்தார். உடைவாளால் வெட்டி, அதனைத் துண்டு துண்டாக்கினார் திண்ணனார். திண்ணனாரின் பின்னால் ஓடிவந்த நாணனும், காடனும் திண்ணனார் இருக்குமிடத்தை அடைந்து, தலைவரது ஆற்றலைக் கண்டு வியந்தனர். திண்ணனாரின் வீரத்திற்குத் தலைவணங்கிய அவ்விருவரும், அவர் கால்களில் வீழ்ந்து வணங்கினர். அம் மூவருக்கும் நேரம் அதிகமானதாலும் ஓடிவந்த களைப்பினாலும் பசி மேலிட்டது.

மூவரும் பன்றியை நெருப்பில் சுட்டு தின்று, தண்ணீர் அருந்திச் செல்ல தீர்மானித்தனர். ஆனால் திண்ணனாருக்குத் தண்ணீர் எங்கே கிடைக்கும் என்ற ஐயம் எழவே அவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொண்டார். இதற்கு முன், பல தடவை வேட்டைக்கு வந்து பழக்கப்பட்ட நாணன், திண்ணனிடம், சற்று தொலைவில் உள்ள தேக்குமரத் தோப்பினைக் கடந்து சென்றால் குன்றுகளின் அருகாமையில் பொன்முகலி என்னும் ஆறு ஓடுகிறது. என்று விளக்கினார். நாணனின் பேச்சைக் கேட்டு பூரித்துப்போன திண்ணனார், அப்படியா ! நாம் அனைவரும் அங்கேயே போவோம். இந்த பன்றியையும் தூக்கிச் செல்வோம் என்று சொல்லி முன்னால் புறப்பட, நாணனும் காடனும் பன்றியைத் தூக்கிக் கொண்டு திண்ணனாரை வழிநடத்திச் சென்றனர். செல்லும் வழியே திண்ணனார் காளத்தி மலையைக் கண்டார். திண்ணனார் ஒரு வினாடி அப்படியே அசைவற்று நின்றார். காளத்தி மலையைப் பார்க்க பார்க்க அவருக்கு மெய் சிலிர்த்தது. எதனாலோ, அவர் உடம்பில் புதுச் சக்தி பிறந்தது. மலை மீது ஒளிப்பிழம்பு தெரிவது போன்ற பிரமை அவரைப் பற்றிச் சற்று நேரம் மெய்மறக்கச் செய்தது. குன்றின் அழகையே பார்த்துக் கொண்டிருந்த திண்ணனார் செவிகளில் மட்டும் விழும்படியாக, மலைமீது ஐந்த தேவ துந்துபிகள் கடல் ஒலிபோல் முழக்கம் செய்தன. அந்த ஒலியைக் கேட்கும் பேறு பெறாத நாணன் செவிகளில், தேனீக்கள் தேனடையைச் சூழ்ந்து கொண்டும் எழுப்பும் ஓசைதான் ஒலித்தது. திருமலையில் திருவுள்ளம் பதிந்து போன திண்ணனார், நாணா ! அக்குன்றுக்குச் செல்வோமா ? என்று உணர்ச்சி மேலிடக் கேட்டார். ஏதோ சொல்ல முடியாத உணர்ச்சி ஒன்று திண்ணனாரைத் தடுத்தாட்கொண்டது. ஓ, போகலாமே ! அம்மலையிலே நல்ல காட்சிகள் பலவற்றைக் காணலாம், அத்தோடு அம்மலையிலுள்ள குடுமித்தேவர் கோவிலுக்குச் சென்று, அவரையும் கும்பிட்டு வராலம் என்று நாணன் கூறினான். அவன் மொழிந்தது கேட்டு திண்ணனார் களிப்படைந்தார் அவர் உடம்பில் பேரின்பச் சக்தி பிறந்தது. திண்ணனாருக்குச் சொல்ல முடியாத அளவிற்கு மகிழ்ச்சி பெருக்கெடுத்தது. மலையைப் பார்க்கப் பார்க்க உலக பாõரம் குறைவது போன்ற ஒரு புத்துணர்வு திண்ணனாருக்கு ஏற்பட்டது. குடுமித்தேவரைக் காணவேண்டும் என்ற ஆசை பள்ளத்தில் பாய்ந்த வெள்ளம்போல் அவர் உள்ளத்தில் புகுந்து ஓடியது.

குடுமித் தேவரைக் கும்பிட வேண்டுமென்ற எண்ணம், அவரை மேலும் விரைந்து செல்லத் தூண்டியது. நடந்து சென்று கொண்டிருந்த திண்ணனார், ஆசை மேலிட, ஆவல் உந்திட, ஓட ஆரம்பித்தார். நாணனும் காடனும் கூடவே விரைந்தனர். சற்று நேரத்தில் மூவரும் பொன் முகலி ஆற்றின் கரையை அடைந்தனர்.திண்ணனார், காடனை நோக்கி, காடா ! நீ, தீ மூட்டி, இப்பன்றியைச் சுட்டுச் சாப்பிடுவதற்குப் பக்குவமாகச் செய்து வை. அதற்குள் நானும், நாணனும் மலைக்குப் போய் வருகிறோம் என்று கூறினார். திண்ணனாரும், நாணனும் வேக வேகமாக பொன்முகலி ஆற்றைக் கடந்து மகிழ்ச்சியுடன் திருக்காளத்தி மலைச்சாரலை அடைந்தனர்.பகலெல்லாம் பாரிலே பவனி வந்த பகலவன் கடமையை முடித்த களிப்பிலே, களைப்பு நீங்கக் கடல் வாயிலை அடைந்து கொண்டிருக்கும் நேரம் !மாலைக் கதிரவனின் மஞ்சள் வெயில் திருக்காளத்தி மலையைப் பொன்மயமாக்கியது. நாணன், திண்ணனாருக்குப் பாதை காட்டும் பொருட்டு முன்னால் நடந்து சென்றான். திண்ணனார் அவனைப் பின் தொடர்ந்தார். மலையின் மீது படிகளைக் கடந்து செல்லும் நேரம் உலகத் தத்துவங்கள் என்னும் படிகளைக் கடப்பது போன்ற ஒருவித மன உணர்வு பூண்டார் திண்ணனார். வேணிநாதரின் முடி மேலிருக்கும் வெண்ணிலாவின் தன்மைபோல் திண்ணனார் நெஞ்சம் குளிர்ந்தது. ஒவ்வோர் படி மீதும் அடி எடுத்து வைக்கும் போதும், அவரது உள்ளத்தில் எதனாலோ பக்தி வளர்ந்தது. முருகனைப் போற்றும் திண்ணனார், சிவத்தை சாரும் சிவயோகி போலானார். திண்ணனார், முற்பிறப்பில் செய்த தவத்தின் பெருக்கம் அவரது உள்ளத்தில் அன்பைப் பெருக்கியது. ஆண்டவன் மீது ஆராக காதலைப் பொங்கி எழச் செய்தது. காளத்தி மலையின் உச்சியில் முழுங்கும் பஞ்சதேவதுந்துபிகளின் ஒலியைக் கேட்க கேட்க ஆசை பொங்கி வழிந்தது. உள்ளம் ஏதோ ஒரு சொல்ல முடியாத விருப்பத்தை அடைந்தாற்போல் தோன்ற மெய் சிலிர்த்தது. மலை மீதேறிய திண்ணனார் அங்கு எழுந்தருளியிருக்கும் குடுமித் தேவரைக் கண்டார். அவரது வடிவெல்லார் புளகம் பொங்கியது. அருள் வழிகளில் ஆனந்தக் கண்ணீர் அருவிபோல் பாய்ந்தது.

திண்ணனார் முகத்திலே புதிய பிரகாசம் ஒன்று ஏற்பட்டது. எம்பெருமானின் கருணை கூர்ந்த அருட்திருநோக்கம் அவர் மீது பட்டது. திண்ணனார் ஒப்பற்ற அன்பு வடிவமாய்த் திகழ்ப் புதுப்பிறவி எடுத்தாற்போல் ஆனார். ஞாயிறு தோன்ற நலியும் இருள்போல திண்ணனார் நெஞ்சத்தில் தோன்றிய அருள், அஞ்ஞானத்தை அறவே நீக்கியது. ஞானத்தை ஊட்டியது. சிவகொழுந்தை அப்படியே பார்த்துக் கொண்டேயிருந்தார். அன்பினாலும் பேருவகையினாலும் ஈர்க்கப்பெற்ற திண்ணனார் ஆசை பொங்கி மேலிட அருள் வடிவமான அம்மையப்பரைக் கட்டித் தழுவினார். முத்தமாரி பொழிந்தார். பன்முறை வீழ்ந்து வீழ்ந்து வணங்கி எழுந்தார். விழி இரண்டும் அருவி போல் ஆனந்த நீரைச் சிந்தின. திண்ணனார் மதுவுண்ட வண்டுபோல் ஆனார் அவரது மொழி குழறியது. உடல் குளிர்ந்தது. உள்ளம் பேருவகை எய்தியது. திண்ணனார் அன்பே உருவானார். அகில உலகத்தையும் மறந்து சிலைபோலானார். சற்று நேரத்தில் மீண்டும் நினைவு பெற்றார். இந்த ஏழைக்கு இவர் அகப்பட்டார். இப்பிறப்பில் நான் பெற்ற பேற்றை வேறு எவருமே பெற்றிருக்க முடியாது என்று உணர்ச்சி பொங்கக் கூறிய திண்ணனார், எல்லையில்லா ஆனந்தப் பெருக்கில் கூத்தாடினார். இறைவனைச் சுற்றிச் சுற்றி வலம் வந்து, நெற்றி சிவக்க நிலத்தில் வீழ்ந்து சிவலிங்கத்தை வணங்கினார். திண்ணனாரின் மனத்திலே திடீரென்று ஒரு கலக்கம் குடிபுகுந்தது. அவரது பிஞ்சு மனத்திலே ஒரு கேள்வி பிறந்தது. கரடியும், வேங்கையும், கடும்புலியும், வாழும் இக்கொடிய கானகத்தில் குடுமித் தேவர், துணை எதுவுமின்றித் தனித்து இருக்கிறாரே ! வனவிலங்குகள் வந்து என் எம்பிரானுக்கு ஏதாகிலும் துன்பத்தைக் கொடுத்துவிட்டால் என்ன செய்வது ? என்னால் அக்கொடுமையைக் கண்டுகொண்டு எப்படிப் பொறுமையாக இருக்க முடியும் ? இப்படி தமக்குள் எண்ணிப் பார்த்த திண்ணனார், தாங்க முடியாத வேதனையால் விம்மி விம்மி அழத் தொடங்கிவிட்டார், அவரது கையில் இருந்த வில், தானாக நழுவி நிலத்தில் வீழந்தது. அப்பொழுது திண்ணனார் இறைவனின் திருமேனியில் பச்சிலையும், நீரும் இருப்பதைப்பார்த்து, என் ஐயனை இப்படியெல்லாம் செய்தவர் யாராக இருக்கலாம் என்று தமக்குள்ளேயே கேட்டுக் கொண்டார். உண்மையை அறிய விரும்பிய திண்ணனார் இதே கேள்வியை நாணனிடம் கேட்டார். நாணன் திண்ணனாரை நோக்கி தலைவா ! இதெல்லாம் யாருடைய வேலை என்பதை நான் நன்றாக அறிவேன் முன்னொரு முறை, நான் உங்கள் தந்தையுடன் இக்கோவிலுக்கு வந்திருந்தேன். அது சமயம் பார்ப்பனர் ஒருவர் இக்குடுமித் தேவருக்குப் பச்சிலையிட்டு நீரை வார்த்துச் செல்வதைக் கண்டேன். இன்றும் அவர்தான் இவ்வாறு செய்திருத்தல் வேண்டும் என்றான்.

நாணன் கூறியதைக் கேட்டு திண்ணனார் இவ்வாறு செய்வதுதான் குடுமித் தேவருக்கு மகிழ்ச்சியைத் தரக்கூடிய செய்கைகள் ஆகும் என்பதை உணர்ந்தார். தாமும் அவற்றைக் கடைப்பிடித்து அவ்வழி செல்ல முடிவுகட்டினார். ஏன் நாணா !அப்படி என்றால், நாம் அன்போடு எதைச் செய்தாலும் இறைவன் ஏற்றுக்கொள்வார் போலிருக்கிறதே ! என்று ஒன்றுமறியாப் பாலகனைப் போல் கேட்டார். திடீரென்று திண்ணனாருக்குத் தாம் இறைவனைப் பட்டினி போட்டு விட்டோமோ ? என்ற ஐயமும் எழுந்தது. உண்மையிலேயே இறைவன் பசியுடன் தான் இருப்பார் என்ற முடிவிற்கும் வந்தார் திண்ணனார். குடுமித் தேவரே ! என் இறைவனே ! நீர் இங்கு தனியாக அல்லவா இருக்கிறீர் ? உமக்குப் பன்றி இறைச்சியும், குளிர்ந்த தண்ணீரும் கொடுப்பவர் யார் ? என்று புலம்பத் தொடங்கிவிட்டார். உடனே விரைந்து சென்று, இறைவனுக்கு இறைச்சியும், தண்ணீரும் கொண்டு வரும் நோக்கோடு முன்னால் இரண்டடி எடுத்து வைத்தார். சட்டென்று எதையோ மனதில் எண்ணியவாறு ஓடிவந்து இறைவனைக் கட்டித் தழுவிக்கொண்டு, இந்த இடத்தை விட்டுப் பிரிந்து நான் எங்குமே போகமாட்டேன். ஒரு அடி கூட நான் நகர மாட்டேன். என் ஐயனைப் பிரிந்துருக்கவே முடியாது என்று கூறியவாறு இறைவனை விடாது அணைத்தடியே இருந்தார். அந்த இடத்தை விட்டுப் போகவே அப்பொழுது அவருக்கு மனம் வரவில்லை. அப்படியே சென்றாலும் சற்று அடி எடுத்து வைப்பார். மீண்டும் வருவார். சிவலிங்கத் திருமேனியைத் தழுவுவார். உச்சிமோந்து நிற்பார். பேரன்போடு திரும்பிப் பார்த்து நிற்பார். மீண்டும் ஓடிச்சென்று இறைவனைக் கட்டித் தழுவிக் கொள்வார். இறைவனைக் கட்டித் தழுவி, குழந்தைப் போல் கொஞ்சிக் குழைவார். தாய்ப் பசுவை விட்டுப் பிரிய முடியாமல் துடிக்கும் கன்று போல், திண்ணனார் குடுமித்தேவரை விட்டுப் பிரிய முடியாமல் மனம் வாடினார். பிறை சூடிய பெருமானை நினைத்து, புலம்பிப் புலம்பி கலங்கி நின்ற திண்ணனார், பித்தனாகவே மாறிவிட்டார். இறுதியில் எப்படியோ மனத்தை ஒருவாறு தேற்றிக்கொண்டு வில்லைக் கையில் எடுத்துக் கொண்டு புறப்பட்டார். இறைவனைத் திரும்பித் திரும்பி பார்த்துக் கொண்டே வழி நடந்தார். திண்ணனாரின் ஒவ்வொரு செயலையும் பார்த்துக் கொண்டே இருந்த நாணன், இவருக்கு பைத்தியம் பிடித்து விட்டதோ ? என்று மனதில் எண்ணியவாறே திண்ணனாரைப் பின் தொடர்ந்து சென்றான். திண்ணனார் பற்றற்ற பரம ஞானியைப் போல் நடந்து கொண்டிருந்தார். அவரது கால்கள்தான் நடந்து கொண்டிருந்தனவே தவிர, அவரது எண்ணமெல்லாம் காளத்திமலைக் கோயில் மீதுதான் இருந்தது.

