Powered By Blogger

28 ஜனவரி 2013

பத்ராசல ராமதாஸர்



கிருஷ்ணதேவராயர் ஆண்ட விஜயநகரப் பேரரசுக்கு உட்பட்ட, கொல்ல கொண்ட பல்லம் என்னும் ஊரில் லிங்கண்ணா, காமாம்பாள் தம்பதியர் வசித்தனர். இவர்களுக்கு தெய்வீகக்குழந்தையாக 1630ல் கோபன்னா பிறந்தார். இவரது இயற்பெயர் கஞ்செர்ல கோபராஜு. இளமையிலேயே ராமாயணக் கதையை விருப்பத்தோடு கேட்பார். இதன் காரணமாக, அவரது பிஞ்சுமனத்தில் ராமபக்தி ஆழமாக வேர் கொண்டது. மகான் கபீர்தாசரிடம் ராமநாம உபதேசம் பெற்று ஜபம் செய்யத் தொடங்கினார். இரவும் பகலும் அவருடைய நாவில் ராமநாமம் ஒலித்தது. தாய்மொழியாம் தெலுங்கிலும், சமஸ்கிருதத்திலும் தேர்ந்த புலமை பெற்றிருந்த கோபன்னா, இறைநாமத்தை சொல்லும் அற்புதக் கவிதைகளை இயற்றினான். இல்லறமே நல்லறம் எனப் பெற்றோர் உபதேசிக்க, கமலம்மா என்ற பெண்ணை மணந்து ஒரு குழந்தைக்குத் தந்தையானார். தம்பதியர் ஒருவருக்கொருவர் பக்தியில் சளைத்தவர்கள் இல்லை என்பதை உணர்த்தும்வகையில் ஒரு நிகழ்ச்சி அவர்கள் வீட்டில் நடந்தது.

மகான் கபீர்தாசர் கோபன்னாவின் கனவில் தோன்றி, ராமநாம உபதேசத்தை அருளினார். அன்று கோபன்னாவின் வாழ்க்கை திசை திரும்பியது. எந்நேரமும் ராமநாமத்தை உச்சரித்து ராமபக்தியில் மூழ்கிப்போனார். ஒருமுறை ஸ்ரீராமநவமியன்று, வீட்டில் விசேஷ பூஜைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பாகவதகோஷ்டியினர் பஜனை செய்து கொண்டிருந்தனர். அடியார்களின் அன்னதானத்திற்காக சமையல்வேலை மும்முரமாக ஒருபுறம் நடந்து கொண்டிருந்தது. பஜனையில் ஈடுபட்டிருந்ததால் கமலம்மா குழந்தையை கவனிக்காமல் விட்டுவிட்டாள். மகன் தவழ்ந்தபடியே அடுப்படிக்குள் நுழைந்து சாதம் வடித்த சுடுகஞ்சியில் விழுந்துவிட்டான். சமையல் ஆட்கள் பதறிப்போய் கமலம்மாவிடம் தெரிவித்தனர். பேச்சு மூச்சில்லாமல் கிடந்த பிள்ளையைக் கண்ட தாய் மனம் துடித்தாள். ஆனால், யாரிடமும் காட்டிக் கொள்ளாமல் மங்கள ஆரத்தியில் கலந்து கொண்டு கண்ணீர் பெருக்கி நின்றாள். பஜனை முடித்த பாகவதர்கள் விருந்துண்ட பின் வீட்டுக்கு புறப்பட்டனர். கோபன்னாவிடம் கமலம்மா நடந்த விஷயத்தைத் தெரிவித்தாள். தம்பதியர் ராமபிரானிடம் முறையிட்டு அழுதனர். அப்போது அங்கே ஒரு அதிசயம் நிகழ்ந்தது. கீரைத்தண்டு போல துவண்டு கிடந்த பிள்ளையின் கண்கள் அசைந்தன. அம்மா என்று மெல்ல அழைத்தான். இருவரும் மகிழ்ச்சிப் பெருக்கில் திளைத்தனர். அன்று முதல் கோபன்னாவின் மனம் ராமபக்தியில் முழுமையாக ஈடுபட்டு விட்டது. ராமன் மட்டுமே இனி நமக்கு கதி என்ற முடிவுக்கு வந்துவிட்டார்.

