Powered By Blogger

18 ஜூன் 2014

திருக்கடவூர் காலசம்ஹாரமூர்த்தி பதிகம் - I

சிவபிரான் உருவ வர்ணனை

சுடர்மணிக் குழையும் மலர்க்கரத்(து) உழையும் தும்பிகள் இடைஇடை நுழையும் தும்பைமா லிகையும் வம்புவார் சடையும் துண்டவெண் பிறையு(ம்)முந் நூலும் நடநபங் கயமும் கிரணகங் கணமும் நங்கைபங்(கு) அமர்ந்தசுந் தரமும் நயன(ம்)மூன்(று) உடைய கோலமும் கண்டோர் நமனையும் காணவல் லவரோ? கொடிபல தொடுத்த நெடியமா மணிப்பொற் கோபுரம் *பாரிடம் தொடுத்துக் கொழுந்துவிட்(டு) எழுந்து வான்நில(வு) எறிப்பக் கொண்டல்வந்(து) உலவியே நிலவும் கடிமலர்த் தடமும் சுருதிஓ திடமும் கன்னிமா மாடமும் சூழ்ந்து கநவளம் சிறந்த ++கடவைஅம் பதியாய்! காலனைக் காய்ந்ததற் பரனே! 1 *பாரிடம் = பூதகணம். ++கடவை = திருக்கடவூர்.

யம பயம் அற

தண்டமும் கயிறும் சூலமும் புகைந்த தழல்உமிழ் கண்களும் வளைந்த தந்தமும் சிவந்த குஞ்சியும் கரிய சயிலமே அனையமே நியுமாய் அண்டிய சமனைக் கண்டுள(ம்) மயங்கி அறி(வு)அழிந்(து) இருவிழி களும்பஞ்(சு) அடைந்துவாய் புலர்ந்து மெய்மந்து திடும்போ(து) அம்பிகை தன்னுடன் வருவாய்! வண்டுகள் முரன்று முகைகுறுக்(கு) உடைந்து மதுமழை பொழிந்துதா(து) அளைந்து மடல்விரிந்(து) அலர்ந்து பொன்நிறம் பொதிந்த மன்றல்அம் கொன்றைவார் சடையாய்! கண்டவர் உளமும் கண்ணுமே கவரும் கநதந வநிதையர் நெருங்கும் கநவளம் சிறந்த கடவைஅம் பதியாய்! காலனைக் காய்ந்ததற் பரனே! 2

சிவன் அருள் மகிமை

தநபதி நிகராய்ச் செல்வமே பெறினும் சதமகன் போகமே பெறினும் தாரணி சுமக்கும் சேடனே நிகராய்த் தக்கதோர் அறி(வு)எலாம் பெறினும் அநங்கனை நிகராய் அழகுதான் பெறினும் அருமறைக் கிழவன்நேர் உறினும் ஐய!நின் கடைக்கண் அருள்தவ றியபேர் அம்கைஓ(டு) ஏந்திநின்(று) உழல்வார்; பநககங் கணத்தாய்! அளப்பரும் குணத்தாய்! பார்வதி வாமபா கத்தாய்! பவளநல் நிறத்தாய்! தவளதூ ளிதத்தாய்! பரிபுரம் அலம்புபொற் பதத்தாய்! கநகமும் துகிரும் தரளமும் வயிரக் கலன்களும் நிலம்தொறு(ம்) மிடைந்த கநவளம் சிறந்த கடவைஅம் பதியாய்! காலனைக் காய்ந்ததற் பரனே! 3