பொன் முகலி ஆற்றைக் கடந்து, காடன் எதிரில் வந்து நின்றதுகூட அவரது உணர்வுக்கு அப்பாற்பட்ட செயலாகவே இருந்தது. அந்த அளவிற்கு அம்பலத்தரசரின் அருள் கயிற்றினால் பிணைக்கப்பட்டிருந்தார் திண்ணனார். திண்ணனாரைப் பார்த்த காடன், அன்போடு தலைவரை எதிரில் வந்து தொழுதான்.நாணன் அவனிடம், குடுமித்தேவரை நம் தலைவர் உடும்புப் பிடியாக அல்லவா பிடித்துக்கொண்டு விட்டார் ! இப்போது இங்கு வந்திருப்பது கூட வீட்டிற்கு போவதற்காக அல்ல; குடுமித்தேவருக்குப் பன்றி இறைச்சியைப் பக்குவப்படுத்திக் கொண்டு போவதற்காகத்தான். தெய்வ மயக்கம் தலைக்கேறிக் குடுமித்தேவரோடு ஐக்கியமாகிவிட்டார் என்று கூறினான். நாணன் மொழிந்ததைக் கேட்டு காடன் நிலை குலைந்தான். நமக்கெல்லாம் தலைவராக இருக்கும் இவர் எதனால் இப்படி மாறிவிட்டார் ? என்று தனக்குள் வேதனையோடு கேட்டுக் கொண்டான். நாணனும், காடனும், திண்ணனாரிடம் நாட்டிற்குப் புறப்படலாம் என்று பல தடவைகள் கேட்டனர் ! திண்ணனார் மவுனமாகவே இருந்தார்.இறைவனின் அருள் வெள்ளத்திலே மூழ்கிய திண்ணனார் இவர்களது கூற்றையெல்லாம் சற்றும் செவி சாய்த்துக் கேட்காது இறைச்சியைப் பக்குவப்படுத்து வதிலேயே தமது முழுக் கவனத்தையும் செலுத்தினார். அம்பினால் பன்றியைக் கிழித்து இறைச்சியைத் துண்டு துண்டாக வெட்டினார். அவற்றைக் நெருக்கமாக அம்பிலே கோர்த்து, நெருப்பில் நன்றாகக் காய்ச்சித் தக்கபடி பக்குவமாகச் சமைத்தார்.அவற்றை வாயில் இட்டுச் சுவைத்துப் பார்த்தார். வாய்க்குச் சுவையாக இருந்த நல்ல இறைச்சித் துண்டுகளை எல்லாம் தேக்கிலையால் செய்த தொன்னையிலே எடுத்துக் கொண்டார்.திண்ணனாரின் இச்செய்கைகளை எல்லாம் பார்த்துக் கொண்டேயிருந்த காடனுக்கும், நாணனுக்கும் என்ன செய்வதென்றே புரியவில்லை. நாகனையும், தேவராட்டியையும் அழைத்து வந்து தக்க முடிவு காணலாம் என்ற எண்ணத்தோடு, திண்ணனாரிடம் கூடக் கூறலாம் புறப்பட்டனர். கண்ணிருந்தும் குருடராய், காதிருந்தும் செவிடராய் இறைவன் அன்பு மயக்கத்தில் ஐம்புலனையம் ஒருமைப்படுத்தித் தம்மை மறநந்திருந்த திண்ணனார், இவர்கள் பேசியதையும் கவனிக்கவில்லை; இவர்கள் சென்றதையும் கவனிக்கவில்லை. திண்ணனார் தொன்னையில் பன்றி இறைச்சியை நிரப்பிக் கொண்டார். இறைவனை நீராட்டுவதற்காக பொன் முகலி நீரை வாயில் நிறைய முகந்து கொண்டார். பூசிப்பதற்குத் தேவையான நறுமலர்களைக் கால்களினால் பறித்து வந்து தலைமீது ஏந்திக் கொண்டார். ஒரு கையிலே வில், மற்றொரு கையிலே ஆற்றுநீர், தலையிலே மலர்கள், இதயத்திலே இறைவனைப் பற்றிய சிந்தை ! இப்படியாக, சிவ வழிபாட்டிற்குப் புறப்பட்ட திண்ணனார், காளத்தி மலையை நோக்கி வேகமாக ஓடினார். சிவலிங்கப் பெருமானின் திருச்சன்னிதானத்தை அடைந்தார்.

முதல் வேலையாக அரசார் திருமேனியிலிருக்கும் மலர்களையும், பச்சை இலைகளையும் செருப்புக் காலால் அகற்றினார். வாயிலிருந்த பொன் முகலி ஆற்று நீரை ஆண்டவன் மீது உமிழ்ந்தார். இதயத்திலுள்ள எல்லையில்லா அன்பை அரனார் மீது சொரிவதுபோல தலைமீது சுமந்து வந்து நறுமலர்களை இறைவன் மீது பொழிந்தார். கையில் கொண்டு வந்திருந்த ஊன் நிறைந்த தொன்னையை தெய்வத்தின் திருமுன் பயபக்தியோடு வைத்தார், தேவரும், பூதகணங்களும் முனிவரும் போற்றி வணங்கும் மறைமுதல்வன், முன்னால் வைத்த இறைச்சியை, திருவமுதூட்டச் சித்தம் கொண்டார் திண்ணனார்.ஐயனே ! இந்த இறைச்சியை அம்பிலே கோர்த்து, நன்றாக நெருப்பிலிட்டுப் பக்குவமாகச் சமைத்துள்ளேன். அதிலும் நானே நாவால் சுவைத்துப் பார்த்துச் வையுள்ள இறைச்சியை மட்டும் தங்களுக்குக் கொண்டு வந்துள்ளேன். எம்பெருமானே ! இந்த ஏழையின் ஆசையைப் பூர்த்திசெய்யத் திருவமுது செய்து அருளவேண்டும் என்று மொழிந்தவாறே, ஊனை இறைவனுக்கு அன்போடு ஊட்டத் தொடங்கினார் திண்ணனார். உலகமெங்கும் கங்குல் அரசன் தனது ஆட்சியைத் தொடங்கினான். திண்ணனாருக்குப் பயம் ஏற்பட்டது. ஏற்பட்ட பயமோ தம்மைப்பற்றி அல்ல ! தமது அன்பு அணைப்பிலே அழுந்தி நிற்கும் இறைவனைப் பற்றித்தான்.இரவில் வனவிலங்குகள் வந்து இறைவனைத் துனன்புறுத்தக்கூடுமோ? என்ற பயத்தால் கலங்கிய திண்ணனார், செவ்விய அன்பு தாங்கிய திருக்கையில் வில்லைத் தாங்கிக் காளத்தியப்பரின் அருகினிலேயே அசையாமல் இரவெல்லாம் கண் இமைக்காமல் நேசமுறக் காவல் காத்து நின்றார். மூங்கில்கள் சொரியும் முத்துக்களின் ஒளியாலும், பாம்புகள் உமிழ்ந்த சிவந்த மாணிக்கக் கற்களின் பேரொளியினாலும் ஒளி வீசும் சோதி மரங்களின் விளக்கத்தாலும், குரங்குகள் பொதும்பில் அவைகட்கு விளக்காக வைத்த மணிவிளக்குகளின் ஒளியினாலும், ஐம்புலன்களை அடக்கிய முனிவர்கள்பால் எழும் அரிய பெரிய ஜோதி மயத்தாலும் எங்கும் ஒளிச்சுடர் படர்ந்த வண்ணமாகவே இருந்தன. இருள் புலர்ந்தது. புள்ளினங்கள் ஆர்த்தன. வேள்விச் சாலைகளில் அந்தணர்களின் வேதபாராயணம் ஒலித்தன. ஆலயங்களில் காலை முரசம் முழங்கின. செங்கதிரோன் குணதிசை எழுந்து தனது விரிக்கதிர்களைப் பாரிலே பரப்பினான். அவனது செம்மையான கதிர்கள் திண்ணனார் மீது பட்டன. உறங்காமல் காவம் புரிகின்ற பக்திச் செம்மல் இறைவனைப் பார்த்துப் பெரு மகிழ்ச்சி கொண்டார். அப்பொழுது அவரது மனதில் இறைவனுக்குத் திரும்பவும் பசி எடுக்குமே! அதற்குள் விரைந்து சென்று இறைச்சியைக் கொண்டு வரவேண்டும் என்று எண்ணினார். வேகமாகப் புறப்பட்டார்.

திண்ணனார் திருக்கோயிலை விட்டு வெளியே சென்ற சிறிது நேரத்திற்கெல்லாம் வழக்கம்போல் பூசை செய்யும் சிவகோசரியார் என்னும் அந்தணர் வழிபாடு செய்வதற்காக மலரும் நீரும் நறுமணப் புகைப்பொருளும் எடுத்து வந்தார். உள்ளே வந்த அந்தணர் இறைவன் திருமுன்னால் இறைச்சியும் எலும்பும் சிதறிக் கிடப்பதைக் கண்டு பதறினார். ஐயையோ ! இத்தகைய இழிவுச் செயல்களைச் செய்தவர் எவரோ ? என்று நிலத்தில் வீழ்ந்து அலறினார். செய்வதறியாது திகைத்தார். கலங்கினார். வேடர்குலத்தவர்தான் இத்தகைய கொடிய பாதகச் செயல்களைச் செய்திருக்க வேண்டும் ! என்று மனதில் எண்ணியவாறு அந்த இடத்தைச் சுத்தம் செய்தார். பொன் முகலிக்குச் சென்று நீராடித் திரும்பி வந்தார் அந்தணர். என்றும் போல் வேதம் ஓதி சைவாகம முறைப்படி இறைவனை நீராட்டினார். மலரிட்டு நறுமணப் புகை காட்டி வழிபட்டார். மனவேதனையோடு தமது வீட்டிற்குத் திரும்பினார். காளத்திமலையை விட்டுப் புறப்பட்ட திண்ணனார். அரனாருக்குப் பலவகை விலங்குகள் மாமிசத்தைச் சமைத்து அமுதூட்ட எண்ணினார். அதற்காக மான், பன்றி, காட்டுமான் முதலியவற்றை வேட்டையாடினார் திண்ணனார். அதன்பிறகு, முந்தைய நாள் போல், அவற்றை அம்பிற் கோர்த்து தீயிலிட்டு வதக்கி எடுத்தார். சுவைத்துப் பார்த்துக் தொன்னை நிறையச் சேர்த்துக் கொண்டார். தேன் அடைகளை பிழிந்து ஊனை கலந்தார். தலையில், மலரையும், வாயில் நீரையும் எடுத்துக் கொண்டு காளத்தியப்பரின் பசியைப் போக்கப் புறப்பட்டார் திண்ணனார். ஆலயத்தை அடைந்த திண்ணனார் இறைவன் முன்னால், பச்சிலையும், தண்ணீரும் இருப்பது கண்டு திகைத்தார். முன்போலவே அவற்றைச் செருப்பு கால்களால் சுத்தம் செய்தார். வாயில் இருந்த தண்ணீரை உமிழ்ந்து இறைவனுக்கு திருமஞ்சன நீராட்டினார். தலையிலிருந்து மலரை உதிர்த்து அர்ச்சனை புரிந்தார். அன்போடு அமுதூட்டி உளம் மகிழ்ந்தார். இப்படியாக தினமும் திண்ணனாரும், சிவகோசரியாரும் மாறி மாறி சிவபூஜை செய்து வரலாயினர்.திண்ணனாரின் ஊன் அமுதும் அன்பும் கலந்த பூசையும், சிவகோசரியாரின் சிவாகமமுறை வழிபாடும் நாள்தோறும் இடைவிடாமல் நடந்த வண்ணமாகவே இருந்தன. இதற்குள், நாணனும், காடனும் ஊருக்குத் திரும்பி நாகனிடம், திண்ணனாரின் நிலையைப் பற்றி விளக்கிக் கூறினர். நாகன் அரவம் தீண்வினாற்போல் துடித்தான். மகனுக்கு ஏதோ ஆபத்து நேர்ந்துவிட்டது என்று அஞ்சி நடுங்கினான். நாகன் தேவராட்டியையும், தத்தையயும் அழைத்துக் கொண்டு, திண்ணனாரைப் பார்க்கக் காளத்தி மலைக்கு புறப்பட்டான். திண்ணனார் குடுமித்தேவரை அணைந்த வண்ணம் இருந்தார். அப்பொழுது அங்கு வந்த நாகனும், தத்தையும் திண்ணனாரிடம், பல வழிகளில் பேசிப் பார்த்தார்கள். பழகிப் பார்த்தார்கள். அவரைப் பிடித்திருக்கும் சாமிப் பைத்தியம் மட்டும் விட்ட பாடில்லை என்பதை உணர்ந்து வருந்தினார்கள். தேவராட்டிøயும் முயற்சித்துத் தோல்வியுற்றாள். நாகனும் தத்தையும் மனம் வருந்தினர். மகனைத் தன்னோடு அழைத்துச் செல்வது என்பது இயலாத காரியம் என்பதைத் திடமாகக் கொண்டனர். இறைவனது கருணைக் கயிற்றிலே கட்டுண்ட திண்ணனார் இவர்கள் முன்னால் வெறும் ஜடமாகவே காணப்பட்டார். அவர்கள் திண்ணனாரைப் பழைய நிலைக்குக் கொண்டு வருவது இயலாத காரியம் என்று வருத்தத்துடன் வந்த வழியே திரும்பினார்கள். குடுமித்தேவருக்கு வேடர் வழிபாடும், வேதியர் வழிபாடும் நான்கு நாட்களாகக் கலந்து கலந்து நிகழலாயின. ஐந்தாம் நாள் வந்தது. அன்றும் வழக்கம்போல், திண்ணனார் சென்ற சற்று நேரத்திற்கெல்லாம் வந்த சிவகோசரியார் இறைவன் முன்னால் தினமும் காலை தான் வரும்பொழுதெல்லாம் இறைச்சி சிதறிக் கிடப்பதை எண்ணி மனம் தாளாமல் இறைவனிடம் இறைஞ்சினார்.

