Powered By Blogger

28 ஜனவரி 2013

மரணத்திற்கு பின்னால்

 
 
கட உபநிஷதம் (மரணத்திற்கு பின்னால்) INTRODUCTION:

                 வேதங்கள்: உலகின் பெரும் பகுதி அறியாமை இருளில் மூழ்கி, ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தபோது பாரதத் திருநாடு ஆன்மஒளியில் விழித்தெழுந்தது. அதன் தவப் புதல்வர்களாகிய ரிஷிகள், இருளைக் கடந்து, பொன்னிறத்தில் ஒளிரும் மாபெரும் இறைவனை நான் அறிந்துகொண்டேன். அவரை அறிவதால் மட்டுமே மரணத்தை வெல்ல முடியும். வேறு எந்த வழியும் இல்லை. ( வேதாஹமேதம் புருஷம் மஹாந்தம் ஆதித்யவர்ணம் தமஸ: பரஸ்தாத் தமேவ விதித்வா திம்ருத்யுமேதி நான்ய: பந்தா வித்யதேயனாய- சுவேதாஸ்வதர உபநிஷதம், 3.8) அழியாத அமரத்துவத்தின் குழந்தைகளே, கேளுங்கள் (ச்ருண்வந்து விச்வே அம்ருதஸ்ய புத்ரா சுவேதாஸ்வதர உபநிஷதம், 2.5) என்று பூமியில் வாழ்பவர்களை மட்டுமல்ல, பிற உலகங்களில் வாழ்வோரையும் அறை கூவினர். குறித்து வைக்கப்பட்ட சரித்திரமோ, பாரம்பரியத்தின் மங்கிய வெளிச்சமோகூட ஊடுருவ முடியாத, காலத்தின் அந்த நீண்ட நெடுந்தொலைவில் இந்த உலகை புனிதமாக்கியபடி வாழ்ந்த அந்த ரிஷிகள் அனுபூதியில் கண்ட உண்மைகளின் தொகுப்பே வேதங்கள்.

உலகிலேயே மிகப்பழைய நூல் இந்த சிந்தனைக் கருவூலம்தான். இது எப்போது தோன்றியது என்பது ஒருவருக்கும் தெரியாது. இக்கால ஆராய்ச்சியாளர்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும். இது எட்டாயிரம் அல்லது ஒன்பதாயிரம் வருடங்களுக்கு முன்பு தோன்றியதாக இருக்கலாம்.........ஆனால் அன்று போலவே இன்றும் அவை புதுமை மாறாமல் இருக்கின்றன; ஏன் முன்னைவிட புதுப் பொலிவுடன் திகழ்வதாகவே கூறலாம்.

வேதங்கள் யாராலும் எழுதப்பட்டவை அல்ல. என்றென்றும் நின்று நிலவுகின்ற உண்மைகளின் தொகுப்பே வேதங்கள். புவியீர்ப்பு விதி, அது கண்டறியப்படும் முன்னரே இருந்தது. மனித இனம் முழுவதும் அதை மறந்து விட்டாலும் இருக்கும். அவ்வாறுதான் ஆன்மீக உலகின் விதிகளும்........அவை கண்டு பிடிக்கப்படுவதற்கு முன்னரும் இருந்தன, நாம் அவற்றை மறந்தாலும் இருக்கும் என்று எழுதுகிறார் சுவாமி விவேகானந்தர், ரிஷிகள் அந்த விதிகளை வெளிப்படுத்தினார்கள், அவ்வளவுதான்

அவ்வாறு ரிஷிகள் வெளிப்படுத்திய அந்த உண்மைகள் பின்னாளில் வியாச முனிவரால் நான்காகத் தொகுக்கப்பட்டன. அவை ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்கள். ஒவ்வொரு வேதமும் மூன்று முக்கியப் பிரிவாக பிரிக்கப்படுகின்றன. அவை சம்ஹிதை (பல்வேறு தேவர்களிடம் பிரார்த்தனைகள்) பிராம்மணம் (யாக விவரங்கள்) ஆரண்யகம் (உபநிஷதங்கள்; அறுதி உண்மையைப் பற்றிய ஆராய்ச்சி.)