சம்சார துக்கம் அற

தந்தையை மனையை ஒக்கலைத் துணையைத் தாயைமென் குதலைவாய்ச் சேயைத் தனத்தையௌ வநத்தை இன்பமோ கனத்தைத் தையல்நல் லார்பெருந் தனத்தை அந்தியும் பகலும் விரும்பிமெய் சோம்பி ஆழ்கடற் படுதுரும்(பு) ஆகி அலக்கழிந் தேனைப் புலப்படத் திருத்தி ஆட்கொள நினைத்திலாய்! அன்றோ? சிந்தைநைந் துருக இன்னிசை படித்துச் சிலம்(பு)ஒலி ஆரவே நடித்துச் செழும்புனல் சடைமேல் கரந்தையை முடித்துத் திருவெணீ(று) உடல்எலாம் வடித்துக் கந்தைக்கோ வணம்தோல் பொக்கணம் தாங்கிக் கபாலம்ஒன்(று) ஏந்திநின் றவனே! கநவளம் சிறந்த கடவைஅம் பதியாய்! காலனைக் காய்ந்ததற் பரனே! 4

தன் சிறுமை கூறல்

வஞ்சகக் கிணறாய்த் துன்பவா ரிதியாய் வறுமைஎன் பதற்(கு)இருப் பிடமாய் மறம்பொதி குடிலாய் அசத்திய விதையாய் மயல்விளை கழனியாய்ப் பாவ சஞ்சித வடிவாய்ச் *சருச்சரைப் புரமாய் சங்கட நோய்க்களஞ் சியமாய்த் தலதடு மாறித் திரியும்என் தனக்(கு)உன் தண்அளி கிடைக்குமோ? அறியேன்; நஞ்சம்உண் பகுவாய்ச் சுடிகைமுள் எயிற்று நகைமணிப் பாந்தள்+அம் சூழ்ந்த நளிர்இளம் பிறையும் மிளிர்செழுஞ் சடையாய்! நங்கையர் முழுமதி முகத்தைக் கஞ்சமென் மலர்கள் கண்டுவாய் ஒடுங்கும் கந்தம்உந் தியதடம் சூழும் கநவளம் சிறந்த கடவைஅம் பதியாய்! காலனைக் காய்ந்ததற் பரனே! 5 *சருச்சரை = ஒப்புரவு இன்மை. +அம் = நீர்; கங்கை.

பிறவி வேண்டாம்

பிரமனும் சலிக்கத் தாயர்சஞ் சலிக்கப் பேதையர் கண்(டு)அசங் கதிக்கப் பிணிகளும் பகைக்க மூப்புவந்(து) அலைக்கப் பிந்தொடர்ந்(து) ஆசைசென்(று) இழுக்கத் தருமனும் வெறுக்க நரகமும் ஒறுக்கத் தாரணி சுமந்துநொந்(து) இளைக்கச் சக(டு)எனச் சுழலும் கறங்(கு)எனக் கொடிய சடலமே எடுக்கநான் இலக்கோ? +குருமணி இமைக்கும் புதுமலர்த் தடத்தில் கோட்டிள(ம்) ++மோட்டுமோ மேதிக் குலங்கள்போய்ப் படிந்து நலம்கிளர் செழும்தேன் குவளைமென்(று) உழக்கிய தோற்றம் கரியமா கடலில் புகுந்துநீர் அருந்தும் காளமே கங்களோ எனலாய்க் கநவளம் சிறந்த கடவைஅம் பதியாய்! காலனைக் காய்ந்ததற் பரனே! 6 *குறு = நிறம். மணி = முத்து. இமைக்கும் = ஒளிவிடும். ++மோடு = வயிறு.

லோபியைப் புகழாதே!

மறுகுவெம் சினத்தர் *தெறும்அவ குணத்தர் வஞ்சகம் பொதிந்தநெஞ் சகத்தர் வழக்கம்ஒன்(று) இல்லாப் பழக்கரும் மூடர் மதிஇலாப் பதிதர்பால் அணுகிப் பொறுமையில் தருமன் நெறியினில் சேடன் புலமையில் குறியமா முனிவன் புரந்தரன் எனவும் நிரந்தரம் புகழ்ந்து பொழு(து)அவம் போக்கினன்; அந்தோ! வெறிமலர்ப் புரசம் சொரிந்துவண்(டு) இனங்கள் மிடைந்துமா முகிலினைக் கிழித்து மேல்இடத்(து) இரவிப் பசும்புர விகளாய் விளங்கியே விண்தல முகட்டைக் கறுவிநின்(று) ஓங்கிச் செறியும்ஐந் தருவுள் கற்பகத் தருவினை ஒப்பாய்! கநவளம் சிறந்த கடவைஅம் பதியாய்! காலனைக் காய்ந்ததற் பரனே! 7 *தெறும் = தண்டம் செய்யும்; கொல்லும்.