எம்பிரானே ! தம்பிரானே ! திருக்காளத்தி அப்பனே ! அபச்சாரம். தினம் தவறாது எலும்பையும் இறைச்சியையும் உமது திருமுன்னால் வாரி இறைத்து மாசுபடுத்துவது இன்னாரென்று யான் அறியேனே !தேவரீர் ! திருஉள்ளம் கனிந்து இத்தகைய கொடுமையை இனியும் நேராத வண்ணம் எம்மைக் காத்தருள வேண்டும் என்று பரமனிடம் பிரார்த்தித்தபடியே வழிபாட்டை முடித்துக் கொண்டு வீட்டிற்குச் சென்றார். அன்றிரவு அவரது கனவில் செஞ்சுடர் வண்ணர் எழுந்தருளினார்.இச்செயலை யாரோ வேடுவன் வேண்டுமென்றே, என்னை இழிவுபடுத்த வேண்டும் என்பதற்காகச் செய்கிறான் என்று மட்டும் எண்ணிவிடாதே. அவனது வடிவமெல்லாம் எப்பொழுதும் நம் பக்கம் அன்பு செலுத்தும் தன்மையானதே.அவனுடைய அறிவும் உணர்வும் நம்மை அறியும் அறிவே ! அவனுடைய செயல் ஒவ்வொன்றும் நமக்கு இனிமை பயக்கக்கூடியதாகும். அவனது செருப்புக் கால்கள் என் மீது தேய்த்துச் சுத்தப்படுத்தும் போது எனக்கு மழலைகளின் சேவடிகள் தடவிச் செல்வது போன்ற இன்பப் பெருக்கை ஏற்படுத்துகிறது. கங்கை, காவிரி முதலிய தூய நதிகளின் நீரைவிடத் தூய்மையான அவன் தனது வாயினின்றும் உமிழ்கின்ற திருமஞ்சன நீர். அவனது முடியிலிருந்து உதிர்ந்து விழும் நறுமலர்கள், அவன் எம்மீது கொண்டுள்ள உயிருக்கு உயிரான அன்பு மலர்ந்து, நம்மீது நழுவி விழுவதைப் போலாகும், அம்மலர்களுக்குத் தேவதேவாதியர்கள் இடும் பாரிஜாத மலர்கள் கூட ஒவ்வா. அவன் ஊட்டும் இறைச்சி மறைவிதிப்படி அளிக்கும் அவிர்பாகத்தைவிடச் சிறந்ததாகும். வேத முனிவர்கள் ஓதும் தோத்திர நாமங்களை விட, அவன் அகம் குளிர அன்புருகிக் கூறும் மொழிகளே மிகமிக நல்லவை; எனக்கு இன்பம் தரத்தக்கவை. அவனது இத்தகைய உயர்ந்த அன்புச் செயலை உனக்குக் காட்டுகிறேன். இதற்காகக் கலங்காதே என்று திருவாய் மலர்ந்தார் எம்பெருமான் ! சிவகோசரியார் கனவு கலைந்து திடீரென்று விழித்தெழுந்தார். எம்பெருமானைப் போற்றி நிலத்தில் வீழ்ந்து வணங்கினார். அவரது கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருகியது. அதன் பின்னர் உறக்கம் எப்படி வரும் ! கனவில் கண்ட பெருமானின் திருக்கோலத்தை எண்ணியபடியே விடியும்வரை விழித்திருந்தார். அன்று ஆறாம் நாள் ! வழக்கம்போல் திண்ணனார் வேட்டைக்குப் புறப்பட்டார். அந்தச் சமயத்தில் அந்தணர் மன நிறைவோடு திருக்கோயிலுக்கு வந்தார். வழக்கப்படி வேதாகம வழிபாடுகளைச் செய்தார். அதன் பிறகு இறைவன் கனவில் எழுந்தருளி மொழிந்ததற்கு ஏற்பச் சிவலிங்கத்தின் பின்புறமாக ஓரிடத்தில் மறைந்து கொண்டார். வழக்கம்போல், தொன்னையில் இறைச்சியும், தலையில் நறுமலரும், வாயில் பொன்முகலி ஆற்றுத் தெளிந்த நீரும் எடுத்துக் கொண்டு திண்ணனார் திருச்சன்னிதிக்குள் வந்தார். திண்ணனாரின் பக்தியை உலகோர்க்கு உணர்த்தவும், இறைவன் மீது கொண்டுள்ள அன்பை சிவகோசரியாருக்குத் தெரியப்படுத்துவதற்காகவும் வேண்டி குடுமித் தேவர், அந்த ஆனந்தமலை மீது ஓர் அற்புத விளையாடலைத் தொடங்கினார். எம்பெருமான், தமது சிவலிங்கத் திருமேனியில் வலக்கண்ணில் இருந்து இரத்தம் வடிவதைப் போல் காட்டினார்.

சிவபெருமானுடைய திருவிழிகளிலிருந்து குருதி கொட்டுவது கண்டு மதிமயங்கிய திண்ணனார் செயலிழந்தார். வாயிலிருந்த பொன்முகலியாற்று நீர் கீழே விழுந்து சிதறியது. வில்லும் கீழே நழுவின. குடுமியில் சுமந்து வந்த நறுமலர்கள் சோர்ந்தன. அருள் மிகுதியால் நிலை தளர்ந்த திண்ணனர் பதைபதைத்துக் கீழே விழுந்தார். அவரது உள்ளமும், உடலும் நடுங்கியது. நடுக்கத்தால் உடல் வியர்த்தது. அவர் கண்ணீர் வடித்தார் ! கதறினார் ! திடுக்கிட்டு எழுந்தார். எம்பெருமானின் குருதி வழியும் திருக்கண்ணை தமது கையால் துடைத்தார். குருதி மட்டும் நின்றபாடில்லை. செய்வதறியாது, செயல் மறந்து நிலத்தில் வீழ்ந்தார். மீண்டும் எழுந்தார்.எம்பெருமானுக்கு இத்தகைய கொடிய துன்பத்தை செய்தது யார்? காட்டு விலங்குகளானாலும் சரி, மாறாக வேடர்கள் ஆனாலும் சரி, என் ஐயனுக்கு இப்படியொரு துன்பத்தைக் கொடுத்ததை மட்டும் என்னால் பொறுக்கவே முடியாது. இப்பொழுது பழி வாங்கி வருகிறேன் என்று கர்ஜித்த திண்ணனார் கோபத்துடன் எழுந்தார். வில்லும் அம்பும் எடுத்தார். வில்லில் நாணேற்றி குன்றின் சாரலில் அங்குமிங்குமாக நெடுந்தூரம் தேடித் தேடி அலைந்தார். தேடிய இடங்களிலெல்லாம் விலங்குகளையோ வேடர்களையோ காணாது வேதனையோடு திரும்பி வந்தார்.எம்பெருமானின் இரத்தம் சிந்தும் விழிகளைப்ப பார்த்து ரத்தக் கண்ணீர் வடித்தார். குடுமித்தேவரை இறுகக் கட்டித் தழுவினார். அன்பும் அருளும் இணைந்தன. பக்தியும், சக்தியும் கலந்தன.வேடர்கள் மூலிகைகளைக் கொண்டு புண்களை ஆற்றுவது திண்ணனார் நினைவிற்கு வந்தது. உடனே காளத்தி மலை அடிவாரத்திற்குச் சென்று தமக்குத் தெரிந்த சில பச்சிலை மூலிகைகளைப் பறித்து வந்தார். அப்பச்சிலைகளைக் கசக்கிப் பிழிந்து சாற்றை இறைவன் திருவிழிகளில் பிழிந்தார். அப்படியும் பெருகி வந்த இரத்தம் மட்டும் சற்றுகூட நிற்கவே இல்லை.அந்த சமயத்தில், ஊனுக்கு ஊனிடல் வேண்டும் என்ற ஆன்றோர்களின் சித்தாந்த மொழி அவரது சிந்தைக்கு எட்டியது.எம்பெருமானுடைய விழிக்கு நேர்ந்த விபத்தைத் தீர்ப்பதற்கு, தம்முடைய விழிகளில் ஒன்றைத் தோண்டி எடுப்பது இரத்தம் சிந்தும் இறைவனின் திருவிழிகளில் வைப்பது என்ற கருத்தினைக் கொண்டார் திண்ணனார். சற்றும் தாமதிக்காமல் கூரிய அம்பினால் தமது வலக்கண்னைத் தோண்டி எடுத்தார். காளத்தி அப்பனின் ரத்தம் வழியும் வலக்கண்ணில் அப்பினார் திண்ணனார். அக்கண்ணில் இருந்து ரத்தம் வழிவது நின்றது. திண்ணனாரின் கண்களிலிருந்து ரத்தம் பெருக்கெடுத்து ஓடத் தொடங்கியது. அவர் அதைச் சற்றும் பொருட்படுத்தவில்லை. வேதனையைப்பற்றி சற்றுகூட எண்ணிக் கதறவில்லை. தாம் தக்க சிந்தனையோடு செய்த செயல் பரமனின் கண்களைக் குணப்படுத்திவிட்டதே என்ற களிப்பில் மலையை ஒத்த தமது தோள்களைத் தட்டிக் கொண்டு ஆனந்தக் கூத்தாடினார். திண்ணனாரின் தெளிந்த பேரன்பின் பெருக்கினை மேலும் சோதிக்க தொடங்கிய சிவனார். தமது இடக்கண்ணிலிருந்தும் ரத்தம் வழியுமாறு செய்தார்.

ஆனந்தக் கூத்தாடிக் களித்து நின்ற திண்ணனார் இறைவனின் இடக்கண்ணிலிருந்து ரத்தம் பெருகி வருவது கண்டு, அப்படியே அசைவற்று நின்றார். கண்ணுக்குக் கைகண்ட மருந்தைக் கண்ட பின்னர் திண்ணன

பத்ராசல ராமதாஸர்



கிருஷ்ணதேவராயர் ஆண்ட விஜயநகரப் பேரரசுக்கு உட்பட்ட, கொல்ல கொண்ட பல்லம் என்னும் ஊரில் லிங்கண்ணா, காமாம்பாள் தம்பதியர் வசித்தனர். இவர்களுக்கு தெய்வீகக்குழந்தையாக 1630ல் கோபன்னா பிறந்தார். இவரது இயற்பெயர் கஞ்செர்ல கோபராஜு. இளமையிலேயே ராமாயணக் கதையை விருப்பத்தோடு கேட்பார். இதன் காரணமாக, அவரது பிஞ்சுமனத்தில் ராமபக்தி ஆழமாக வேர் கொண்டது. மகான் கபீர்தாசரிடம் ராமநாம உபதேசம் பெற்று ஜபம் செய்யத் தொடங்கினார். இரவும் பகலும் அவருடைய நாவில் ராமநாமம் ஒலித்தது. தாய்மொழியாம் தெலுங்கிலும், சமஸ்கிருதத்திலும் தேர்ந்த புலமை பெற்றிருந்த கோபன்னா, இறைநாமத்தை சொல்லும் அற்புதக் கவிதைகளை இயற்றினான். இல்லறமே நல்லறம் எனப் பெற்றோர் உபதேசிக்க, கமலம்மா என்ற பெண்ணை மணந்து ஒரு குழந்தைக்குத் தந்தையானார். தம்பதியர் ஒருவருக்கொருவர் பக்தியில் சளைத்தவர்கள் இல்லை என்பதை உணர்த்தும்வகையில் ஒரு நிகழ்ச்சி அவர்கள் வீட்டில் நடந்தது.

மகான் கபீர்தாசர் கோபன்னாவின் கனவில் தோன்றி, ராமநாம உபதேசத்தை அருளினார். அன்று கோபன்னாவின் வாழ்க்கை திசை திரும்பியது. எந்நேரமும் ராமநாமத்தை உச்சரித்து ராமபக்தியில் மூழ்கிப்போனார். ஒருமுறை ஸ்ரீராமநவமியன்று, வீட்டில் விசேஷ பூஜைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பாகவதகோஷ்டியினர் பஜனை செய்து கொண்டிருந்தனர். அடியார்களின் அன்னதானத்திற்காக சமையல்வேலை மும்முரமாக ஒருபுறம் நடந்து கொண்டிருந்தது. பஜனையில் ஈடுபட்டிருந்ததால் கமலம்மா குழந்தையை கவனிக்காமல் விட்டுவிட்டாள். மகன் தவழ்ந்தபடியே அடுப்படிக்குள் நுழைந்து சாதம் வடித்த சுடுகஞ்சியில் விழுந்துவிட்டான். சமையல் ஆட்கள் பதறிப்போய் கமலம்மாவிடம் தெரிவித்தனர். பேச்சு மூச்சில்லாமல் கிடந்த பிள்ளையைக் கண்ட தாய் மனம் துடித்தாள். ஆனால், யாரிடமும் காட்டிக் கொள்ளாமல் மங்கள ஆரத்தியில் கலந்து கொண்டு கண்ணீர் பெருக்கி நின்றாள். பஜனை முடித்த பாகவதர்கள் விருந்துண்ட பின் வீட்டுக்கு புறப்பட்டனர். கோபன்னாவிடம் கமலம்மா நடந்த விஷயத்தைத் தெரிவித்தாள். தம்பதியர் ராமபிரானிடம் முறையிட்டு அழுதனர். அப்போது அங்கே ஒரு அதிசயம் நிகழ்ந்தது. கீரைத்தண்டு போல துவண்டு கிடந்த பிள்ளையின் கண்கள் அசைந்தன. அம்மா என்று மெல்ல அழைத்தான். இருவரும் மகிழ்ச்சிப் பெருக்கில் திளைத்தனர். அன்று முதல் கோபன்னாவின் மனம் ராமபக்தியில் முழுமையாக ஈடுபட்டு விட்டது. ராமன் மட்டுமே இனி நமக்கு கதி என்ற முடிவுக்கு வந்துவிட்டார்.