உபநிஷதங்கள், பிரம்ம சூத்திரம், ஸ்ரீமத் பகவத்கீதை மூன்றும் ப்ரஸ்தான த்ரயம் என்று வழங்கப்படுகின்றன. அறுதிப் பிரமாணமாக அமைந்த மூன்று நூல்கள் என்பது இதன் பொருள்.

வேதகாலச் சிந்தனையின் மணிமகுடமாகத் திகழ்பவை உபநிஷதங்கள். அறுதி உண்மையைப் பற்றிய ஆராய்ச்சியில் மனித மனத்தால் தொடக்கூடிய எல்லையை உபநிஷதங்கள் தொட்டுவிட்டன என்றே உலகின் சிந்தனையாளர்கள் கருதுகின்றனர்.

உபநிஷதங்கள் பல. அவற்றுள் 108 பொதுவாக கணக்கில் கொள்ளப்படுகின்றன. அவற்றில் பதினான்கு உபநிஷதங்கள் முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன. அவை ஈச, கேன, கட, ப்ரச்ன, முண்டக, மாண்டூக்ய, ஐதரேய, தைத்திரீய, சாந்தோக்ய, பிருஹதாரண்யக, சுவேதாஸ்வதர, கவுசீதகி, மஹாநாராயண, மைத்ராயணி உபநிஷதங்கள் ஆகும். இவற்றுள் முதல் பத்து உபநிஷதங்களுக்கு ஸ்ரீசங்கரர் விளக்கவுரை எழுதியுள்ளார், 14 உபநிஷதங்களும் கீழ்க்கண்ட பட்டியலின்படி நான்கு வேதங்களில் அமைந்துள்ளன.

வேதம்-உபநிஷதம்

ரிக்- ஐதரேய, கவுசீதகி

யஜுர்- ஈச, கட, தைத்திரீய, பிருஹதாரண்யக, சுவேதாஸ்வதர, மைத்ராயணீ, மஹாநாராயண

சாம-கேன, சாந்தோக்கிய

அதர்வண- ப்ரச்ன, முண்டக, மாண்டூக்ய

யஜுர் வேதத்தில் சுக்ல யஜுர் தேவம், கிருஷ்ண யஜுர் வேதம் என்று இரண்டு பிரிவுகள் உள்ளன. கிருஷ்ண யஜுர் வேதத்தில் தைத்திரீய ஆரண்யகம் என்ற பகுதியில் கட உபநிஷதம் உள்ளது. கடர் என்ற முனிவர் இதை அருளியதால் கட உபநிஷதம் என்று வழங்கப்படுகிறது.

கட உபநிஷதத்தில் இரண்டு பகுதிகள் உள்ளன. முதற்பகுதியில் மூன்று அத்தியாயங்கள், இரண்டாம் பகுதியில் மூன்று அத்தியாயங்கள். இந்த ஆறு அத்தியாயங்களிலுமாக 119 மந்திரங்கள் ( இன்றைய வழக்கில் மீண்டும் மீண்டும் சொல்லி, அதாவது ஜபித்து உய்வு பெறுவதற்கான ஒன்றே மந்திரம்(மனனாத் த்ராயதே இதி மந்த்ர) என்று கொள்ளப்படுகிறது. ஆனால் வேதப் பாடல்கள் அனைத்துமே மந்திரங்கள் என்றுதான் வழங்கப்படுகின்றன) உள்ளன.

பாரதத்தின் பண்டைய ஆச்சாரியர்களும் சரி, இன்றைய ஆச்சாரியர்களும் சரி கதைகள்மூலம் உயர் உண்மைகளைப் போதிப்பதில் நிகரற்று விளங்குகிறார்கள். அதற்கு முன்னோடியாகத் திகழ்பவை உபநிஷதங்கள். கட உபநிஷதத்திலும், உலகையே வெல்வதற்காக வாஜசிரவஸ் என்ற பணக்காரர் செய்த யாகம் மற்றும் அதைத் தொடர்ந்த நிகழ்ச்சிகளின்மூலம் உண்மை புகட்டப்படுகின்றன.