பக்தி பூஜை

நெஞ்சகம் குழைந்து பணிவிடைக்(கு) இசைந்து நீறொடு கண்டிகை புனைந்து நிலவுபொற் கோயில் அதைவலம் புரிந்து நெகிழு(ம்)முன் நாள்மலய் எடுத்து வஞ்சமா மயக்கில் மயங்கும்ஐம் புலனாம் மாற்றலர் வலிமையைக் கவர்ந்(து)உன் மலர்ப்பதத்(து) இருத்தி அலக்கணைத் துரத்தி மதிமிகு வாழ்வளித் திடும்"ஓம் ஜும் ஸ:"* எனும்நல் தூயமூன்(று) எழுத்தை சுகிதமாய்க் கொண்(டு)அருச் சனைசெய் தொண்டர்கள் உறவைக் கொண்டுனைப் பணியச் +சுணக்கனாம் எனக்(கு)அருள் புரிவாய்! கஞ்ஜமென் மலய்மீ(து) அஞ்ஜ(ம்)மெய் பசக்கக் கார்மயில் ++ஒகரமாய் நடிக்கும் கநவளம் சிறந்த கடவைஅம் பதியாய்! காலனைக் காய்ந்ததற் பரனே! 8 *'ஓம் ஜும் ஸ:' = இது, 'ம்ருத்யுஞ்ஜய' மந்திரம். +சுணக்கன் = நாய் போல் திரிகின்றவன்; நீசன். ++'ஓ' கரம் ஆய் = 'ஓ' என்னும் எழுத்துப் போல் (தோகை விரித்து)

பரத்தையர் பாசம் அற

மைக்கயல் விழியால் மயக்கிஉள் உருக்கி மஞ்சளால் முகத்தினை மினுக்கி மணிநகை பெருக்கி ஆசைஉண் டாக்கி வளர்இள முலைத்துகில் இறுக்கிப் பக்கல்வந்(து) அமர்ந்து மென்மொழி பகர்ந்து பரவசம் போலமேல் வுழுந்து படி(று)உளம் உணர்ந்தே அசத்தியம் உரைத்துப் பறித்திடக் குறித்தபா வையர்க்காய்த் துக்கசா கரத்தில் அழுந்திநாள் தோறும் தோதகப் பட்டபா தகனைத் துய்யசெங் கமலச் செய்யதாள் இணைக்கே தொண்டுகொண் டால்குறை உறுமோ? கைக்கழங் காடும் திறத்தினை நிகராய்க் கமலமென் மலர்மிசை அறுகாற் களிபாளி சுழலும் கடவைஅம் பதியாய்! காலனைக் காய்ந்ததற் பரனே! 9

சிவ மானச பூஜை

செயல்பணி விடையாய்ச் செப்பல்ஐந் தெழுத்தாய்த் திரிதலே வலம்புரி தலுமாய்ச் சிந்தையின் நினைவே தியானமாய், உண்டு தெவிட்டல்நி வேதனச் சிறப்பாய்த் துயிறல்வந் தனையாய்த் திருவுளத்(து) உவந்து துள்ளுவெள் விடையின்மேல் ஏறித் தொண்டரும் விசும்பில் அண்டரும் காணத் தோகையோ(டு) எனக்குவந்(து) அருள்வாய்! வயல்வரம்(பு) உறைந்த கடைசியர் முகத்தை மதியம்என்(று) அதிசய(ம்) மிகுந்து வரும்பகல் இடத்தும் இரவினும் குவளை வாய்ஒடுங் காமலே விளங்கும் கயல்நெடுந் தடமும் கமுகமும் கமுகைக் காட்டிய கன்னலும் பொதிந்த கநவளம் சிறந்த கடவைஅம் பதியாய்! காலனைக் காய்ந்ததற் பரனே! 10