கோபன்னாவின் தாய்மாமன்கள் அக்கன்னாவும், மாதன்னாவும் ஐதராபாத் அரசர் தானீஷாவிடம் பணியாற்றி வந்தனர். தங்களின் மருமகன் கோபன்னாவிற்கும் சமஸ்தானத்தில் பணியாற்ற ஏற்பாடு செய்தனர். பத்ராசலம் நகரத்தில் வரிவசூலிக்க கோபன்னா நியமிக்கப்பட்டார். அன்பு, நேர்மை, நல்லொழுக்கம் ஆகியவற்றால் மக்களைக் கவர்ந்தவர், நியாயமான முறையில் வரி வசூலித்து அரசு கஜானாவுக்கு வழங்கினார். பத்ராசலத்தில் ராமர் கோயில் இருப்பதை அறிந்த கோபன்னா மகிழ்ச்சி அடைந்தார். காகேதய மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட இக்கோயிலில் புதர் மண்டிக் கிடந்தது. வழிபாடு இல்லாமல் மோசமாக கிடந்த ராமசன்னதியைக் கண்டு வருந்தினார் கோபன்னா. அரசாங்கத்துக்காக வசூலித்த வரிப்பணத்தில் கோயில் வழிபாட்டுக்கு ஏற்பாடு செய்தார். கட்டுமானப்பணியைத் தொடங்கினார். வரிப்பணம் முழுவதையும் ராமர் கோயில் திருப்பணிக்கு செலவிட்டார். ஆறுலட்சம் வராகன் செலவில் கோயிலைக் கட்டியதோடு, பலவிதமான தங்க ஆபரணங்களையும் செய்து கொடுத்தார். கோபன்னாவின் ராமபக்தியைக் கண்ட மக்கள் அவரை ராமதாசர் என்று அழைக்கத் தொடங்கினர். மக்கள் பாராட்டினாலும், வரிப்பணத்தை செலவிட்டால் அரசாங்கம் விடுமா? மன்னர் தானீஷா ராமதாசரை கோல்கொண்டா சிறையில் அடைக்க உத்தரவிட்டார். தாய்மாமனார்களால் ராமதாசருக்கு ஒரு உதவியும் செய்ய முடியவில்லை. தொடர்ந்து பன்னிரண்டு ஆண்டுகள் சிறையில் பல கொடுமைகளுக்கு ஆளானார். அப்போது அவர் பாடிய பாடல்கள் மிகவும் உருக்கமானவை. இனிமேல் இந்த கோரமான அடிகளை என்னால் தாங்கிக் கொள்ள முடியாது. உன்னைக் கும்பிட்ட கைகளை தடி கொண்டு அடிக்கிறார்களே! என்று இவர் பாடிய பாடல்வரிகள் கல்லையும் கரையச் செய்யும் தன்மை கொண்டதாகும். இஷவாகுகுல திலகா என்று தொடங்கும் பாடலில் ராமனுக்காக கோயில் கட்டிய செலவுக் கணக்கைக் கூறி வேதனைப்படுகிறார். ராமா! உனக்கு கிரீடம், ஆபரணம் செய்து அழகு பார்த்தேனே! எனக்கு அளித்ததோ கை விலங்கு அல்லவா! அரசு பணத்தை உனக்காக செலவழித்தேன். அதை நீயே மன்னருக்கு அளித்துவிடு! என்று உள்ளம் உருகி வேண்டுகிறார்.
ஒருநாள் நள்ளிரவில், பாதுஷா தானீஷா பள்ளியறையில் இருந்தபோது ராமலட்சுமணர் இருவரும் ராமதாசரின் சேவகர் போல அவர் முன் வந்தனர். ராமதாசர் செலுத்தவேண்டிய ஆறுலட்சம் வராகன் பணத்தையும் திருப்பி அளித்து மன்னர் கையெழுத்திட்ட ரசீதையும் பெற்று, ராமதாசரின் அருகில் வைத்து விட்டு மறைந்தனர். ராமதாசரோ இப்படி ஒரு அதிசயத்தை நிகழ்த்தியது யாரென்று தெரியாமல் தவித்தார். பின், ராமரும், லட்சுமணரும் ராமதாசரின் சேவகர் போல வந்து பணத்தைத் திருப்பி செலுத்தியதை அறிந்தார். பாதுஷா தானீஷா ராமதாசரை சிறையில் இருந்து விடுவித்ததோடு அவரிடம் மன்னிப்பும் கேட்டார். பத்ராசலம் ராமர் கோயிலுக்கு பல நன்கொடைகளையும் வழங்கினார். இந்த நிகழ்ச்சிக்குப்பின் என் ராமனைக் கண்ட தானீஷாவே என்னும் பொருள்பட பாடிய தன்யுடை தானீஷா நீவு நன்னு கன்னய்யா பதமுலு என்ற அவர் பாடிய பாடல் புகழ்பெற்றது. பத்ராசலம் கோயிலில் தன் இறுதிக் காலத்தைக் கழித்து வந்தார். 1688ம் வருடம் ஸ்ரீராமனின் திருவடியில் கலந்தார். ராமபக்தியில் சிறந்து விளங்கிய தியாகராஜருக்கு முன்னோடியாக வாழ்ந்தவர் ராமதாசர். ராமசந்திர மூர்த்தியின் பரமபக்தனாக விளங்கும் ராமதாஸரைப் போற்றி வணங்குகிறேன் என தியாகராஜர், தனது கீர்த்தனையில் புகழ்ந்து பாடியுள்ளார். ராமபக்திக்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்த ராமதாஸரின் ராமபக்திக்கு ஈடு இணையேது. அவர் பத்ரகிரிமலையில் ஏறியபோது விஷ்ணு தூதர்கள் வந்து வைகுண்டத்திற்கு அழைத்துச் சென்றதாக பத்ராசலம் கோயில் தலவரலாறு கூறுகிறது.

இறைவனிடம் எவ்வாறு பிரார்த்தனை செய்ய வேண்டும்?



ஒரு ஆசிரமத்தில் சீடன் ஒருவன் மரக்கன்று ஒன்றை நட்டுவிட்டு, ஆண்டவனே இம்மரக்கன்று சீக்கிரம் வளரவேண்டும்... எனவே நிறைய மழை பெய்யட்டும் என்று வேண்டினான். அவ்வாறே மழை அதிகம் பெய்தது. ஊறிப் போன மரக்கன்று அழுகிவிடுமோ என பயந்தான் சீடன். இறைவா, மழையை நிறுத்தி நல்ல வெயில் அடிக்கும்படி செய்..! என்று வேண்டினான். அப்படியே வெயில் அடித்ததில் செடி வாட ஆரம்பித்தது. பதறிப்போன சீடன், வெயிலும் வேண்டாம், மழையும் வேண்டாம், பனி பொழியட்டும்! என்று பிரார்த்தித்தான். தட்பவெப்பம் அடிக்கடி மாறியதில் தாக்குப் பிடிக்காமல் செடி பட்டுப் போனது. இறைவனுக்கு கருணையே இல்லை என குருவிடம் முறையிட்டான் சீடன். எல்லாம் கேட்டபின் குரு சொன்னார், தன் படைப்பில் எதற்கு எப்போது என்ன தேவை என்பது இறைவனுக்குத் தெரியும். சுயநலத்திற்காக அதனை மாற்ற நினைத்து வேண்டினால் இப்படித்தான் ஆகும்! உணர்ந்த சீடன், மற்றொரு மரக்கன்றை நட்டுவிட்டு, இறைவா, இதை நீயே பார்த்துக் கொள்! என வேண்ட ஆரம்பித்தான். எனவே சுயநலம் இன்றி இறைவனை வழிபடுவதே சிறப்பைத்தரும்.

இறைவழிபாட்டில் சங்கு முக்கிய இடம் பெறுவது ஏன்?


           பிறப்பு, இறப்பு என அனைத்திலும் சங்கு முக்கியம் இடம் வகிக்கிறது. இதன் ஒலியில் தீய சக்திகள் நீங்கி நல்ல சக்திகள் உருவாகிறது. ஆலயங்களில் பூஜைகள் ஆரம்பிக்கப்படும் போது சங்கு முழங்கும் செய்து பூஜைகள் செய்யப்படும். பழங்காலங்களில் அரண்மனைகளில் அரச விழாக்கள் ஆரம்பிக்கும் முன்பும், போருக்கு தயாராகும் போது சங்கினை ஒலிக்க வைப்பார்கள். இப்படி ஓசை தரும் சங்கு பாசம் தரும் சங்காக குழந்தைகளுக்கு பால் பருக்குவதற்கும் அந்நாளில் பயன்படுத்தினர்.

மகாலட்சுமிக்கு ஒப்பான சங்கு எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கு லட்சுமி வசிக்கிறாள். பூஜைக்கு உகந்ததாக வலம்புரி பெருமை பெற்றது. வலம்புரிசங்கில் நீர்விட்டு கும்பத்தின் மேல் வைத்து புஸ்பங்களினால் பூஜை செய்து ஆராதனை செய்து அதன் பரிசுத்தமான தீர்த்தம் சுவாமி சிலைகளில் அபிஷேகிக்கும் போது அத்தீர்த்தம் மகாபுண்ணிய தீர்த்தமாக விளங்குகிறது. ஆலயங்களில் பிரதான சங்காக வலம்புரிச் சங்கு இடம் பெறும். சங்கின் அமைப்பு, அந்தப் பிரணவத்தை உணர்த்துகிறது. வலம்புரி கணபதியின் தும்பிக்கையைப் போல் தோற்றம் அமைந்திருக்கும். பாற்கடலைக் கடைந்த போது வந்த பல மங்கலப் பொருட்களில் இந்தச் சங்கும் ஒன்று. இந்தச் சங்கு உதயம் ஆனதும் மஹாவிஷ்ணு, அதைத் தன் கரத்தில் வைத்துக்கொண்டு சங்கு சக்ரதாரி ஆனார். சங்கு ஐஸ்வர்யம், வீரம், மங்கலம் இவற்றைப் பிரதிபலிக்கும் பொருளாக அமைகிறது. வலம்புரிச் சங்கில் லட்சுமி, குபேரன் ஆகியோர் வாசம் செய்கிறார்கள். இதை வைத்துப் பூஜை செய்ய, சுபீடசம் பெருகும். வியாதிகள் நீங்கும்.

ஒரு வலம்புரி சங்கு, கோடி இடம்புரி சங்குகளுக்கு சமம். எனவே, சுவாமிக்கு வலம்புரி சங்கினால் அபிஷேகம் செய்தால், விசேஷமானது. அதிலும் கோடி வலம்புரி சங்குகளுக்கு சமமானதாக கருதப்படும். கோமடி சங்கு அபிஷேகம் செய்வது மிகவும் விஷேசம். இதனை, அம்பிகையின் வடிவமான பசுவின் மடியில் இருந்து நேரடியாக சிவனுக்கு அபிஷேகம் செய்யப்படுவது என்பர். கார்த்திகை மாதத்தில், பவுர்ணமியுடன் கிருத்திகை நட்சத்திரம் கூடும் நேரத்தில், சிவபெருமான் அக்னி பிழம்பாக காட்சி தருகிறார். அதனால், கார்த்திகை மாதத்தில் வரும் திங்கட்கிழமைகளில் (சோமவாரம்), சிவன் கோவில்களில் இறைவனை குளிர்விக்க, சங்காபிஷேக பூஜைகள் நடத்தப்படுகிறது. இந்த சங்காபிஷேகம் சிவ பூஜையில் சிறப்பானதாக கருதப்படுகிறது. இத்தகைய சிறப்பு மிக்க சங்கை வழிபட்டு ஐஸ்வர்யம், லட்சுமி கடாட்சம் பெறுவோம்

வகைவகையான வீணைகள்!




வீணை என்று சொன்னதுமே எல்லோருக்கும் சரஸ்வதியின் நினைவு தான் வரும். ஆனால் 32 வகையான வீணைகளை 31 தெய்வங்கள் இசைப்பதாக புராணங்கள் சொல்கின்றன.

1. பிரம்மதேவனின் வீணை- அண்டம்,
2. விஷ்ணு- பிண்டகம்,
3. ருத்திரர்- சராசுரம்,
4. கவுரி- ருத்ரிகை,
5. காளி- காந்தாரி,
6. லட்சுமி- சாரங்கி,
7. சரஸ்வதி- கச்சபி எனும் களாவதி,
8. இந்திரன்- சித்தரம்,
9. குபேரன்- அதிசித்திரம்,
10. வருணன்- கின்னரி,
11. வாயு- திக்குச்சிகை யாழ்.
12. அக்கினி- கோழாவளி,
13. நமன்- அஸ்த கூர்மம்,
14. நிருதி- வராளி யாழ்,
15. ஆதிசேடன்- விபஞ்சகம்,
16. சந்திரன்- சரவீணை,
17. சூரியன்- நாவீதம்,
18. வியாழன்- வல்லகி யாழ்,
19. சுக்கிரன்- வாதினி,
20- நாரதர்- மகதி யாழ்,
21. தும்புரு- களாவதி (மகதி),
22. விசுவாவசு- பிரகரதி,
23. புதன்- வித்யாவதி,
24. ரம்பை- ஏக வீணை,
25. திலோத்தமை- நாராயணி.
26. மேனகை- வாணி,
27. ஊர்வசி-லகுவாக்ஷி,
28. ஜயந்தன்- சதுசும்,
29. ஆஹா, ஊஹூ தேவர்கள்- நிர்மதி,
30. சித்திரசேனன்- தர்மவதி (கச்சளா)
31. அனுமன்- அனுமதம்.
32 வது வகை வீணையை வாசிப்பவன், ராவணன். அவனது வீணையின் பெயர், ராவணாசுரம்.

26 ஜனவரி 2013

கருவிலிருக்கும் குழந்தையின் வடிவம் ஓம்!

"ஓம்' என்னும் பிரணவ மந்திரத்திற்குள்ளே தான் இந்த அண்டமே அடங்குகிறது! வையத்திலுள்ளோரை வழிநடத்தி வாழ்வாங்கு வாழச் செய்வது இந்தப் பிரணவ மந்திரமே. கடவுள் முதல் கடைசிக் குடிமகன் வரை ஓங்கி ஒலிக்கும் வலிமை வாய்ந்த- மிக எளிமையான மந்திரம் "ஓம்'. இந்து மதத்தின் இரு கண்களாக விளங்கும் சைவம், வைணவம் இரண்டுமே போற்றிடும் சக்தி வாய்ந்த பிரபஞ்ச மந்திரமாக இது திகழ்கிறது.

இந்த மந்திரத்தில் உயிர் இருப்பதால் இதைப் "பிரணவம்' என்கிறோம். பிரணவம், பிராணன் என்பதற்கெல்லாம் "உயிர்' என்பதே பொருள்.