நசிகேதன் ஒரு சிறுவன், வாஜசிரவஸின் மகன். தந்தை, யாக நியதிகளைச் சரியாகக் கடைபிடிக்கவில்லை என்பதைக் கண்ட அவன் தந்தையின் தவறைச் சுட்டிக்காட்ட முற்பட்டான். அதை வாஜசிரவஸ் விரும்பாததால் அவன் எமதர்மனிடம் செல்ல நேர்ந்தது. எமதர்மனிடம் மூன்று வரங்கள் பெற்றான் அவன். மூன்று வரங்களின்மூலம் இந்த உபநிஷதத்தில் உயர் உண்மைகள் போதிக்கப்படுகின்றன.

பிறப்பும் மரணமும் வாழ்க்கையின் இரண்டு மாபெரும் புதிர்கள். பிறப்பு நம் வாழ்வில் நடந்துவிட்ட ஒன்று; அதைப்பற்றி நாம் ஒன்றும் செய்வதற்கில்லை. மற்றொரு புதிர் மரணம். மரணம் என்றால் என்ன, அப்போது மனிதனுக்கு என்ன நடக்கிறது, அதன்பிறகு அவன் என்ன ஆகிறான் போன்ற கேள்விகளுக்கு விடை காண அன்றிலிருந்து இன்று வரை மனிதன் முயன்று கொண்டிருக்கிறான். சாஸ்திரங்களும் அதனைப் பல்வேறு கோணங்களில் ஆராய்ந்து விளக்கத்தான் செய்துள்ளன. ஆனாலும் மரணம் என்பது இன்றுவரை ஒரு புதிராகவே உள்ளது.

கட உபநிஷதம் தனக்கென்று ஒரு கோணத்தை எடுத்துக்கொண்டு மரணத்தை ஆராய்கிறது. மரணத்தின் போது என்ன நடக்கிறது என்பதைச் சுருக்கமாகவும் தெளிவாகவும் இந்த உபநிஷம் கூறுகிறது(2.2). ஆனால் மரணத்தைப்பற்றி ஆராய்வதைவிட அதை வென்று அறுதி உண்மையை அடைவதே முக்கியம்; நம்மிடம் தரப்பட்டுள்ள வாழ்க்கையை உரிய முறையில் வாழ்வதே அதற்கு வழி என்று சுட்டிக் காட்டுகிறது இந்த உபநிஷதம்(உதாரணமாக 1.1.18)

வித்யைகள்: மனிதன், உலகம், இறைவன் என்பவை மூன்று அடிப்படை உண்மைகள். உபநிஷதங்கள் இந்த மூன்றையும், இவற்றிக்கு இடையே நிலவுகின்ற தொடர்பையும் ஆராய்கின்றன. அறுதி உண்மையாகிய இறைவனை ஒவ்வொரு மனிதனும், ஒவ்வோர் உயிரும் சென்று அடைவதே வாழ்க்கையின் லட்சியம், அதற்கான களமே உலகம். உலகம் தருகின்ற அனுபவங்களைப் பாடமாகக் கொண்டு, உலகில் வாழ்ந்தபடியே அந்த லட்சியத்தை அடையுமாறு உபநிஷதங்கள் வலியுறுத்துகின்றன. இதற்கு ஒவ்வோர் உபநிஷதங்களும் தங்களுக்கென்று சில குறிப்பிட்ட பாதைகளைக் காட்டுகின்றன. இவை வித்யை எனப்படுகின்றன. வித்யைகள் எண்ணற்றவை. ஆனால் தற்போது சுமார் 35 வித்யைகள். இந்த 14 முக்கிய உபநிஷதங்களில் அடையாளம் காணப்பட்டுள்ளன. காலங்கள் பல கடந்து விட்டதாலும், வேறு பல காரணங்களாலும் இந்த வித்யைகளின் செயல்முறையோ சரியான பொருளோ நமக்கு தெரியாமல் போய் விட்டது.

கட உபநிஷதத்தில் இரண்டு வித்யைகள் கூறப்பட்டுள்ளன 1. நசிகேத வித்யை(1.1.14 மற்றும் 1.3.2) 2. அங்குஷ்ட்ட மாத்ர வித்யை(2.1.12 மற்றும் 2.3.17). இந்த இரண்டு வித்யைகளும் இரண்டு படிகள் போல் அமைந்து, இறைவனை உணர்வதற்கான, மரணத்தை வெல்வதற்கான ஒரு பாதையாக விளங்கியிருக்க வேண்டும் என்று ஊகிக்கலாம்.