கோபன்னாவின் தாய்மாமன்கள் அக்கன்னாவும், மாதன்னாவும் ஐதராபாத் அரசர் தானீஷாவிடம் பணியாற்றி வந்தனர். தங்களின் மருமகன் கோபன்னாவிற்கும் சமஸ்தானத்தில் பணியாற்ற ஏற்பாடு செய்தனர். பத்ராசலம் நகரத்தில் வரிவசூலிக்க கோபன்னா நியமிக்கப்பட்டார். அன்பு, நேர்மை, நல்லொழுக்கம் ஆகியவற்றால் மக்களைக் கவர்ந்தவர், நியாயமான முறையில் வரி வசூலித்து அரசு கஜானாவுக்கு வழங்கினார். பத்ராசலத்தில் ராமர் கோயில் இருப்பதை அறிந்த கோபன்னா மகிழ்ச்சி அடைந்தார். காகேதய மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட இக்கோயிலில் புதர் மண்டிக் கிடந்தது. வழிபாடு இல்லாமல் மோசமாக கிடந்த ராமசன்னதியைக் கண்டு வருந்தினார் கோபன்னா. அரசாங்கத்துக்காக வசூலித்த வரிப்பணத்தில் கோயில் வழிபாட்டுக்கு ஏற்பாடு செய்தார். கட்டுமானப்பணியைத் தொடங்கினார். வரிப்பணம் முழுவதையும் ராமர் கோயில் திருப்பணிக்கு செலவிட்டார். ஆறுலட்சம் வராகன் செலவில் கோயிலைக் கட்டியதோடு, பலவிதமான தங்க ஆபரணங்களையும் செய்து கொடுத்தார். கோபன்னாவின் ராமபக்தியைக் கண்ட மக்கள் அவரை ராமதாசர் என்று அழைக்கத் தொடங்கினர். மக்கள் பாராட்டினாலும், வரிப்பணத்தை செலவிட்டால் அரசாங்கம் விடுமா? மன்னர் தானீஷா ராமதாசரை கோல்கொண்டா சிறையில் அடைக்க உத்தரவிட்டார். தாய்மாமனார்களால் ராமதாசருக்கு ஒரு உதவியும் செய்ய முடியவில்லை. தொடர்ந்து பன்னிரண்டு ஆண்டுகள் சிறையில் பல கொடுமைகளுக்கு ஆளானார். அப்போது அவர் பாடிய பாடல்கள் மிகவும் உருக்கமானவை. இனிமேல் இந்த கோரமான அடிகளை என்னால் தாங்கிக் கொள்ள முடியாது. உன்னைக் கும்பிட்ட கைகளை தடி கொண்டு அடிக்கிறார்களே! என்று இவர் பாடிய பாடல்வரிகள் கல்லையும் கரையச் செய்யும் தன்மை கொண்டதாகும். இஷவாகுகுல திலகா என்று தொடங்கும் பாடலில் ராமனுக்காக கோயில் கட்டிய செலவுக் கணக்கைக் கூறி வேதனைப்படுகிறார். ராமா! உனக்கு கிரீடம், ஆபரணம் செய்து அழகு பார்த்தேனே! எனக்கு அளித்ததோ கை விலங்கு அல்லவா! அரசு பணத்தை உனக்காக செலவழித்தேன். அதை நீயே மன்னருக்கு அளித்துவிடு! என்று உள்ளம் உருகி வேண்டுகிறார்.
ஒருநாள் நள்ளிரவில், பாதுஷா தானீஷா பள்ளியறையில் இருந்தபோது ராமலட்சுமணர் இருவரும் ராமதாசரின் சேவகர் போல அவர் முன் வந்தனர். ராமதாசர் செலுத்தவேண்டிய ஆறுலட்சம் வராகன் பணத்தையும் திருப்பி அளித்து மன்னர் கையெழுத்திட்ட ரசீதையும் பெற்று, ராமதாசரின் அருகில் வைத்து விட்டு மறைந்தனர். ராமதாசரோ இப்படி ஒரு அதிசயத்தை நிகழ்த்தியது யாரென்று தெரியாமல் தவித்தார். பின், ராமரும், லட்சுமணரும் ராமதாசரின் சேவகர் போல வந்து பணத்தைத் திருப்பி செலுத்தியதை அறிந்தார். பாதுஷா தானீஷா ராமதாசரை சிறையில் இருந்து விடுவித்ததோடு அவரிடம் மன்னிப்பும் கேட்டார். பத்ராசலம் ராமர் கோயிலுக்கு பல நன்கொடைகளையும் வழங்கினார். இந்த நிகழ்ச்சிக்குப்பின் என் ராமனைக் கண்ட தானீஷாவே என்னும் பொருள்பட பாடிய தன்யுடை தானீஷா நீவு நன்னு கன்னய்யா பதமுலு என்ற அவர் பாடிய பாடல் புகழ்பெற்றது. பத்ராசலம் கோயிலில் தன் இறுதிக் காலத்தைக் கழித்து வந்தார். 1688ம் வருடம் ஸ்ரீராமனின் திருவடியில் கலந்தார். ராமபக்தியில் சிறந்து விளங்கிய தியாகராஜருக்கு முன்னோடியாக வாழ்ந்தவர் ராமதாசர். ராமசந்திர மூர்த்தியின் பரமபக்தனாக விளங்கும் ராமதாஸரைப் போற்றி வணங்குகிறேன் என தியாகராஜர், தனது கீர்த்தனையில் புகழ்ந்து பாடியுள்ளார். ராமபக்திக்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்த ராமதாஸரின் ராமபக்திக்கு ஈடு இணையேது. அவர் பத்ரகிரிமலையில் ஏறியபோது விஷ்ணு தூதர்கள் வந்து வைகுண்டத்திற்கு அழைத்துச் சென்றதாக பத்ராசலம் கோயில் தலவரலாறு கூறுகிறது.