"ஓம்' என்பதன் பொருள் என்ன? அதன் தத்துவம் என்ன? அதன் நிலைப்பாடு என்ன? எந்தெந்த தெய்வங்களை வேண்ட இந்த மந்திரத்தைச் சொல்ல வேண்டும்? இதனைச் சொல்வதால் அடையும் நன்மைகள் என்ன? யார் யாரெல்லாம் இந்த மந்திரத்தைச் சொல்லலாம்?
"ஓம்' என்பது "அ'கார "உ'கார "ம'கார எழுத்துகளின் சங்கமம். "ஓ' என்பது தமிழில் உயிர் நெடில்; "ம்' என்பது மெய் எழுத்து.

உயிரும் மெய்யும் (உயிர் + உடல்) சேர்ந்தால் ஒரு உயிருள்ள உடல் உருவாகின்றது. உயிர் இல்லாத உடல் பிணம்; மெய் (உடல்) இல்லாத உயிர் (ஆன்மா) ஆவி.

"ஓம்' என்பது உயிரும் உடலும் இரண்டறக் கலந்த உயிருள்ள உடல் போன்றது. அதாவது முழுமையானது; பரிபூரணமானது. பூரணம் என்றால் பூஜ்ஜியம் என்பதையே குறிக்கும். பூஜ்ஜியம் என்றால் ஒன்றுமே இல்லை என நாம் நினைக்கிறோம். ஆனால் பூஜ்ஜியம் இல்லா விட்டால் எதுவுமே இல்லை. இந்தப் பிரபஞ்சமே பூஜ்ஜியம்தானே! "ஓம்' என்பது உயிராகி உடலை இயக்குவது! துடிப்புடன் பிரபஞ்சம் முழுவதும் நீக்கமற நிறைந்துள்ளது.

"ஓம் பூர்ண மதஹ் பூர்ணமிதம்

பூர்ணாத் பூர்ணமுதச்யதே

பூர்ணஸ்ய பூர்ணமாதாய

பூர்ணமே வா வசிஷ்யதே'.

"அங்கிருப்பதும் பூரணம்; இங்கிருப்பதும் பூரணம். பூரணத்திலிருந்து பூரணம் உண்டாகி யுள்ளது. பூரணத்திலிருந்து பூரணத்தை எடுத்த பின்பும் மிஞ்சி நிற்பதும் பூரணமே' என்பது மேற்சொன்ன சுலோகத்தின் பொருள். பூரணத்தைப் பிரித்தால்கூட அதுவும் பூரணமாகவே இருக்கும். ஆக பரம்பொருள் பூரணமானது; அதன் ஒரு சிறு பகுதியும் பூரணமே.

ஒரு காந்தக் கட்டியை நூலில் கட்டித் தொங்கவிட்டால் அது வட, தென் துருவங்களை நோக்கியே நிற்கும். உலகின் எந்தப் பகுதியிலும், எந்த வேளையிலும் அது அதே நிலையில்தான் நிற்கும். நாம் அதை திசை மாற்றித் திருப்பி விட்டால்கூட அது பழைய நிலைக்கே திரும்பிவிடும். அதே காந்தக் கட்டியைப் பல துண்டுகளாக உடைத்தாலும், ஒவ்வொரு துண்டும் உடைப்பதற்கு முன்பிருந்த காந்தக்கட்டியின் தன்மையை ஒத்திருக்கும். வடிவம்தான் சிறிதாகுமே தவிர குணத்தில் வேறுபடாது.

மேற்சொன்ன சுலோகத்தின் கருத்தை- பூர்ண சக்தியை கவியரசு கண்ணதாசன் அவருக்கே உரித்தான கவிநயத்தில்,

"பூஜ்ஜியத்துக்குள்ளே ஒரு

ராஜ்ஜியத்தை ஆண்டு கொண்டு

புரியாமலே இருப்பான் ஒருவன்

அவனைப் புரிந்துகொண்டால்

அவன்தான் இறைவன்!'

என்கிறார்.
கருவிலிருக்கும் குழந்தை "ஓம்' என்ற எழுத்து வடிவத்திலேயே காணப்படும். இந்த நிலையை எக்ஸ்ரே மற்றும் ஸ்கேன் கருவிகள் வந்தபின்பே நாம் பார்க்க முடிந்தது. ஆனால் ஞானிகளும் யோகிகளும் பல்லாயிரம் வருடங்களுக்கு முன்னரே இந்த உண்மையைக் கூறியிருக்கின்றனர். கருப்பையில் கரு வளர்வதற்குத் தேவையான அனைத்து பஞ்சபூத சக்திகளும் தொப்புள்கொடி வழியாகச் செல்லுகிறது. நமக்கு ஆரம்பத்தில் உணவு செல்லும் வாய், நாபி எனப்படும் தொப்புள் ஆகும்.

குழந்தை கருப்பையிலிருந்து வெளிவந்தபின், தொப்புளுடன் இணைந்திருக்கும் நஞ்சுக்கொடியை (மாவி) தொப்புளிலிருந்து நான்கு அல்லது ஐந்து அங்குல நீளம் விட்டு அறுத்தெடுத்து பூமியில் புதைத்துவிடுவர். பின் அக்குழந்தை வாய்வழி உணவு உண்ண ஆரம்பிக்கிறது.

தொப்புள் என்பது கரு வளர அடிப்படை உறுப்பு. மஹாவிஷ்ணுவின் தொப்புளிலிருந்து உதித்த தாமரையில் பிறந்தவரே சிருஷ்டிகர்த்தா வான பிரம்மா. சிருஷ்டிக்கும் தொப்புளுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டென்பதைப் புராணங்கள் கூறுகின்றன. உயிரைப் படைப்பவன் பிரம்மன்; பின் அதை இயக்குவது பிராணன் எனப்படும் ஆன்மா.

"ஓம்' என்னும் மந்திரத்தில் "ஓ' என்பது தொப்புளிலிருந்தே உருவாகிறது. "ம்' என்பது வாயிதழ்களில் நிறைவு பெற்று, உள்ளும் புறமும் அதிர்வலைகளை எழுப்புகின்றது.

உடலுக்கு ஒன்பது வாயில்கள். கண்கள் இரண்டு, நாசிகள் இரண்டு, காதுகள் இரண்டு; வாய், ஜனனேந்திரியம், ஆசனம் ஆகியவை தலா ஒன்று. கரு வளர்ந்து குழந்தையாக உருமாறுவதற்குப் பயன்பட்ட தொப்புள் இந்த ஒன்பதில் இல்லை. குழந்தை கருப்பையிலிருந்து வெளிவந்தவுடன் அந்த வாயில் அடைபட்டுவிட்டது. ஒரு பலூனின் வாய் காற்றடைத்தபின் கட்டப்படுவது போல, தொப்புள் வழி பிராணனை நிறைத்த பின்பு அந்த துவாரம் கட்டப்பட்டுவிடுகிறது.

பிராணனைப்போல மேலும் ஒன்பது வாயுக்களும் சேர்ந்து மொத்தம் பத்து வாயுக்கள் நம் உடலில் அடைக்கப்பட்டுள்ளன. தச வாயுக்கள் அடைக்கப்பட்ட பைதான் மனிதன். "காயமே இது பொய்யடா வெறும் காற்றடைத்த பையடா' என்பதன் விளக்கமே இந்த தச வாயுக்கள் அடைக்கப்பட்டிருப்பதால் வந்தது தான். இந்தப் பத்து வாயுக்களில் பிராணன் என்ற உயிர் வாயு பிரதானமானதாகும். இதையே உயிர் மூச்சு, ஆன்மா என அழைக்கிறோம். மனித உடலில் தொப்புளைச் சுற்றி மணிப்பூரகம் என்னும் பாம்பாக மூச்சுக்காற்று சுற்றியிருக்கிறது என்று கடப்பை பரமஹம்ஸ ஸ்ரீசச்சிதானந்த யோகீஸ்வர ஸ்வாமிகள் கூறுகிறார். அவரது இந்த விளக்கமானது "ஜனன மரண ரகசியம்' என்ற நூலில் பக்கம் 56, 57-ல் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது:

"தொப்புளில் பிராணன் எனப்படும் மூச்சுக் காற்று ஒரு மனிதன் எவ்வளவு நாள் வாழ்வான் என்பதற்கு ஏற்ப, அந்தந்த வயதுக்குத் தக்கபடி எவ்வளவு மூச்சுகள் இருக்க வேண்டுமோ அவ்வளவு மூச்சும் அநேக சுற்றுகளாய் சுற்றிப் படுத்துக் கொண்டு, அதிலிருந்து இரவு பகலாய் மூச்சு செலவழிந்து கொண்டே வந்து, இறுதியில் தொப்புளில் மூச்சு எதுவுமில்லாமல் காலியாகிவிடும். மூச்சு தொப்புளில் காலியாகிவிட்டால் உயிர் போய்விட்டது என்று சொல்வார்கள். இந்த மூச்சே உயிர் என்றும், பிராணன் என்றும் சொல்லப்படும்.'

நாம் உயிர் வாழ சுவாசிக்கிறோம். நமக்குத் தேவையான வாயு நாசித்துவாரங்கள் வழியாக (சிலர் வாய் வழியாகவும் சுவாசிப்பதுண்டு) நுரையீரலுக்குச் சென்று அதை இயங்கச் செய்யும். இது நாம் சுவாசிக்கும் முறை. ஆனால் யோகியர்களும் சித்தர்களும் யோக நிலையில் இப்படி வெளிக்காற்றை நாசிகள் வழியாக சுவாசிப்பதில்லை. அவர்கள் சுவாசிக்கும் முறையே வேறு. கருப்பையில் இருக்கும் குழந்தை சுவாசிப்பதைப் போலவே அவர்கள் சுவாசிப்பர். அதாவது தொப்பு ளைச் சுற்றியிருக்கும் பிராணன் எனப்படும் வாயுவைக் கொண்டு நுரையீரலை இயங்கச் செய்வர்.

நாம் காதுகளால் கேட்கும் ஒலியைக் (ஆன்க்ண்ர் ரஹஸ்ங்) கடத்துவதற்கு காற்று அவசியம். காற்றில்லா வெற்றிடத்தில் காதுகளால் கேட்கும் ஒலியைக் கடத்த முடியாது.

ஒரு ஒலியை உருவாக்க வேண்டுமென்றா லும், உருவாக்கிய அந்த ஒலியைக் கடத்த வேண்டு மென்றாலும் காற்று நிச்சயம் தேவை. காற்று இல்லாத இடத்திற்கெல்லாம் கடத்தப்படும் ஒலி மின்காந்த அலைகளாகும். (ஊப்ங்ஸ்ரீற்ழ்ர் ஙஹஞ்ய்ஹற்ண்ஸ்ரீ ரஹஸ்ங்ள்). இந்த ஒலியைக் காதால் கேட்க முடியாது. இதைக் காதால் கேட்க வேண்டுமாயின் அதற்கென்று தனிக் கருவிகள் தேவை. (ரேடியோ, தொலைக் காட்சிப் பெட்டி, கணினி).

முன்பு கூறியதைப்போல தொப்புளில் "ஓ' என்ற எழுத்தின் ஒலி வடிவம் தொடங்கு கிறது என்றால், தொப்புளைச் சுற்றி காற்று இருக்கிறது என்பது தெளிவு. அந்த காற்றே உயிர்க்காற்று. அதுவே நம் உடம்பிற்கு உயிரூட்டுவதால் உயிர்மூச்சு. இப்படி உயிரா கிய- பிராணனாகிய வாயுவிலிருந்து உருவெ டுத்து மேலெழும்பி வருவதே "ஓம்' எனும் மந்திரம். பிராணனிலிருந்து வெளிப்படு வதாலேயே இது பிரணவ மந்திரம் என்றாயிற்று.

நாம் சொல்லும் மந்திரங்களிலும் நாமங்களிலும் "ஓம்' என்ற பிரணவத்தை முதலில் கூறக் காரணமே, சொல்லும் மந்திரங்களும் தெய்வங்களின் நாமங்களும் உயிரோட்டமாக இருக்க வேண்டும் என்பதற்காகத் தான். அநேகமாக நாம் பேசும்போது உள்காற்று வெளியேற்றப்படுகிறது; ஆனால் "ஓம்' என உச்சரிக் கும்போது வெளிக்காற்று உள்வாங்கப்படுகிறது.

அடுத்து, காதுகள் "ஓம்' என்ற பிரணவ எழுத்து வடிவத்திலேயே அமைந்துள்ளன. நமது காதுகளுக்குள்ள தனிச்சிறப்பு என்னவெனில், இது எப்போதும், எக்காலமும் நிறம் மாறாத ஓர் உறுப்பு. குழந்தை கருவறையிலிருந்து வெளி உலகுக்கு வந்தவுடன் செக்கச் செவேரென்றோ, நல்ல வெள்ளையாகவோ இருக்கும். வெளியுலகம் கண்டவுடன் சூரியனின் கதிர்கள், வெளிக்காற்று களின் தாக்கம் மற்றும் கால நிலைக்கேற்ப அதன் நிறம் சிறிது சிறிதாக மாறுபடும். சிவப்பாக அல்லது வெள்ளையாக இருந்த குழந்தை கறுப்பாக மாறலாம். ஆனால் காதுகள் அப்படியல்ல. பிறந்த குழந்தை பெரியவனானதும் எந்த நிறத்திலிருக்கும் என்பதை அறிய குழந்தையின் காதுகளின் நிறத்தை வைத்தே தெரிந்துகொள்ளலாம். காரணம் காதுகள் ஒருபோதும் நிறம் மாறுவதில்லை. ஆக, நாம் கருவில் "ஓம்' என்ற பிரணவத்தின் எழுத்து வடிவத்திலிருந்தோம். ஒலி அதிர்வுகளைக் கேட்க வைக்கும் காதுகள் "ஓம்' என்ற எழுத்து வடிவத்தில் நிலையாக அமைந்துவிட்டது.

இன்றைய நவீன உலகில் தினந்தோறும் நாம் எவ்வளவோ ஒலிகளைக் காதுகளால் கேட்கிறோம். கண்களால் எவ்வளவே காட்சிகளைக் காண்கி றோம். ஆனால் அவற்றிலெல்லாம் கிடைக்காத சுகத்தை, மன அமைதியை "ஓம்' என்ற பிரண வத்தை உச்சரிப்பதாலும் காதுகளால் கேட்பதாலும் பெற முடிகிறது.