மொழிபெயர்ப்பு: 1935-இல் கடலங்குடி ஸ்ரீநடேச சாஸ்திரிகள் ஸ்ரீசங்கரரின் விளக்கவுரையைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டார். தற்போது வெளிவருகின்ற இந்த மொழிபெயர்ப்பு, கடஉபநதிஷதத்தை முதன்முதலாகப் படிப்பவர்களை நோக்கமாகக் கொண்டு செய்யப்பட்டுள்ளது. எனவே இரண்டு முக்கியமான விஷயங்கள் இந்த மொழிபெயர்ப்புக்கு அடிப்படையாக வைக்கப்பட்டுள்ளன.

1. தத்துவச் சிக்கல்கள் எதையும் கருத்தில் கொள்ளவில்லை. உதாரணமாக, ஈசுவரன், பிரம்மம் போன்ற வார்த்தைகள் தத்துவரீதியாக பரம்பொருளின் வெவ்வேறு நிலைகளைக் குறிப்பிடுபவை. இருப்பினும் தமிழில் இறைவன் போன்ற பொதுப்பதங்களையே பயன்படுத்தியுள்ளோம். இறைவன் என்ற மாபெரும் சக்தியுடன் நாம் தொடர்பு கொள்கிறோம் என்ற உணர்வுக்கு முதலிடம் கொடுத்து மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது.
2. அதுபோலவே காலம், இடம் போன்ற இலக்கண நியதிகளுக்கும் மொழிபெயர்ப்பில் முக்கிய இடம் அளிக்கவில்லை.

அமைப்பு: ஒவ்வொர் அத்தியாயத்திலும் முதலில் அந்த அத்தியாயத்தின் கரு கூறப்படுகிறது. பிறகு சம்ஸ்கிருத மூலம், தமிழ் வடிவம், வார்த்தைக்கு வார்த்தை பொருள், திரண்ட பொருள் விளக்கம் என்று ரீதியில் நூல் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொர் அத்தியாயத்தின் கடைசியிலும் தரப்பட்டுள்ள சுருக்கம் என்ற பகுதி, விரிவாகப் படித்ததை எளிதாக மனத்தில் வைத்துக்கொள்ள உதவுகிறது. அதே வேளையில் பொருள் குறிப்பு அகராதியாகவும் அதைப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

ஒரு வார்த்தை: உபநிஷதங்கள் ரிஷிகளின் அனுபவ உண்மைகள். வெறும் நூலறிவு கொண்டோ, சம்ஸ்கிருதப் புலமை கொண்டோ அவற்றின் உண்மையான பொருள் அறிந்து கொள்வது சாத்தியம் அல்ல. உண்மையான சாதனை வாழ்வில் ஈடுபட்டு, மனம் தூய்மைபெற்று நாம் இறைவனை நோக்கி முன்னேற முன்னேற இவற்றின் உட்பொருள் மேன்மேலும் ஆழமாக நமக்குப் புரியும். மீண்டும் மீண்டும் படித்து, மந்திரங்களின் பொருளை ஆழமாகச் சிந்தித்து, சாதனைகளிலும் ஈடுபட்டால்தான் உபநிஷதங்களை உண்மையாகப் புரிந்துகொள்ள முடியும்; அவற்றின் அற்புதத்தில் ஆழ்ந்து மனம் மகிழ முடியும். பல மந்திரங்களின் பொருள் சுலபத்தில் அறிந்து கொள்ளத் தக்கதாக இல்லை. பொருள் புரியவில்லை என்பதற்காக சோர்ந்துவிடாமல், புரிந்த மந்திரங்களின் பொருளை ஆழ்ந்து சிந்தித்து சாதனைகளின் உயர்வடைய முயற்சிக்க வேண்டும்.