ஆலயத்தினுள் எழுப்பப்படும் "ஓம்' என்ற மந்திர அதிர்வலைகள் நம் உடலெங்கும் பாய்ந்து, நம்மை ஒரு பரவச நிலைக்குக் கொண்டு செல்கின்றன. அது மந்திர ஜாலமா, மாயா ஜாலமா, இந்திர ஜாலமா என்பதை நாமறியோம். ஆனால் அது நமது ஐம்புலன்களையும் ஒரு சேர அதிரவைத்து, அடக்கி கட்டுக்குள் வைக்கிறது என்பது மட்டும் உண்மை.

"ஓம்' என்ற பிரணவத்தை உச்சரிக்கும்போது முதல் முதல் நாபியில் அதிர்வலைகள் உருவாகி, உடலெங்கும் மின் ஆற்றல் பாய்வதை உணர முடியும். இந்த அதிர்வலைகளில் ஒருவித காந்த சக்தி இருப்பதை உணரலாம். இன்று மருத்துவ உலகில் மின்காந்த சிகிச்சையினால் பல நோய்கள் குணப்படுத்தப்படுகின்றன. "ஓம்' என்ற மந்திரத்தை உச்சரித்தாலே உடல் நோய்கள் அனைத்தும் சூரியனைக் கண்ட பனிபோல மறைகின்றன. இந்த மந்திரம் உச்சரிப்போரையும் கேட்போரையும் எந்த நோய்களும் எளிதில் அண்டுவதில்லை. காரணம் "ஓம்' என்ற மந்திரத்தின் அதிர்வலைகள் உடலிலுள்ள அனைத்து உறுப்புகளையும், ரத்த நாளங்கள் மற்றும் நரம்பு மண்டலங்களையும் தட்டி எழுப்பி, சீராக இயங்கச் செய்து, யோகம் செய்த பலனைத் தருகிறது.

இந்த மந்திரத்தை உச்சரிக்க வயது வித்தியாசம், ஆண், பெண் பேதமில்லை. அனைவரும் உடல் சுத்தம், மன சுத்தமுடன் இந்த மந்திரத்தைக் கூறலாம். இந்த மந்திரத்தைக் கூறி எல்லா தெய்வங்களையும் வழிபடலாம். ஆதியந்தமில்லா அருட்பெரும் ஜோதியாகிய சிவனையும் இந்த மந்திரத்தால் துதிக்கலாம்; கிராம தேவதைகள், காவல் தெய்வங்கள், குலதெய்வங்களையும் இந்த மந்திரத்தால் துதிக்கலாம்.

இந்த மந்திரத்தை உச்சரித்துப் பலன் அடைந்த வர்களுக்கே அதன் பூரண சக்தி நன்கு தெரியும். அனுபவிக்காதவர்கள் இது வெறும் கற்பனை என வாதிடலாம். அவர்கள்கூட மறுத்துப்பேச முடியாத ஒரு செய்தி...

உத்ராஞ்சல் வழியாக திருக்கயிலை செல்லும் போது, இமயமலைத் தொடரில் "நாபிதாங்' என்றொரு இடம் இருக்கிறது. "நாபி' என்பதற்குத் தொப்புள் என்பதே பொருள் என முன்னரே கூறியிருக்கிறோம். இந்த நாபிதாங் என்ற இடத்தில் மூன்று பெரிய மலைச் சிகரங்கள் அமைந்துள்ளன. அவற்றுள் "ஓம் பர்வதம்' (ஓம் மலை) என்றழைக் கப்படும் மலையானது நம்மை பிரமிக்க வைக்கிறது. காரணம், அந்தப் பெரிய மலையில் "ஓம்' (ற்) என்ற வடமொழி எழுத்தை, மலை முழுக்க எழுதி யிருப்பதைப் போன்று இயற்கையாகவே பனிப்போர்வைகளால் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மலைக்குப் பக்கத்தில் "நாபி பர்வதம்' (தொப்புள் மலை) என்ற மற்றொரு மலை உள்ளது. மனித உடலிலுள்ள தொப்புளைப் போல இயற்கையாகவே அமைந்துள்ளது இந்த மலை. இந்த அமைப்பி னாலேயே அந்த இடத்தின் பெயரும் "நாபிதாங்' என்ற காரணப் பெயராயிற்று. மூன்றாவதாக அமைந்துள்ள "திரிசூல பர்வதம்' (திரிசூல மலை) மூன்று சிகரங்களுடன் அந்த லோகநாயகன்- லோக நாயகியை நினைக்க வைக்கிறது. இந்தக் காட்சிகளை மனக்கண்ணில் நிறுத்தி நினைத்துப் பாருங்கள்- உண்மையிலேயே நம்மை சிலிர்க்க வைக்கிறதல்லவா!

இப்படி ஆதியந்தமில்லாத அந்த திரிசூலதாரி யின் எல்லைக்குள் இயற்கையாகவே உருவெடுத்து நிற்கும் நாபி மலையும், அதனையடுத்து ஓம் மலையும் அமைந்திருப்பது அந்த பிராண நாதன்- பிரணவ நாதனின் திருவிளையாடல்தானோ! அவனை நினைத்து "ஓம்... ஓம்... ஓம்...' என நாம் உச்சரிக்கும்போது நம்மை வாட்டும் பிணிகள்- பீடைகள் எல்லாம் போம்... போம்... போம்... எனப் போய்விடாதா என்ன!







20 ஜனவரி 2013

கரையான் புற்றுகள்



அதிசயப்பிராணிகளான கரையான்களுக்குக் கண்களே இல்லை சுவாரசியமான தகவல் !! 

பருவ மாற்றத்தைக் காட்டும் கரையான் புற்றுகள் :::

கிராமப்புறங்களில், கரையான்கள் உயரமாகக் கட்டியிருக்கும் கரையான் புற்றுகளைக் காணலாம். அந்தக் கரையான் புற்றுகளைக் கொண்டு பருவ மாற்றம்,சுற்றுச்சூழல் மாற்றத்தை கணிக்கலாம் என்ற புதிய தகவலைக் கூறுகிறார்கள் விஞ்ஞானிகள்.கார்னகி நிறுவனத்தின் உலக சுற்றுச்சூழலியல் துறை ஆய்வாளர்கள், இது தொடர்பான ஆய்வை ஆப்பிர்க்காவின் சவான்னா புல்வெளிகளில் மேற்கொண்டனர். அவர்கள் இதற்கென்று வானில் இருந்து படமெடுப்பது, வரைபடங்களை அலசுவது போன்ற நவீன உத்திகளைப் பயன்படுத்தினர். அவற்றின் மூலம், 192 சதுர மைல் பரப்பளவில் அமைந்த 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கரையான் புற்றுகள் ஆய்வு செய்யப்பட்டன.

கரையான் புற்றுகளின் அளவு, அவை ஒரு பகுதியில் அதிகமாக அல்லது குறைவக அமைந்திருக்கும் விதம் ஆகியவற்றுக்கும், வருடாந்திர மழையளவுடன் இணைநத தாவரவியல், நில அமைபபு ஆகியவற்றுக்கும் தொடர்பு இருக்கிறது என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர்.

கரையான்கள் அதிக ஈரபபதமாகவும், அதிக உலர்வாகவம் இல்லாத, எளிதாக தண்ணீர் வடியக்கூடிய பகுதியை தேர்ந்தெடுத்துத் தங்களின் புற்றுகளை அமைக்கின்றன. அப்படி சவான்னா நிலபபகுதியில் சீப்லைன்ஸ் எனப்படும் சரிவுகளில் கரயான்கள் அதிகமாகப் புற்றுகளை அமைத்திருந்தன.கரயான் புற்றுக்கும், இயற்கைச் சூழலுக்கும் நல்ல உறவு உள்ளது. மணணியல், நீரியல் போன்றவற்றில் மாற்றங்களைச் சுடடிக்காட்டுபவையாக புற்றுகளை மாற்றியுள்ளது. கரையான் புற்று உள்ள இடத்தில் எந்த மாதிரியன தாவரம் வளரும், சுற்றுச்சூழலில் என்ன மாற்றம் ஏற்படக்கூடும் என்பதை எலலாம் புற்றுகள் மூலமே அறியமுடிகிறது என்கின்றனர் விஞ்ஞானிகள்.

திட்டமிட்டுச் செயலாற்றும் கறையான் ::::

கரையான்கள் எறும்புகளைப் போல இருந்தாலும், உண்மையில் அவை எறும்புகள் வகை அல்ல. எறும்புகள் Hymenoptera என்ற வரிசையைச் சேர்ந்தது. ஆனால், கரையான்கள் Isoptera என்ற வரிசையைச் சேர்ந்தது. Iso என்றால், 'ஒரே மாதிரி ' என்று பொருள். Ptera என்றால், 'இறக்கை ' என்று பொருள். அதாவது, கரையான்களின் மறுவடிவமான ஈசல்களின் முன் மற்றும் பின் இறக்கைகள் ஒரே மாதிரி இருப்பதால், இந்த வகைப்பாட்டியல் பெயர். கரையான்களில், உலகம் முழுதும் சுமார் 275 பேரினங்களும், சுமார் 2750 சிற்றினங்களும் உள்ளன. கரையான்களில் ஒரு சில சிற்றினங்கள், மரங்களில் வாழும். அவை மரங்களை, அரித்து தின்று விடும். மண்ணில் புற்று அமைத்து வாழும்.

கரையான்களும், தேனீக்களைப் போல ஒரு சமுதாய பூச்சி (Social insect) ஆகும். ஏன் அப்படி அழைக்கிறோம் எனில், அவற்றால் தனித்து வாழ இயலாது. ஒரு கரையான் கூட்டத்தில் இராணிக்கரையான் (Queen), மன்னர் கரையான் (King), இராணுவ வீரர்கள் (Soldiers) மற்றும் பணிக்கரையான்கள் (Workers) என நான்கு வகை இருக்கும்.

இராணுவ வீரர்களுள் இரண்டு வகை உண்டு. முதல்வகை பருத்த தலையுடன், முகத்தில் ஒரு பிரத்யேக அரிவாள் போன்ற கொடுக்குடன் இருக்கும். அவை Mandibulate Soldiers எனப்படும். இவை பகைவர்களின் மீது தாக்குதல் நடத்தி விரட்டிவிடும். அடுத்த வகை, Nasute Soldiers எனப்படும். இவை பகைவர்களின் மீது துர்நாற்றம் மிக்க சுரப்பினைத் துப்பி விரட்டிவிடும். இதில் நாம் கவனிக்க வேண்டிய விசயம், இராணுவ வீரர்கள் கண்பார்வையற்ற குருடர்கள். இராணுவ வீரர்களுள் ஆண், பெண் என இருபாலருமே உண்டு. பணிக்கரையான்களும் கண்பார்வையற்ற குருடர்களே ! அவற்றிலும், ஆண், பெண் என இருபாலருமே உண்டு. இராணுவ வீரர்கள் மற்றும் பணிக்கரையான்களின் வாழ்நாள் 1-2 ஆண்டுகள் ஆகும். பணிக்கரையான்கள் புற்றினைக் கட்டுதல், பழுதடைந்த புற்றினைச் சரிசெய்தல், இளம்கரையான், இராணுவ வீரர்கள், மன்னர் மற்றும் இராணி கரையான்களுக்கு உணவு கொடுத்தல் என பல வேலைகளைச் செய்யும்.

இராணிக்கரையான் ஒரு நாளைக்கு சுமார் 2000 முட்டைகள் வைக்கும். அதாவது, ஒவ்வொரு 15 நொடிக்கும் ஒரு முட்டை வைக்கும். இராணிக்கரையான்களின் வாழ்நாள் 15-25 ஆண்டுகள் ஆகும். இராணுவ வீரர்கள் மற்றும் பணிக்கரையான்களுக்கு ஒரு குறிப்பிட்ட வாசனை உண்டு. ஒரு வேளை, பாதுகாப்பு பணியில் உள்ள இராணுவ வீரர்கள் பகைவர்களுடனான போரில் கணிசமாக இறந்து விட்டால், இந்த வாசனை குறைந்துவிடும். இந்த Signal கிடைத்தவுடன், இராணிக்கரையான் இராணுவ வீரர்களுக்கான முட்டைகளை வைக்கும். இப்படியாக இந்த கரையான்களுக்கு தனி இராஜியங்கள் உண்டு என்பதை அறியும்போது இந்த சின்னஞ்சிறிய கண்தெரியாத பூச்சிக்கு இத்தனைப்பெரிய ஆற்றல் என்று நினைக்குக் போது வியப்பாகவே இருக்கிறது 

பாம்பு ஏன் புற்றுக்கு வருகிறது ?

ஒரு கரையான் புற்றில், பல மில்லியன் கரையான்கள் இருக்கும். அவற்றின் வளர்சிதை மாற்றங்களால் உருவாகும் வெப்பம் மற்றும் நீராவி ஆகியன ஒருவிித மிதவை உந்து விசைகளை (Buoyant forces) உள்ளிழுக்கும். எனவே புற்றின் உள்ளிருக்கும் காற்று Central chimney மூலம் மேலே வரும். அப்போது புற்றின் உள்காற்றிலிருக்கும் ஆக்சிஜன், கார்பன் டை ஆக்சைடு, வெப்பம் மற்றும் நீராவி ஆகியன Surface conduits மூலம் புற்றின் வெளிக்காற்றுடன் பரிவர்த்தனை செய்துகொள்ளும். எனவே புத்தம் புதிய காற்று, மீண்டும் புற்ிறுக்குள் Surface conduits, Central chimney மூலம் உள்ளிழுக்கப்படும். எனவே புற்று எப்போதும் சில்லென்றே இருக்கும். எனவேதான், பாம்பு புற்றுக்கு வந்து தங்கிவிடும்.

கரையான்கள் மரம் மற்றும் நூல்களை உண்ணுகிறதே, அதை எப்படி செரிக்கிறது ?

பொதுவாக, பேப்பர் மற்றும் மரங்களில், செல்லுலோஸ் என்ற பொருள் இருக்கும். அதை செரிக்கத் தேவையான செல்லுலேஸ் என்ற நொதி நமக்கோ, கரையான்களுக்கோ இல்லை. கரையான்கள் தங்கள் குடலில் Protozoa க்களுக்கு உணவும் உறைவிடமும் கொடுக்கும். இதற்குக் Protozoa க்கள் கரையான்களுக்கு செல்லுலோஸை செரிக்கத் தேவையான செல்லுலேஸ் என்ற நொதியைக் கொடுக்கும். இப்படித்தான் கரையான்களுக்கு உணவு செரிக்கின்றது.


இத்துணை ஆற்றல்களைப் பெற்றிருக்கும் இந்த அதிசயப்பிராணிகளான கரையான்களுக்குக் கண்களே இல்லை என்பது அதைவிடவும் அதிசயமல்லவா 

தஞ்சை பெரிய கோயில் எப்படி கட்டப்பட்டது ?


பலகோடி நூறாண்டு நம் தஞ்சை கோயில் வாழ வேண்டும் ! ! !

இதை படிப்பதற்கே தலை சுற்றுகிறது , 
இது எப்படி சாத்தியமானது ? ? ! ! 
கோயில் எப்படி கட்டப்பட்டது ???? என்ற தகவல் உங்களுக்காக.

படிப்பதற்கு பெரியதாக உள்ளது என பாதியில் நிறுத்திவிட வேண்டாம்.. இதை ஒவ்வொரு தமிழனும் தெரிந்து கொள்ளவேண்டும் .

தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலுக்குச் சிறப்பு அம்சங்கள் பல உண்டு. இரண்டு அல்லது மூன்று தளங்களை மட்டுமே கொண்டு கோயில்கள் கட்டப்பட்டு வந்த காலத்தில், கற்களே கிடைக்காத காவிரி சமவெளிப் பகுதியில், 15 தளங்கள் கொண்ட சுமார் 60 மீட்டர் உயரமான ஒரு கற்கோயிலை ராஜராஜன் எழுப்பியது என்பது மாபெரும் சாதனையே. அது மட்டுமன்றி, கல்வெட்டுகள், சிற்பங்கள், ஓவியங்கள், வழிபாட்டுக்கான செப்புத் திருமேனிகள் என்று பல புதிய அம்சங்களையும் இத் திருக்கோயிலில் புகுத்தி கோயில் கட்டும் கலையில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியவன் ராஜராஜன்.

தஞ்சாவூர் பெரிய கோயிலைப் பற்றிப் பல நூல்கள் வெளிவந்துள்ளன. ஆயினும் இவற்றில் முரண்பாடுகள் காணப்படுகின்றன. கோபுரத்தின் உயரம் 59.75 மீட்டர் முதல் 65.85 மீட்டர் வரை குறிப்பிடப்பட்டுள்ளன. எனவே சோழர் கால அளவுகளின்படி கோயிலின் திட்டமிடப்பட்ட உயரம் என்ன, கடைக்கால்கள் எந்த அடிப்படையில் திட்டமிடப்பட்டன. கட்டப்பட்டன, பாரந்தூக்கிகள் முதலியன இல்லாத ஒரு காலத்தில் சுமார் 60 மீட்டர் உயர கோபுரம் எவ்வாறு கட்டப்பட்டது.


இந்த கேள்விகளுக்கு விடைபெற நாம் ராஜராஜன் காலத்தில் கையாளப்பட்ட அளவு முறைகளைப் பற்றிச் சற்று தெரிந்து கொள்ளவது அவசியம்..

பெரிய கோயில் அளவுகோல்...

எட்டு நெல் கதிர்களை அகலவாட்டில் ஒன்றோடொன்று நெருக்கமாக அமைத்து அந்த நீளத்தை விரல், மானாங்குலம், மானம் என்று அழைத்தனர். இருப்பத்தி நான்கு விரல் தஞ்சை முழம் என்று அழைக்கப்பட்டது. ஒரு முழமே இருவிரல் நீட்டித்து பதினாறு விரல் அகலத்து, ஆறுவிரல் உசரத்து பீடம், ஒரு விரலோடு ஒரு தோரை உசரத்து பதுமம் என்ற திருமேனி பற்றிய குறிப்பை காணலாம்.

தற்போதைய அளவின்படி ஒரு விரல் என்பது 33 மில்லி மீட்டராகும். கருவறை வெளிச்சுவர்களில் காணப்படும் கலசத்தூண்களின் அகலம் 10 விரல்களாகும், அதாவது 0.33 மீட்டர் ஆகும். இதுவே தஞ்சாவூர் பெரிய கோயிலின் அடிப்படை அளவாகும். இதனை நாம் அலகு என்று குறிப்பிடலாம். இந்த அடிப்படையில் விமானத்தின் திட்டமிட்ட உயரம் 180 அலகுகள். அதாவது சுமாராக 59.40 மீட்டர். சிவலிங்கத்தின் உயரம் சரியாக 12 அலகுகள். இதைப்போன்று 15 மடங்கு உயரமான 180 அலகுகள், அதாவது 59.40 மீட்டர் என்பதே கோபுரத்தின் திட்டமிடப்பட்ட உயரம். கருவறையின் இரு தளங்களிலும் விமானத்தின் பதின்மூன்று மாடிகளும் சேர்ந்து 15 தளங்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. அலகுகளின் அடிப்படையில் கருவறை 24 அலகுகள் கொண்ட ஒரு சதுரம். கருவறையின் உட்சுவரும், வெளிச்சுவரும் முறையே 48 அலகுகள், 72 அலகுகள் அளவுடைய சதுரங்களாகும். பிரகாரத்தில் நாம் காணக்கூடிய விமானத்தின் அடிப்பகுதி (உபானா) 90 அலகுகள். இந்த அடிப்படையில் விமானத்தின் கடைக்கால் 108 அலகுகள் (36 மீ ஷ் 36 மீ) பக்க அளவு கொண்ட பெரிய சதுரமாக இருக்கலாம் என யூகிக்க முடிகிறது. சரியான அளவுகள் தெரியவில்லை.

இந்த கடைக்கால் மிகக்குறைந்த ஆழத்திலேயே, அதாவது 5 அலகுகள் ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ளது எனத் தெரியவந்துள்ளது. கோயில் வளாகத்தின் அருகே பாறை தென்படுகிறது. ஆயினும் சுமார் 42,500 டன் எடையுள்ள விமானத்தை பாறையின் தாங்கு திறனைச் சோதித்துப் பார்க்காமல் கட்டியிருக்க மாட்டார்கள் என்று தோன்றுகிறது. சுமார்

1.2 மீ ஷ் 1.2 மீ சதுரத்தில் 0.6 மீ ஷ் 0.6 ஷ் 0.6 மீ அளவு கற்களை ஒவ்வொரு அடுக்கிலும் நான்கு கற்கள் என்ற கணக்கில் அடுக்கிக் கொண்டே போய் பாறையில் எப்போது விரிசல்கள் விழுகின்றன என்பதைக் கவனித்த பின்னரே கடைக்காலின் அளவுகள் தீர்மானிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பாறையின் மேல் வரும் அழுத்தம் குறித்த சோதனைகள் இக்கோயில் நிர்மாணித்த சிற்பிகள் மேற்கொண்டனர் என்பது இக்கோயிலின் மற்றொரு சிறப்பம்சமாகும்.

பெரிய கோயிலின் விமான வடிவமைப்பு

180 அலகுகள் உயரம் கொண்ட கோயில் விமானம் எவ்வாறு கட்டப்பட்டது என்பது குறித்த குறிப்புகள் எதுவுமில்லை. சில சாத்தியக் கூறுகள் மட்டுமே பரிசீலிக்கலாம். கருவறையின் உட்சுவருக்கும், வெளிச்சுவருக்கும் இடையே 6 அலகுகள் கொண்ட உள் சுற்றுப்பாதை உள்ளது. இந்த இடைவெளி படிப்படியாகக் குறைக்கப்பட்டு, சுமார் 20 மீட்டர் உயரத்தில் இரு சுவர்களும் இணைக்கப்பட்டன. இங்கிருந்து விமானம் மேலே எழும்புகிறது. சுவர்களை இணைத்ததன் மூலம் 72 அலகுகள் பக்க அளவு கொண்ட (சுமார் 24 மீ ஷ் 24 மீ) ஒரு பெரிய சதுர மேடை கிடைக்கப் பெற்றது. விமானம் 13 தட்டுகளைக் கொண்டது. முதல் மாடியின் உயரம் சுமார் 4.40 மீட்டர், பதின்மூன்றாவது மாடியின் உயரம் சுமார் 1.92 மீ. பதின்மூன்று மாடிகளின் மொத்த உயரம் 32.5 மீட்டராகும். பதின்மூன்றாவது மாடியின் மேல் எண்பட்டை வடிவ தண்டு, கோளம், கலசம் மூன்றும் உள்ளன. இதன் மொத்த உயரம் 30 அலகுகள். அதாவது பிரகாரத்திலிருந்து விமானத்தின்

13-வது மாடி சரியாக 150 அலகுகள் (50 மீ) உயரத்தில் உள்ளது. தஞ்சை சிற்பிகள் இந்த உயரத்தை மூன்று சம உயரப் பகுதிகளாகப் பிரித்துள்ளனர்.

அதாவது, கருவறை மேல் மாடி உயரம் 50 அலகுகள், விமானத்தின் முதல் மாடியிலிருந்து 5-வது மாடி வரை 50 அலகுகள், விமானத்தின் 6-வது மாடியிலிருந்து 13-வது தளம் வரை 50 அலகுகள். இந்த மூன்று பகுதிகளுக்கும் அதன் உயரத்துக்கேற்ப தனித்தனியான சார அமைப்புகள் அமைக்கத் திட்டமிட்டிருந்தனர் என்று தெரிகிறது.

சாரங்களின் அமைப்பு

கருவறைக்கு ஒரு கீழ்தளமும் ஒரு மேல் தளமும் உள்ளன. மேல் தளத்தின் கூரை சரியாக 50 அலகுகள் (16.5 மீ) உயரத்தில் உள்ளது. இங்கு தான் முதல்கட்ட சாரம் - ஒரு சாய்வுப் பாதை முடிவுற்றது. ஒன்றுக்கு மேற்பட்ட சாய்வுப் பாதைகள் (தஅஙடந) உபயோகப்படுத்தப்பட்டுள்ளது தெரிகிறது. இவை பல ஆண்டுகளுக்கு நிலைத்து நிற்கும் வகையில் அமைக்கப்பட்டன. சாய்வுப் பாதையின் இருபக்கங்களிலும் கற்கள் - சுண்ணாம்புக் கலவை கொண்டு கட்டப்பட்ட உறுதியான சுவர்கள் இருந்தன. இந்த இரு சுவர்களுக்கு நடுவில் உள்ள பகுதி (4 அல்லது 5 மீ அகலம் இருக்கலாம்) பெரிய மற்றும் சிறிய உடைந்த கற்கள், துண்டுக் கற்கள் ஆகியவற்றால் நிரப்பப்பட்டன. மண்ணால் அல்ல. யானைகள் செல்வதற்கு ஏற்ற மிதமான வாட்டத்துடன் அமைக்கப்பட்டன. மழைநீர் வடியவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கோயிலின் திருமதில் சுவரும் (சுமார் 1 மீ குறுக்களவு கொண்டது) இதே பாணியில் கட்டப்பட்டிருந்தது என்பது குறிப்பிட்டத்தக்கது.

இரண்டாவது கட்டமாக 50 முதல் 100 அலகுகள் வரை (சுமார் 16.5 மீட்டரிலிருந்து 33 மீட்டர் உயரம் வரை) விமானம் கட்டுவதற்குச் சற்று மாறுபட்ட சாரம் தேவைப்பட்டது. இது அமைப்பில் சீனாவின் நெடுஞ்சுவர் போல் ஓர் அரண் மதில் சுவர் அமைப்பாக செங்குத்தான இரு சுவர்களையும், அதன் நடுவே முதல்கட்ட சாரத்தைப் போல் யானைகள் செல்வதற்கேற்ற வழித்தடத்தையும் கொண்டிருந்தது. விமானத்தின் நான்கு பக்கங்களையும் சுற்றிச் செல்லுமாறு அமைந்திருந்த இந்த அரண் மதில் சாரம், கோபுரம் உயர உயர தானும் உயர்ந்து கொண்டே சென்றது. முதல் கட்ட சாய்வுப் பாதையின் இறுதிகட்ட மேடைச் சுவர்களுடன் இந்த இரண்டாம் கட்ட சாரத்தின் சுவர்கள் இணைக்கப்பட்டிருந்தன. இந்த கட்டுமானத்தின் அமைப்பில் மிகுந்த கவனம் தேவைப்பட்டது. இதுமட்டுமன்றி இந்த அரண் சுவர்களுக்கு நிறைய கற்களும் தேவைப்பட்டன. முதல் கட்ட சாரங்களில் சில கலைக்கப்பட்டு, அவற்றின் கற்கள் முதலியவை செங்குத்தான அரண் சுவர்கள் கட்டுவதற்கு உபயோகப்படுத்தப்பட்டன என்று நம்புவதற்கு இடமிருக்கிறது.

இறுதிகட்டமாக, 100 முதல் 150 அலகுகள் வரையிலான விமானப் பணிகளுக்காக மரத்தினாலான வலுவான சாரம் (நஇஅஊஊஞகஈ) அமைக்கப்பட்டது. சவுக்குக் கழிகள், சணல் கயிறுகள் தவிர்க்கப்பட்டன. தரமான நல்ல உறுதியான மரங்களிலான தூண்கள் (யஉதபஐஇஅக டஞநப), நேர்ச்சட்டங்கள் (தமசசஉதந), குறுக்குச் சட்டங்கள் (ஆதஅஇஉந) அனைத்தும் முட்டுப் பொருத்துகள் (இஅதடஉசபதவ ஒஞஐசபந) மூலம் இணைக்கப் பெற்றன. இவை இரண்டாவது கட்ட மதில் அரண் சாரத்தில் நிலை நிறுத்தப்பட்டன. செங்குத்தான தூண்களும் நேர் சட்டங்களும் மேடைகளை விரும்பிய விதத்தில் அமைத்துக் கொள்ள

உதவின.

அரண் மதில் உட்சுவரிலிருந்து மேடைகளுக்குக் கற்களையும் சிற்பிகள் மற்றும் ஏனைய தொழிலாளர்களையும் எடுத்துச் செல்ல சாய்வுப் பாதைகள் அமைப்பது இந்த முறையில் எளிதாகவிருந்தது.

மேலே கூறிய அமைப்பு ஒரு சாத்தியக் கூறு. இரண்டாவது கட்ட அரண் மதில் சுவர் சாரத்துக்கு முதல் கட்ட சாய்வுப் பாதைகள் கலைக்கப்பட்டு, அதன் கற்கள் பயன்படுத்தப்பட்டன. விமானக் கட்டுமானப் பணிகள் அனைத்தும் முடிவுற்றதும் சாரங்கள் கலைக்கப்பட்டு, கற்கள், மண், மரம் அனைத்தும் கோயில் மதில் சுவர், மதில் சுவர் உள்புறத்தில் காணப்படும் துணைக் கோயில்கள், நுழைவுவாயில்கள், சாலைகள் அமைப்பது முதலிய கட்டுமானங்களில் எவ்வித சேதாரமுமின்றி முழுமையாகப் பயன்படுத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. !!





