சாந்தி மந்திரம்: எந்த ஒன்றையும் செய்யும்போது அதற்குரிய மனநிலை இருக்கப் பெறுவது இன்றியமையாதது. எந்தக் காரியத்தைச் செய்கிறோமோ அதற்குரிய மனநிலையை வரவழைத்துக்கொண்டு, அதன்பிறகு அந்தச் செயலில் ஈடுபடுவது சிறப்பான பலனை அளிக்கும். நமது கோயில்களில் பல பிரகாரங்கள் அமைந்திருப்பதன் காரணம் இதுவே. ஒவ்வொரு பிரகாரத்தில் சுற்றி வரும்போதும் மற்ற எண்ணங்களை எல்லாம் விட்டு, கடைசியாக கருவறையில் சென்று தெய்வத்தைத் தரிசிக்கும் போது, நம்மால் முழுமனத்துடன் தெய்வ சிந்தனையில் ஈடுபட முடிகிறது. அதுபோல் அனுபூதிக் கருவூலமான உபநிஷதங்களைப் படிக்கப் புகுமுன் நமது சிந்தனையை அவற்றுடன் இயைபுபடுத்த சாந்தி மந்திரங்கள் உதவுகின்றன.

உபநிஷதங்களின் உண்மைப் பொருளை வெறும் புலமையால் உணர முடியாது. பணிவுடனும் வழிபாட்டு உணர்வுடனும் அணுகும்போது மட்டுமே அதனைப் புரிந்துகொள்ள முடியும். அத்தகைய மனப்பான்மையை மனத்தில் கொள்வதற்காக இந்த மந்திரங்கள் முதலில் ஓதப்படுகின்றன.

கட உபநிஷதத்திற்கான சாந்தி மந்திரம் இது.

ஓம் ஸஹ நாவவது
ஸஹ நௌ புனக்து
ஸஹ வீர்யம் கரவாவஹை
தேஜஸ்வி நாவதீதமஸ்து மா வித்விஷாவஹை
ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி:

ஸஹ நௌ-நம் இருவரையும்; அவது-காப்பாராக; ஸஹ நௌ-நம் இருவரையும்; புனக்து-அனுபவிக்குமாறு ஊக்குவிப்பாராக; ஸஹ-சேர்ந்து; வீர்யம்-ஈடுபாடுமிக்க ஆற்றலுடன்; கரவாவஹை-உழைப்போமாக; அதீதம்-கற்றது; நௌ-நமக்கு; தேஜஸ்வி-பயனுள்ளதாக; அஸ்து-விளங்கட்டும்; மா வித்விஷாவஹை-வெறுக்காமல் இருப்போமாக!

ஆச்சாரியர், சீடர் ஆகிய நம் இருவரையும் இறைவன் காப்பாராக!
அறிவன் ஆற்றலை நாம் இருவரும் அனுபவிக்குமாறு ஊக்குவிப்பாரக!
நாம் இருவரும் ஈடுபாடுமிக்க ஆற்றலுடன் உழைப்போமாக!
கற்றது நமக்குப் பயனுள்ளதாக விளங்கட்டும்!
எதற்காகவும் நாம் ஒருவரையொருவர் வெறுக்காமல் இருப்போமாக!

குறைகளும் தடைகளும் இல்லாமல் உபநிஷதக் கல்வி நிறைவேற இந்த மந்திரம் பிரார்த்திக்கிறது.

வேத மந்திரங்கள் அனைத்தும் இறுதியில் ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி: என்று நிறைவுறுவதைக் காணலாம். சாந்தி: என்றால் அமைதி. மூன்றுவிதமான தடைகளிலிருந்து நாம் விடுபடுவதற்காக மூன்று முறை சொல்லப்படுகிறது. மூன்றுவகைக் தடைகள் வருமாறு.

1. ஆத்யாத்மிகம் : நம்மால் வரும் தடை; உடல் நோய், மனப் பிரச்சனைகள் போன்றவை.
2. ஆதி பவுதிகம் : பிற உயிர்களால் வரும் தடை
3. ஆதி தைவிகம் : இயற்கை சக்திகளால் வரும் தடை; மழை, இடி, தீ போன்றவற்றால் வருபவை.

மூன்றுமுறை சொல்வதன்மூலம் இந்த மூவகை தடைகளிலிருந்து விடுபட்டு, இந்த உபநிஷதத்தைப் படிப்பதற்கான நமது முயற்சி வெற்றி பெறுவதற்காக பிரார்த்திகிறோம்.