பலகோடி நூறாண்டு நம் தஞ்சை கோயில் வாழ வேண்டும் ! ! !

இதை படிப்பதற்கே தலை சுற்றுகிறது ,
இது எப்படி சாத்தியமானது ? ? ! !
கோயில் எப்படி கட்டப்பட்டது ???? என்ற தகவல் உங்களுக்காக.

படிப்பதற்கு பெரியதாக உள்ளது என பாதியில் நிறுத்திவிட வேண்டாம்.. இதை ஒவ்வொரு தமிழனும் தெரிந்து கொள்ளவேண்டும் .

தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலுக்குச் சிறப்பு அம்சங்கள் பல உண்டு. இரண்டு அல்லது மூன்று தளங்களை மட்டுமே கொண்டு கோயில்கள் கட்டப்பட்டு வந்த காலத்தில், கற்களே கிடைக்காத காவிரி சமவெளிப் பகுதியில், 15 தளங்கள் கொண்ட சுமார் 60 மீட்டர் உயரமான ஒரு கற்கோயிலை ராஜராஜன் எழுப்பியது என்பது மாபெரும் சாதனையே. அது மட்டுமன்றி, கல்வெட்டுகள், சிற்பங்கள், ஓவியங்கள், வழிபாட்டுக்கான செப்புத் திருமேனிகள் என்று பல புதிய அம்சங்களையும் இத் திருக்கோயிலில் புகுத்தி கோயில் கட்டும் கலையில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியவன் ராஜராஜன்.

தஞ்சாவூர் பெரிய கோயிலைப் பற்றிப் பல நூல்கள் வெளிவந்துள்ளன. ஆயினும் இவற்றில் முரண்பாடுகள் காணப்படுகின்றன. கோபுரத்தின் உயரம் 59.75 மீட்டர் முதல் 65.85 மீட்டர் வரை குறிப்பிடப்பட்டுள்ளன. எனவே சோழர் கால அளவுகளின்படி கோயிலின் திட்டமிடப்பட்ட உயரம் என்ன, கடைக்கால்கள் எந்த அடிப்படையில் திட்டமிடப்பட்டன. கட்டப்பட்டன, பாரந்தூக்கிகள் முதலியன இல்லாத ஒரு காலத்தில் சுமார் 60 மீட்டர் உயர கோபுரம் எவ்வாறு கட்டப்பட்டது.


இந்த கேள்விகளுக்கு விடைபெற நாம் ராஜராஜன் காலத்தில் கையாளப்பட்ட அளவு முறைகளைப் பற்றிச் சற்று தெரிந்து கொள்ளவது அவசியம்..

பெரிய கோயில் அளவுகோல்...

எட்டு நெல் கதிர்களை அகலவாட்டில் ஒன்றோடொன்று நெருக்கமாக அமைத்து அந்த நீளத்தை விரல், மானாங்குலம், மானம் என்று அழைத்தனர். இருப்பத்தி நான்கு விரல் தஞ்சை முழம் என்று அழைக்கப்பட்டது. ஒரு முழமே இருவிரல் நீட்டித்து பதினாறு விரல் அகலத்து, ஆறுவிரல் உசரத்து பீடம், ஒரு விரலோடு ஒரு தோரை உசரத்து பதுமம் என்ற திருமேனி பற்றிய குறிப்பை காணலாம்.

தற்போதைய அளவின்படி ஒரு விரல் என்பது 33 மில்லி மீட்டராகும். கருவறை வெளிச்சுவர்களில் காணப்படும் கலசத்தூண்களின் அகலம் 10 விரல்களாகும், அதாவது 0.33 மீட்டர் ஆகும். இதுவே தஞ்சாவூர் பெரிய கோயிலின் அடிப்படை அளவாகும். இதனை நாம் அலகு என்று குறிப்பிடலாம். இந்த அடிப்படையில் விமானத்தின் திட்டமிட்ட உயரம் 180 அலகுகள். அதாவது சுமாராக 59.40 மீட்டர். சிவலிங்கத்தின் உயரம் சரியாக 12 அலகுகள். இதைப்போன்று 15 மடங்கு உயரமான 180 அலகுகள், அதாவது 59.40 மீட்டர் என்பதே கோபுரத்தின் திட்டமிடப்பட்ட உயரம். கருவறையின் இரு தளங்களிலும் விமானத்தின் பதின்மூன்று மாடிகளும் சேர்ந்து 15 தளங்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. அலகுகளின் அடிப்படையில் கருவறை 24 அலகுகள் கொண்ட ஒரு சதுரம். கருவறையின் உட்சுவரும், வெளிச்சுவரும் முறையே 48 அலகுகள், 72 அலகுகள் அளவுடைய சதுரங்களாகும். பிரகாரத்தில் நாம் காணக்கூடிய விமானத்தின் அடிப்பகுதி (உபானா) 90 அலகுகள். இந்த அடிப்படையில் விமானத்தின் கடைக்கால் 108 அலகுகள் (36 மீ ஷ் 36 மீ) பக்க அளவு கொண்ட பெரிய சதுரமாக இருக்கலாம் என யூகிக்க முடிகிறது. சரியான அளவுகள் தெரியவில்லை.

இந்த கடைக்கால் மிகக்குறைந்த ஆழத்திலேயே, அதாவது 5 அலகுகள் ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ளது எனத் தெரியவந்துள்ளது. கோயில் வளாகத்தின் அருகே பாறை தென்படுகிறது. ஆயினும் சுமார் 42,500 டன் எடையுள்ள விமானத்தை பாறையின் தாங்கு திறனைச் சோதித்துப் பார்க்காமல் கட்டியிருக்க மாட்டார்கள் என்று தோன்றுகிறது. சுமார்

1.2 மீ ஷ் 1.2 மீ சதுரத்தில் 0.6 மீ ஷ் 0.6 ஷ் 0.6 மீ அளவு கற்களை ஒவ்வொரு அடுக்கிலும் நான்கு கற்கள் என்ற கணக்கில் அடுக்கிக் கொண்டே போய் பாறையில் எப்போது விரிசல்கள் விழுகின்றன என்பதைக் கவனித்த பின்னரே கடைக்காலின் அளவுகள் தீர்மானிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பாறையின் மேல் வரும் அழுத்தம் குறித்த சோதனைகள் இக்கோயில் நிர்மாணித்த சிற்பிகள் மேற்கொண்டனர் என்பது இக்கோயிலின் மற்றொரு சிறப்பம்சமாகும்.

பெரிய கோயிலின் விமான வடிவமைப்பு

180 அலகுகள் உயரம் கொண்ட கோயில் விமானம் எவ்வாறு கட்டப்பட்டது என்பது குறித்த குறிப்புகள் எதுவுமில்லை. சில சாத்தியக் கூறுகள் மட்டுமே பரிசீலிக்கலாம். கருவறையின் உட்சுவருக்கும், வெளிச்சுவருக்கும் இடையே 6 அலகுகள் கொண்ட உள் சுற்றுப்பாதை உள்ளது. இந்த இடைவெளி படிப்படியாகக் குறைக்கப்பட்டு, சுமார் 20 மீட்டர் உயரத்தில் இரு சுவர்களும் இணைக்கப்பட்டன. இங்கிருந்து விமானம் மேலே எழும்புகிறது. சுவர்களை இணைத்ததன் மூலம் 72 அலகுகள் பக்க அளவு கொண்ட (சுமார் 24 மீ ஷ் 24 மீ) ஒரு பெரிய சதுர மேடை கிடைக்கப் பெற்றது. விமானம் 13 தட்டுகளைக் கொண்டது. முதல் மாடியின் உயரம் சுமார் 4.40 மீட்டர், பதின்மூன்றாவது மாடியின் உயரம் சுமார் 1.92 மீ. பதின்மூன்று மாடிகளின் மொத்த உயரம் 32.5 மீட்டராகும். பதின்மூன்றாவது மாடியின் மேல் எண்பட்டை வடிவ தண்டு, கோளம், கலசம் மூன்றும் உள்ளன. இதன் மொத்த உயரம் 30 அலகுகள். அதாவது பிரகாரத்திலிருந்து விமானத்தின்

13-வது மாடி சரியாக 150 அலகுகள் (50 மீ) உயரத்தில் உள்ளது. தஞ்சை சிற்பிகள் இந்த உயரத்தை மூன்று சம உயரப் பகுதிகளாகப் பிரித்துள்ளனர்.

அதாவது, கருவறை மேல் மாடி உயரம் 50 அலகுகள், விமானத்தின் முதல் மாடியிலிருந்து 5-வது மாடி வரை 50 அலகுகள், விமானத்தின் 6-வது மாடியிலிருந்து 13-வது தளம் வரை 50 அலகுகள். இந்த மூன்று பகுதிகளுக்கும் அதன் உயரத்துக்கேற்ப தனித்தனியான சார அமைப்புகள் அமைக்கத் திட்டமிட்டிருந்தனர் என்று தெரிகிறது.

சாரங்களின் அமைப்பு

கருவறைக்கு ஒரு கீழ்தளமும் ஒரு மேல் தளமும் உள்ளன. மேல் தளத்தின் கூரை சரியாக 50 அலகுகள் (16.5 மீ) உயரத்தில் உள்ளது. இங்கு தான் முதல்கட்ட சாரம் - ஒரு சாய்வுப் பாதை முடிவுற்றது. ஒன்றுக்கு மேற்பட்ட சாய்வுப் பாதைகள் (தஅஙடந) உபயோகப்படுத்தப்பட்டுள்ளது தெரிகிறது. இவை பல ஆண்டுகளுக்கு நிலைத்து நிற்கும் வகையில் அமைக்கப்பட்டன. சாய்வுப் பாதையின் இருபக்கங்களிலும் கற்கள் - சுண்ணாம்புக் கலவை கொண்டு கட்டப்பட்ட உறுதியான சுவர்கள் இருந்தன. இந்த இரு சுவர்களுக்கு நடுவில் உள்ள பகுதி (4 அல்லது 5 மீ அகலம் இருக்கலாம்) பெரிய மற்றும் சிறிய உடைந்த கற்கள், துண்டுக் கற்கள் ஆகியவற்றால் நிரப்பப்பட்டன. மண்ணால் அல்ல. யானைகள் செல்வதற்கு ஏற்ற மிதமான வாட்டத்துடன் அமைக்கப்பட்டன. மழைநீர் வடியவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கோயிலின் திருமதில் சுவரும் (சுமார் 1 மீ குறுக்களவு கொண்டது) இதே பாணியில் கட்டப்பட்டிருந்தது என்பது குறிப்பிட்டத்தக்கது.

இரண்டாவது கட்டமாக 50 முதல் 100 அலகுகள் வரை (சுமார் 16.5 மீட்டரிலிருந்து 33 மீட்டர் உயரம் வரை) விமானம் கட்டுவதற்குச் சற்று மாறுபட்ட சாரம் தேவைப்பட்டது. இது அமைப்பில் சீனாவின் நெடுஞ்சுவர் போல் ஓர் அரண் மதில் சுவர் அமைப்பாக செங்குத்தான இரு சுவர்களையும், அதன் நடுவே முதல்கட்ட சாரத்தைப் போல் யானைகள் செல்வதற்கேற்ற வழித்தடத்தையும் கொண்டிருந்தது. விமானத்தின் நான்கு பக்கங்களையும் சுற்றிச் செல்லுமாறு அமைந்திருந்த இந்த அரண் மதில் சாரம், கோபுரம் உயர உயர தானும் உயர்ந்து கொண்டே சென்றது. முதல் கட்ட சாய்வுப் பாதையின் இறுதிகட்ட மேடைச் சுவர்களுடன் இந்த இரண்டாம் கட்ட சாரத்தின் சுவர்கள் இணைக்கப்பட்டிருந்தன. இந்த கட்டுமானத்தின் அமைப்பில் மிகுந்த கவனம் தேவைப்பட்டது. இதுமட்டுமன்றி இந்த அரண் சுவர்களுக்கு நிறைய கற்களும் தேவைப்பட்டன. முதல் கட்ட சாரங்களில் சில கலைக்கப்பட்டு, அவற்றின் கற்கள் முதலியவை செங்குத்தான அரண் சுவர்கள் கட்டுவதற்கு உபயோகப்படுத்தப்பட்டன என்று நம்புவதற்கு இடமிருக்கிறது.

இறுதிகட்டமாக, 100 முதல் 150 அலகுகள் வரையிலான விமானப் பணிகளுக்காக மரத்தினாலான வலுவான சாரம் (நஇஅஊஊஞகஈ) அமைக்கப்பட்டது. சவுக்குக் கழிகள், சணல் கயிறுகள் தவிர்க்கப்பட்டன. தரமான நல்ல உறுதியான மரங்களிலான தூண்கள் (யஉதபஐஇஅக டஞநப), நேர்ச்சட்டங்கள் (தமசசஉதந), குறுக்குச் சட்டங்கள் (ஆதஅஇஉந) அனைத்தும் முட்டுப் பொருத்துகள் (இஅதடஉசபதவ ஒஞஐசபந) மூலம் இணைக்கப் பெற்றன. இவை இரண்டாவது கட்ட மதில் அரண் சாரத்தில் நிலை நிறுத்தப்பட்டன. செங்குத்தான தூண்களும் நேர் சட்டங்களும் மேடைகளை விரும்பிய விதத்தில் அமைத்துக் கொள்ள

உதவின.

அரண் மதில் உட்சுவரிலிருந்து மேடைகளுக்குக் கற்களையும் சிற்பிகள் மற்றும் ஏனைய தொழிலாளர்களையும் எடுத்துச் செல்ல சாய்வுப் பாதைகள் அமைப்பது இந்த முறையில் எளிதாகவிருந்தது.

மேலே கூறிய அமைப்பு ஒரு சாத்தியக் கூறு. இரண்டாவது கட்ட அரண் மதில் சுவர் சாரத்துக்கு முதல் கட்ட சாய்வுப் பாதைகள் கலைக்கப்பட்டு, அதன் கற்கள் பயன்படுத்தப்பட்டன. விமானக் கட்டுமானப் பணிகள் அனைத்தும் முடிவுற்றதும் சாரங்கள் கலைக்கப்பட்டு, கற்கள், மண், மரம் அனைத்தும் கோயில் மதில் சுவர், மதில் சுவர் உள்புறத்தில் காணப்படும் துணைக் கோயில்கள், நுழைவுவாயில்கள், சாலைகள் அமைப்பது முதலிய கட்டுமானங்களில் எவ்வித சேதாரமுமின்றி முழுமையாகப் பயன்படுத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. !!